Monday, May 21, 2018

தாயிற் சிறந்தவனே ...!

ஆதியும்நீ அந்தமும்நீ
அன்றாடம் செலுத்துகிற
நீதியும்நீ நிரந்தரன்நீ
நிர்மலனும் நீயேதான்!

பாதியிலுன் அடியாரைப்
பரிதவிக்க விட்டறியா
சோதிமணி யும்நீயே
சொல்லஒண்ணாப் பேரருள்நீ!

மேதைமைநீ மேலோன்நீ
மிக்கபெரும் வல்லவன்நீ
பேதைமையால் வழிதவறாப்
பேருதவி செய்பவன்நீ!


சூழவரும் கோதுகளாம்
தீமையெலாம் நீக்கிவிட்டு
ஆழப் பலாச்சுளையை
அளிக்கின்ற தேன்குடம்நீ!

வாழப் படைத்தவனே
வாழவைப்ப துன்பொறுப்பு
மாளுகிற போதினிலும்
கலிமாதான் என்விருப்பு!

நேயத்தால் இறைவாநீ
நிருமித்த கடமையெலாம்
தூயவன்நின் அடியாரும்
தூயவராயத் துலங்கிடவே!

புடம்போட்டுப் பொன்னாக்கும்
புகழாளா, எம்நன்றிக்
கடன்தீர்க்க ஒருவாழ்வு
காணாதே, என்செய்வோம்?

நலம்செய்யும் குறிக்கோளை
நாட்டியுன் கொடிபறக்க
உளங்கொண்ட அடியார்க்கு
உன்னுதவி போதுமன்றோ!

நீயிருக்கும் போதென்றன்
நெஞ்சம் கலங்குவதோ?
தாயிற் சிறந்தவனே
தான்மறவா தனித்தலைவா!

---- ஏம்பல் தஜம்முல் முகம்மது

No comments: