Saturday, May 16, 2020

தோசை


அப்துல்கையூம்


தோசை என்ற பெயர் ஏன் வந்தது?

வடநாட்டவர் ஒருவர் சொன்ன கதை இது. தோசைக்கல்லில் மாவை ஊற்றியதும் “சை” என்று ஒரு சப்தம் வருமல்லவா?. இந்தியில் சொன்னா அது “ஏக்… சை”. இரண்டாவது முறை அதை சட்டுவத்தால் திருப்பிப் போடும்போது மற்றொரு சவுண்டு “சை” என்று வரும். அது “தோ.. சை” (அதாவது இரண்டுமுறை “சை” என்ற சப்தம்). அதனால்தான் தோசை என்ற பெயர் வந்ததாம்.

இப்படித்தான் ஒரு கதையை அவிழ்த்துவிட்டு என் காதில் அவர் பூ சுற்றினார். இந்தக் கதையை சொல்வதற்கு குறிப்பாக என்னை ஏன் அவர் தேர்ந்தெடுத்தார் என்று எனக்குப் புரியவில்லை. என்னைப் பார்த்தால் தொட்டபெட்டா மலையிலிருந்து போர்வை போர்த்திக்கொண்டு வந்தவன் போல தெரிந்ததோ என்னவோ?


தமிழர்களாகிய நமக்கு அம்ரீஷ்பூரி அதாவது வில்லன் யார் என்று சொன்னால் இந்த உடுப்பிகாரர்கள்தான். இந்த உடுப்பிகாரர்களால்தான் நான் செம கடுப்பில் இருக்கிறேன். ஏன் கேக்குறீங்க.? இந்த தோசையைக் கண்டுபிடித்த கலீலியோவும் அவிங்கதானாம். சாம்பாரைக் கண்டுபிடித்த கொலம்பஸும் அவிங்கதானாம், இது டூ மச் மாத்திரமல்ல. த்ரீ மச்-ங்குறேன்

மோஸஸை முஸ்லீம்கள் மூஸா என்று அழைப்பது போல் தோசையை வடநாட்டவர் தோஸா என்று செல்லமாக அழைக்கிறார்கள். காசா பணமா? எப்படியாவது அழைச்சிட்டு போகட்டும்,

ஒருமுறை சிம்லாவில் இந்தியன் காஃபி ஹவுஸுக்கு சிற்றுண்டி அருந்த நான் சென்றபோது கூட்டம் கூட்டமாக தோசையை விரும்பிச் சாப்பிட வந்தவர்கள் பெரும்பாலும் வடநாட்டவர். அந்த ஓட்டலில் வரிசையாக புகைப்படங்கள் மாட்டி வைத்திருந்தனர். ஜவகர்லால் நேரு, முஹம்மது அலி ஜின்னா, லால் பகதூர் சாஸ்திரி என அனைத்து பிரபலங்களின் புகைப்படங்களையும் மாட்டியிருந்ததைக் காண முடிந்தது.

டெல்லி சாந்தினி சவுக்கில் உள்ள ஹல்திராம் உணவகத்திற்கு சென்று பார்த்தாலும் தோசை சாப்பிட வரும் வடநாட்டவர் ஏராளம். குறிப்பாக சர்தார்ஜீக்களை நாம் பெருமளவில் காண முடிகிறது, எத்தனை நாட்களுக்கு பாவம் அவர்கள் வெறுமனே சப்பாத்தியையும் பருப்பையும் சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள்?

ஒரு தடவையாவது திருச்சி திருவானைக்காவல் பார்த்தசாரதி விலாஸ் ஹோட்டலுக்குச் சென்று நெய்தொசை சாப்பிட வேண்டும் என்ற ஆசை என் மனதுக்குள் கருவேப்பிலையாய் மிதக்கிறது. ட்ராஃப்கோ ஸ்ரீதர் (Sridhar Trafco) பரிந்துரை செய்தால் அதில் ஏதாவது அர்த்தம் இருக்கத்தான் செய்யும்.

சுருங்கச் சொன்னால் தோசை என்பது கமல் மாதிரி. மாவு ஒன்றுதான் ஆனால் அது தசாவதாரம் எடுக்கும் வல்லமை படைத்தது.. ஒரு பக்கம் வார்த்து எடுத்தால் அது தோசை. கொஞ்சம் மொத்தமாக ஊற்றி இரண்டு பக்கமும் வார்த்து எடுத்தால் அது ‘வீட்டு தோசை’. அதையே கொஞ்சம் சிறிதாக இரண்டாக வார்த்தால் அது ‘செட் தோசை’. தடிமனாக ஊற்றினால் அது “ஊத்தாப்பம்’. தோசையை மெலிதாக்கி சற்று பெரிதாக போட்டால் அது ‘ரோஸ்ட்’. இன்னும் சற்று மெலிதாக்கி இன்னும் பெரிதாக வார்த்தால் அது ‘பேப்பர் ரோஸ்ட்’. இன்னும் ஒரு படி மேலே போயி வெங்காயம் போட்டால் அது வெங்காய தோசை. பொடி போட்டால் அது பொடி தோசை. மசாலா போட்டால் அது மசாலா தோசை. இப்படியாக தோசை மாவு பல ரூபத்தில் அவதாரம் எடுக்கும்.

DOSA PLAZA தங்களிடம் 104 வகையான தோசை வகைகள் உள்ளதாக விளம்பரப்படுத்துகிறார்கள்.

தமிழர்களின் பிரதான உணவான தோசைக்கு 1200 ஆண்டுகால ஜாம் ஜாம் வரலாறு உண்டு என்பதை இந்த உடுப்பீஸ் அறிந்திருக்க வாய்ப்பில்லை ராஜா.

தோய் செய் என்ற சொல்லாடல்தான் தோசை ஆனது.

தோய் – அதாவது தோய வைத்து (புளிக்கவைத்து) செய்வதால் தோய் + செய் என்ற பெயர் வந்ததாம். இதை நான் சொல்லவில்லை. சொல்லாராய்ச்சி வல்லுனர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் விளக்கம் தருகிறார்கள்..

கூளப்பநாயக்கன் காதல் – விறலிவிடு தூது என்ற நூலில் தோசையைப் பற்றிய குறிப்பு வருகிறது. (எழுதியவர் : சுப்ரதீபக் கவிராயர்)

“-அப்பம்
வடைசுகியன் தோசை வகைகள்பணி யாரம்
கடையிலே கொண்டுமடி கட்டி - சடுதியிற்போய் ”
[நாகமகூளப்ப நாயகன் விறலிவிடு தூது - கண்ணி – 335 ]

கூளப்ப நாய(க்)கனின் காலம் 1728 என்பதை அறிக,. 1542-ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்றில் 35 தோசைகளை, 24 ஏகாதசிகளுக்குக் கொடுக்க வேண்டும் என்ற மற்றொரு குறிப்பு கிடைக்கிறது.

பிங்கல நிகண்டின் காலம் 10ஆம் நூற்றாண்டு. அதில் “கஞ்சம் தோசை” என்ற சொற்பதம் காணப்படுகிறது.

மேலும், திவாகர நிகண்டில் (கி.பி.8-ஆம் நூற்றாண்டு)

“பூரிகம் நொலையல் கஞ்சம் தோசை
பேதப் பெயர்வகை அப்பம் ஆகும்“

என அப்பத்தின் வகைகளை நான்காகப் பிரித்து அதில் நான்கினுள் ஒன்றாக தோசை வருகிறது. இப்படியெல்லாம் சங்க கால சரித்திரம் தமிழர்களுக்கு அக்மார்க் சான்றாக இருக்கையில் டாம் டிக் ஹரி என கண்டவங்களும் நம் பாரம்பரிய தோசையை உரிமை கொண்டாடுவது கடுப்பைக் கிளப்பாதா என்ன?

மவனே! இனிமே யாராவது தோசையை நான்தான் கண்டுபிடிச்சேன். இட்லியை நான்தான் டிஸ்கவர் செஞ்சேன், சாம்பாரை நான்தான் இன்வென்ட் செஞ்சேன் என்று யாராவது சொல்லுங்க அப்புறமா இருக்கு கச்சேரி,

#அப்துல்கையூம்

No comments: