Friday, September 25, 2020

பாலு சார்

 A Buhari



பாலு சார்

செவிகளை மட்டும் 

திறந்துகொண்டு

செவ்வாய்க் கோளுக்கும் 

சென்றுவிடலாமே 

பாலு சார்

உங்கள் 

குரலேற்றிச் செல்லாத

பொன்வானம் ஏது

பாலு சார்

O

பாட்டை மட்டும்தானே

பாடவேண்டும் 

பாலு சார்

பாட்டுக்குள் எப்படி

பயாஸ்கோப்பையே 

காட்டினீர்கள்

பாலு சார்

O

முரட்டுச் சொற்களையும்

நாவடியில் வழுக்கிச் செல்லும் 

அல்வாச் சொற்களாக்கிய

பாலு சார்

மெல்லிசைக்குப்  

புதுப்பொருள் தந்து

வல்லினச் சொற்களையும்

மெல்லினமாக்கியதெப்படி 

பாலு சார்

O

ஏதேனும் ஒரு பாடலை

எடுத்துப் போடலாம் என்று

தேடினேன் பாலு சார்

எல்லாப் பாடல்களுமே

என்னை விட்டுவிட முடியுமா

என்று கேட்கின்றன

பாலு சார்

O

காற்றுக்கு

வைர வைடூரிய 

ஆபரணங்கள் அணிவித்த 

பாலு சார்

பாதி வழியில்

உதிர்ந்து உடைந்த 

முத்துமணி ஆனதேன்

பாலு சார்

O

இறந்தபின் உயிர்கள் 

எங்கே போகுமோ

போகட்டும் பாலு சார்

ஆனால் 

உங்கள் உயிர் மட்டும்

எங்களோடுதான் 

சந்தனக் காற்றாக

பாலு சார்

அன்புடன் புகாரி

25 செப்டம்பர் 2020



 A Buhari

No comments: