Monday, July 24, 2017

தந்தை மளிகைக்கடையில் - மகள்கள் மருத்துவத்துறையில்

 
சமீபத்தில் வெளியான  +2 தேர்வு முடிவுகளில் சமூகவலைதளங்களும் பரபரப்பாகின. தத்தம் உறவுகள் எடுத்த மதிப்பெண்களை பதிவிட்டு உற்சாகத்தை வெளிபடுத்தும் சமயத்தில் நமக்கு அறிமுகமானார் 1192 மதிப்பெண் எடுத்த ரிஹானா பாத்திமா.




ரிஹானா, கம்பம் பகுதியை சார்ந்தவர். தந்தை இஷாக் மளிகைக்கடை நடத்திவருகிறார்.  அவரிடம் முதலில் பேசினோம்.



"எங்கத்தா படிச்சது 4வது வரை, நான் பத்தாவது வரை படிச்சிருக்கேன், என் மனைவி பிஏ படிச்சிருக்காங்க, மளிகைக்கடை நடத்திட்டு வரேன். மூத்தப்பொண்ணு நல்லா படிச்சுச்சு.   கட்ஆப் மார்க் வச்சு  மதுரை மெடிக்கல் காலேஜ்ல படிச்சுட்டிருக்காங்க, 2வது பொண்ணுதான் ரிஹானா.   கம்பத்துல தான் முதல்ல படிச்சுச்சு. நல்ல மார்க் எடுத்துட்டிருந்தாங்க,  அக்கா மாதிரியே தங்கச்சியையும் மெடிக்கல் காலேஜ்ல சேர்த்துடணும்னு தான் ஆசை எனக்கு, அதனால நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடுல தரமான ஸ்கூல்ல சேர்த்துவிட்டேன். வித்யா விகாஸ்ல படிச்சாங்க. 1192 மார்க் எடுத்திருக்காங்க, நீட் எக்சாம் எழுதியிருக்காங்க" என வரிசையாய் எல்லாம் விவரித்தார்.
ரிஹானா பற்றி பேசத்தான் வந்தோம். ஆனால் ரிஹானாக்கு முன்பே ஒரு மருத்துவரை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது அறிந்து ஆச்சர்யப்பட்டோம்.  மீண்டும் தொடர்ந்தார்
"மூத்தப்பொண்ணு உம்மு ரீஷ்மன்  நல்லா படிச்சுச்சு, இன்னும் 20 மார்க் வாங்கினாங்கன்னா மெடிக்கல் கட்ஆப் கிடைக்கும்னு என் மனைவியின் உறவினர் என்னிடம் சொல்லி  மூத்தப்பெண்ணை வேறு ஸ்கூலில் சேர்க்க வலியுறுத்தினார். அப்போது எனக்கு கட்ஆப் ன்னா என்னன்னு தெரியாது, சரி இப்படி சொல்றாங்களேன்னு நானும்  முயற்சி பண்ணி சேர்த்தேன். +2 தேர்வில் நாமக்கல் மாவட்டத்தில் முதல் மாணவியாக வந்தாங்க. இப்போது மதுரையில் தங்கி படிக்கிறாங்க".
லகரங்கள் கொட்டினால் தான்  மருத்துவராக முடியும் என்ற கோட்பாட்டை உடைத்தெறிந்த  இரு மாணவிகளும்  தன் மேற்படிப்புக்காக முதலீடு செய்ததெல்லாம்  படிப்பை  மட்டுமே.

ரிஹானாவிடம் பேசினோம்,  மதிப்பெண்ணுக்கும் அறிவுக்கும் சம்மந்தமேயில்லை என்பது உண்மையோ இல்லையோ,  ஆனால் ரிஹானா  தன் மதிபெண்களைப்போலவே மிக மதிநுட்பமான பெண்ணாய் பேசினார்.  

எந்த ஸ்கூல்ல படிச்சீங்க, வருங்கால லட்சியம் என்ன போன்ற சம்பிரதாய  கேள்விகளுக்கு வேலை இல்லை. அதைவிடவும் வாயடைக்கும் விதமாய் நிறைய  பேசினார்.

நீட் எக்சாம்  தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பெரிய பாதிப்பு தான் இல்லையா?
தேர்வு கஷ்டம் தான். இறுதி நேரத்தில் சொன்னதால் முன்னேற்பாடுகள் இல்லாமல் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். ஆனா அடுத்த வருஷம் கண்டிப்பா நம்ம மாணவர்கள்  ஈசியா இந்த தேர்வை எதிர்கொள்வார்கள்.
நீட் எக்சாம் எப்படி எழுதுனீங்க?
நீட் தேர்வுக்காக  அத்தா தனியாக கோச்சிங் க்ளாஸ் அனுப்பினாங்க.  நல்லா எழுதியிருக்கேன். ஆனால் தேர்ச்சியாக அது போதாது.
என்ன இப்படி சொல்றீங்க ? அக்காவை மாதிரி டாக்டராவது தான் உங்களின் லட்சியமும் கூட, ஆனால் மார்க் இத்தனை வாங்கியும் அக்காப்போல் எளிதாக   மெடிக்கல் சீட் கிடைக்காது போலையே? ரொம்ப மெனக்கெடவேண்டி இருக்குமோ?
இந்த பயிற்சியில் கலந்துகொண்ட எல்லா மாணவர்களும் நான் எதிர்பார்க்கும் மார்க் அளவில் தான் எடுத்திருக்க முடியும் என சொல்கிறார்கள்.  அந்தளவுக்கு சவாலான விஷயமாக தான் தேர்வு இருந்தது. எனினும் நான் விடப்போவதில்லை. ஒரு வருசம் தீவிரமாய் பயிற்சி எடுத்து அடுத்த வருடம் நீட் எக்சாம் எழுதி எப்படியும்  மெடிக்கல் பீல்ட்ல அத்தாவின் ஆசையை நிறைவேற்றுவேன்.
நீட்டை நீங்க விடப்போறதா இல்லை, பாராட்டுக்கள்.   உங்க ஊர் கம்பம் என்றாலும்,  திருச்செங்கோடுல படிச்சிருக்கீங்க. நாமக்கல் கல்வி வட்டாரம்  படிப்பு விஷயத்தில் மாணவர்களை ரொம்ப அழுத்தங்களுக்குள்ளாக்கும்   அம்சம் தானே?
கம்பத்துல படிச்சுட்டிருக்கும் போதே என் மார்க் பார்த்துட்டு அத்தா, அதை விடவும் தரமான ஸ்கூலில் சேர்க்க ஆசைப்பட்டாங்க. நாமக்கல் கல்வி முறை பற்றி எனக்கு நல்லாவே தெரியும். என்னால் மார்க் அதிகம் வாங்க முடியும் எனும்போது அவர்கள் கொடுக்கும் அழுத்தங்கள் எனக்கு பொருட்டே அல்ல என மனதளவில் முதலில் என்னை தயார்படுத்திக்கிட்டேன்.  ஆனால் அங்கே சென்ற பின் அப்படி எதுவும் எனக்கு தோன்றவில்லை. நல்ல மார்க் எடுக்கணும்னுதான் இந்த ஸ்கூலில் சேர்த்துவிடுறாங்க, நல்ல மார்க் எடுக்க முடியாதவங்களுக்கு ஸ்கூல் நடைமுறைகள் கஷ்ட்டமாகத்தான் இருக்கும். நான் எந்த அழுத்தமும் எதிர்கொண்டதில்லை.
ரொம்ப தெளிவா பேசுறீங்க,  என்னதான்  நம் குடும்ப சூழல் காரணமாக நாம்  கட்டுகோப்பாய் இருந்தாலும்  ஹாஸ்ட்டல் முறை என வரும்போது பல வழிகளில் மாணவ மாணவிகளின் வாழ்க்கை சூழல் மாறிடுதே?
சேர்க்கும் போதே தரமான ஸ்கூலில் சேர்ப்பதுடன், தரமான நிர்வாக முறை கொண்ட ஹாஸ்ட்டலில் தேடி சேர்ப்பதும் பெற்றோரின் கடமை தான்.   எத்தனையோ ஸ்கூல் இருந்தும் கூட  வெளியூரில் தங்கி படிப்பதால் பெண்கள் தனியே படிக்கும் வித்யாவிகாஸ்-ல் சேர்க்க நினைத்தது மட்டுமல்லாமல், அதிலும் சரியான ஹாஸ்ட்டலை தரம் பிரிச்சு தந்தார்கள் என் பெற்றோர்கள்.   இறையச்சமும், பெற்றோர்களின்  அறிவார்ந்த இடத்தேர்வும் இருந்தால் எந்த மாணவ மாணவிகளும்  தடம் மாறமாட்டாங்க. ஏனோதானோன்னு பிள்ளை வளர்த்து கடமைக்கு வெளியூர் ஸ்கூலில் படிக்க வச்சா நீங்க சொன்ன  சூழல் நிலவலாம்.
மாஷா அல்லாஹ், படிப்பு விஷயத்தில் உங்கள் பெற்றோர்களின் முயற்சி ரொம்பவே மகிழ்ச்சி தருகிறது. அது மற்ற  பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்களுக்கும் முன்னுதாரணம். ஆனாலும் அவர்கள் புறக்காரணிகளால் அதாவது உறவினர்கள் நண்பர்கள் ஆகியவற்றால் குழம்பியிருக்கக்கூடும் தானே?

ஆமாம்.  சொந்தக்காரங்க சொல்லத்தான் செஞ்சாங்க "பொம்பளப்புள்ளையை ஏன் இவ்வளவு தூரம் அனுப்பி படிக்க வைக்கிற. ஊர்லையே நல்ல ஸ்கூலில் படிக்க வைக்கலாமே"ன்னு. அத்தா யோசிக்கத்தான் செஞ்சாங்க, என்றாலும் எங்கள் கல்வி மேம்பாட்டில் அவருக்கு அக்கறை இருந்தது,  எங்கள் கல்வி வீணாகி விடக்கூடாது என்ற வருத்தமும் இருந்தது. தேடி தேடி நல்ல ஸ்கூல் தேர்ந்தெடுத்து தந்தாங்க.  அதிகம் படிப்பறிவு இல்லாத நிலையில் எங்கள் மேல்படிப்புக்கு என்ன விஷயங்கள் செய்யணும்னு தேடி தேடி ஒவ்வொருவரிடமும் விசாரிச்சாங்க. வெளியூர்க்கு புள்ளையை படிக்க அனுப்பினாலே ஒழுக்கம் விஷயத்தில் கெட்டுப்போய்டுவாங்க என்ற அழுத்தங்களையும் தாண்டி எங்களை அவங்க நம்பினாங்க. அதுக்கு அவங்க வளர்ப்பு முறையில்  வைத்திருந்த நம்பிக்கையாகவும் இருக்கலாம்.
நம் சமுதாயப் பெண்கள் இப்போது  அதிகம்  கல்வி விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள். உங்கள் பார்வையில் எப்படி தெரிகிறது?
இன்னும் மாற்றம் வரணும். நல்ல மதிப்பெண் பெற்றும் பிள்ளைகளின் படிப்பை பாதியிலேயே  நிறுத்திவிடக்கூடிய பெற்றோர்கள்  இன்னும் இருக்காங்க.   அடுத்து என்ன படிக்கலாம்னு தெரியாம கூட பலர் இருக்காங்க.   என்னை பொறுத்தவரைக்கும் இந்த விழிப்புணர்வு போதாது.
நல்லமாற்றம் கிடைக்கணும்னா என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க?
பெண்களுக்கு கல்வியை கட்டாயமாக்குவதோடல்லாமல் உயர்கல்விக்கும் அவங்களை தயார்ப்படுத்தனும். நிறைய பெற்றோர்கள் தயங்குவதே நம்ம புள்ளையை யாரும் தப்பா பேசிடுவாங்களோ என்பதற்காகத்தான். இந்த எண்ணம்லாம் அகலணும்.   என் அம்மா பிஏ படிச்சாங்க, அதனால்   அத்தாவுக்கும் புரியவச்சு எங்களை இந்த நிலையில் நிறுத்தியிருக்காங்க. நானும் அக்காவும் எல்கேஜில இருந்து எந்த டியூசனும் போனதில்லை, அம்மாவே எங்களுக்குச் சொல்லி கொடுப்பாங்க. அதுவே எங்களுக்கு போதுமானதாக இருந்துச்சு.  அவங்க படிச்சதுனால தான் தன் பிள்ளைகளுக்கு வழிகாட்ட முடிஞ்சது. அதே போல், நம் சமுதாய மக்கள் தம் பெண்மக்களை  அதிக கல்வி கொடுக்க முன்வரணும், இவங்களை பார்த்து மற்ற பெற்றோர்களும் தம் பெண் பிள்ளையை தைரியமாக படிக்க வைப்பார்கள். இது தொடர் நிகழ்வாகும்போது நம்  சமுதாயமும் கல்வியில் மேன்மையான இடத்தை அடையும்.
ரொம்ப அருமையா பேசுனீங்க ரிஹானா.  ஹிஜாப் பேணி சாதனை படைக்க எந்நாளும் எங்கள் பிரார்த்தனையில் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் இடம்பிடிப்பீர்கள்.  தனக்கு மட்டும் பெருமை சேர்க்கும் மகள்களாக அல்லாமல் சமுதாயத்திற்கும் பயன்தரக்கூடிய குழந்தைகளாக உங்களையும்  உங்கள் அக்காவையும் வளர்த்துக் கொண்டு வந்துள்ள  உங்கள் பெற்றோர்கள் நம் சமுதாயத்தின் மற்ற பெண்களுக்கும் உங்களை முன்மாதிரியாக்கியிருக்கிறார்கள். நீங்கள் சொன்னது போலவே  நிச்சயம் உங்களைப் பார்த்து, பல பெற்றோர்களுக்கும் தம் மகளை உயர்கல்விக்கு  அனுப்பும் ஆசை இப்போது அதிகரிக்கும். மென்மேலும் பல சாதனைகள் படைத்திட வாழ்த்துகள். உங்களின் ஒவ்வொரு  சாதனைக்கு பின்னும், உங்கள் சாதனையை எங்கள் இஸ்லாமியப்பெண்மணி.காம்மில் பதிந்திடவும் மறக்காதீர்கள்.

ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி
________________________________

மிக அழகிய உரையாடலாக அமைந்தது ரிஹானாவுடன் பேசியது. பல இடங்களில் ஆச்சர்யப்படுத்தவும் செய்தார்கள். அவருடனும் அவர் தந்தையுடனும் பேசியதில்  உள்வாங்கக்கூடிய ஆழமான விஷயமும் இருந்தது. அதிலொன்று, உங்கள் வீட்டுக் குழந்தைகள் அதிக மதிப்பெண் பெறக்கூடியவர்களாக இருக்கலாம், அதை கொண்டு திருப்திப்பட்டுக்கொள்வதை விடுத்து  அவர்களின் அறிவுக்கும் தகுதிக்கும் தகுந்தபடி  களத்தை உருவாக்கிக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் சொல்லாமல் சொன்னார்கள்.

ஒரு அழகிய  ஹதீஸ்ஸுடன் நிறைவுக்கு வருவோம் ,

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், யார் இரு பெண் குழந்தைகளை அவர்கள் பருவ வயது அடைகிற வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ, அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம் என்று சொல்லி தமது இரு விரல்களையும் இணைத்து காட்டினார்கள் (முஸ்லிம் 5127)


பேட்டியும் ஆக்கமும்,
ஆமினா முஹம்மத்
-----------------------------------------------

நன்றி :
அறிமுகம்  செய்தவர் - சகோதரர் இத்ரிஸ் :
Source http://www.islamiyapenmani.com

No comments: