Monday, July 3, 2017

பலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி - 4

Saif Saif
அன்றைய நபி தோழர்களில் அபூபக்கர்(ரலி) அவர்களும் நான்கு திருமணம் செய்திருந்தார்கள்..
உமர்(ரலி) அவர்கள் மூன்று திருமணங்கள் செய்திருந்தார்கள்..
உஸ்மான்(ரலி) அவர்களும்
இரு திருமணங்கள் செய்திருந்தார்கள்..
அறியாமை கால மக்களை திருத்துவது சாதாரணமான விஷயமாக நபிக்கு இருக்கவில்லை..
நபி(ஸல்) எவ்வளவு சிரமங்களை சுமந்தார்கள்.வேதனைகளை பட்டார்கள்..சொல்ல தகுமல்ல..

சில சம்பவங்களை இறைவன் நபி வாழ்க்கையிலேயே நடத்தி காட்டினான்..
அதில் ஒன்று நபியின் வளர்ப்பு மகன் ஸைத்தின் மனைவி ஜைனபு(ரலி)யை மணந்து கொண்ட நிகழ்வு..
இன்றளவும் மாற்றார்களால் விமர்ச்சிக்கப்படும் ஒரு திருமண நிகழ்வாக
இந்நிகழ்வு இருந்தாலும் எந்த நோக்கத்திற்காக அது நடத்தப்ப பட்டது என்பதை புரிந்துக் கொண்டாலே விமர்சனங்கள் உடைந்து போய் விடும்..
அக்காலத்தில் வளர்ப்பு பிள்ளைகளை தங்கள் பிள்ளைகள் போல வளர்த்து வந்தார்கள்..
ஜைத் என்பவர் கதீஜா(ரலி) அவர்களால் விலைக்கு வாங்கப் பட்டு வளர்க்கப் பட்டவர்..அன்னையின் காலத்திற்கு பிறகு நபிகளாலேயே வளர்க்கப் பட்டவர்கள்...
நபிகள் தன் தந்தையின் சகோதரி உமைமா என்பவரது மகளை அதாவது தன் மாமி மகள் ஜைனபை தான் இவருக்கு மணமுடித்து வைத்தார்கள்..
ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையவில்லை..
இதனால் பல தடவை ஜைத் அவர்கள் ஜைனப் அவர்களை விவாகரத்து செய்ய
விரும்பியும் நபியவர்கள் சம்மதிக்கவில்லை..
ஜைத் அவர்கள் தன் மனைவியை விவாகரத்துச் செய்து விட்டால் அவரை தானே மணக்க நேரிடும் என்பதை இறைவன் அறிவிப்பு மூலம் நபி(ஸல்) அறிந்திருந்தார்கள்..
இதனால் ஜைனப் அவர்களை ஜைது தலாக் செய்வதாக ஆலோசனை கேட்ட போதெல்லாம் நபிகள் வேண்டாம் என மறுத்தார்கள்..
அதற்கு காரணமும் இருக்கிறது..ஜைத் மணவிலக்கு கொடுத்தால் அவரை தான் மணக்க வேண்டி வந்தால் நிராகரிப்பாளர்கள் தன்னை பழிப்பார்கள்..நயவஞ்சகர்கள்,
யூதர்கள் தன் மீது தவறான குற்றச் சாட்டுகளை சுமத்துவார்கள்..இதனால் பலகீனமான முஸ்லீம்கள் மனதில் கூட ஊசலாட்டங்கள் நிகழலாம்.
இதையறிந்து தான் நபி(ஸல்) அவர்கள் பயந்தார்கள்..
இந்த நிலைமையில் தான் இறைவனின் வேதவசனம் வருகிறது..
(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; (33:37)
என்று எச்சரிக்கையாக கூறிய இறைவன் இத்திருமணத்தை நபியவர்களின் விருப்பத்திற்கு விடாமல் தானே அவர்களுக்கு மணமுடித்து வைத்ததாகவும் கூறுகிறான்
'ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.
(33:37)
இவர் தான் எனக்கு தந்தையாக தகுதியானவர் என்று
யாரும் தீர்மானிக்க முடியாது..அதுபோல இவர் தான் என் தங்கையாக, தம்பியாக இருக்க வேண்டும் என்று
யாரும் விரும்பவும் முடியாது..
இறைவன் தான் தீர்மானிக்க வேண்டும்..
முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார் மேலும் அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன்(33:40)
(எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்(33:5)
ஆக இறைதூதரின் இத்திருமணத்தின் மூலமாக வளர்ப்பு மகன் என்பது இஸ்லாத்தில் கிடையவே கிடையாது என்பதை இறைவன் அதிகாரப் பூர்வமாக தெளிவு படுத்தினான்..
இப்படி பல ஆதாரங்கள சொன்னாலும் நம்பாமல் நபியவர்கள் வேண்டும் என்றே அவரை மணவிலக்கு கொடுக்க வைத்து ஜைனப் அவர்களை மணந்துக் கொண்டார்கள் என விமர்ச்சிப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்..
நபியவர்கள் தான் ஜைனப் அவர்களை ஜைத்துக்கு மணமுடித்து வைக்கிறார்கள்..அவர்கள் நினைத்திருத்தால் தானே அவர்களை மணமுடித்திருக்கலாம்..ஜைத் அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்து பிறகு அவர் விவாகரத்துச் செய்து மணமுடிக்க வேண்டிய அவசியமேயில்லையே..!?
மேலும், இச் சம்பவங்களுக்கு பிறகு ஸைத் அவர்களும் இரு திருமணங்கள் செய்து
அந்த வாழ்க்கையும்
சரியாக அமையாமல்
அவர்களையும் தலாக் செய்து விட்டார்கள்..என்பதாக வரலாறுகளில் பார்க்கிறோம்.
இது போல ,
நபி(ஸல்) அவர்கள் தனது மருமகன் அலி(ரலி)அவர்கள் இரண்டாவது திருமணம் செய்யும் போது தடுத்து விட்டார்கள் என்று விமர்சிப்பவர்களும் உண்டு..
அதற்கு பின்வரும் ஹதீஸ் போதுமான விளக்கமாகும்..
(மார்க்கத்தில்) அனுமதிக்கப்பட்ட ஒன்றை நான் தடை செய்யக் கூடியவன் அல்லன்; தடை செய்யப்பட்ட ஒன்றை அனுமதிப்பவனும் அல்லன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரின் மகளும், அல்லாஹ்வின் விரோதியின் மகளும் (ஒரு கணவனோடு மணபந்தத்தில்) ஒன்று சேர முடியாது" என்று கூறினார்கள்
(அறிவிப்பாளர்: அலீ இப்னு ஹுஸைன் (ரஹ்) நூல்கள்: புகாரி 3110, முஸ்லிம் 4841, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்).
அலி அவர்கள் அபூ ஜஹ்லின் மகள் ஜுவைரியாவை மணம் செய்ய விரும்பியதால் தான் நபிகள் மறுத்தார்கள் என்பது தான் மேற் கண்ட ஹதீஸின் மூலம் விளங்கும் உண்மை..
அல்லாஹ்வின் சாபத்திற்குள்ளான அபூலஹபுக்கு நிகரான இஸ்லாமிய விரோதியாவான் அபூஜஹல். இறை இல்லமான கஅபாவில் சிரவணக்கத்தில் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முதுகில் ஒட்டகக் குடலைக் கொண்டுவந்து போடுமாறு உத்பாவுக்குக் கட்டளை இட்டவன்; இறையில்லத்தை வலம்வர முஸ்லிம்களுக்குத் தடைவிதித்தவன்; நபியவர்களைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியவன்; நபி (ஸல்) அவர்களின் சத்திய அழைப்பிற்குத் தொடக்கத்திலிருந்து - பத்ருப் போரில் கொல்லப்பட்டு சாகும்வரை - இடையூறாக இருந்தவன் அல்லாஹ்வின் விரோதி அபூஜஹல்.
அதனால் தான் இறைத்தூதரின் மகளும், இறை எதிரியின் மகளும் ஒரேகாலத்தில் அலீ (ரலி)யின் மனைவிகளா? "அபதன் – ஒருக்காலும் முடியாது" என ஆட்சேபித்தார்கள் நபி (ஸல்).
மேலும் அலி அவர்கள் தன் மகள் பாத்திமாவை தலாக் செய்து விட்டு ஜுவைரியாவை மணந்துக் கொள்ளட்டும்..என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.. (அறிவிப்பாளர்: மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) நூல்கள்: புகாரி 5230, முஸ்லிம் 4839, திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்).
ஒரேடியாக மறுக்கவில்லை என்பது தான் உண்மை..
ஆக தன் மகள் பாத்திமாவை மணமுடித்ததால் தான் அலி அவர்களை இன்னொரு திருமணம் செய்ய தடை செய்தார்கள் என்பது உண்மையல்ல..உண்மையான காரணம் என்ன என்பதையும் விளங்கி இருப்பீர்கள்..
வரலாறுகளை முழுமையாக தெரிந்து கொண்டால் இது போன்ற தேவையில்லாத கேள்விகளை தவிர்க்கலாம்..
#இன்ஷா அல்லாஹ் தொடரலாம்..


Saif Saif

No comments: