Friday, May 29, 2020

தலைகுனியாதீர் ...!



Hilal Musthafa
படைத்தவனின் கருணைகண்டு
நெஞ்சம் மகிழுங்கள்! - அவன்
படைப்புகளைப் பணிந்துவணங்க
அஞ்சி நில்லுங்கள் !
(படைத்தவனின்...)

சோதனைகள் தொடர்கையிலே
அழைத்துப் பாருங்கள்! - அதைச்
சுட்டெரித்துக் காத்திடுவான்
வணங்கிப் பணியுங்கள்!
(படைத்தவனின்...)


நேற்றுஇன்று நாளையென்று
காலம் வகுத்தவன்! - அதை
நிறுத்திவிட்டு இறுதிநாளில்
நீதி புரிபவன்!
(படைத்தவனின்...)

புல்நுனியில் பனித்துளியை
அலங்கரிப்பவன் ! - அவனைப்
புரியாமல் வாழும்போது
கலங்க வைப்பவன் !
(படைத்தவனின்...)

மலைமுகட்டைக் கடலுக்குள்ளே
சுருட்டி எறிபவன் ! - அந்த
அலைகடலைத் தூரஓட்டி
நகரம் செய்பவன் !
(படைத்தவனின்...)

சூரியனை எரியவிட்டுப்
பகலைப் படைத்தவன்! - நிலாச்
சுடருக்குள்ளே குளிரைப்பூசி
இரவைக் கொடுத்தவன் !
(படைத்தவனின்...)

எவரிடத்தும் எதுவும்கேட்டுத்
தலை குனியாதீர் ! - அவன்
சுவனம்செய்து காத்திருக்கும்
நிலை மறவாதீர் !
(படைத்தவனின்...)
(1997ஆம் ஆண்டு சகோதரத்துவக் குரல் மாத இதழில் வந்த பாடல் இது. )

Hilal Musthafa


No comments: