Saturday, May 26, 2018

நம்பிக்கையற்றோர் !

நம்பிக்கையற்றோர் !

(மூலம்: அல் குர்ஆன் / சூரா: 109 அல் காஃபிரூன்)

எத்துணை எடுத் தியம்பியும்
இசையாத இனத்தோர்க்கு - ஏக
இறைவன் ஒருவனே யென்று
ஏற்காத குலத்தோர்க்கு

இனியும் எத்தி வைப்பீர்
இறைச் செய்தி என்னவென்று - அந்த
நம்பிக்கை அற்றோர்க்கு
நல்வழி விட்டோர்க்கு



வரைந்தவை வார்த்தவையென
வணங்குவர், அவற்றையெலாம் -புனித
மார்க்கமும் மறையும் பெற்ற
நீர் வணங்க மாட்டீர்

நீர் உரைக்கும் மீட்சியை
அவர் அறிய மாட்டார் - நித்தம்
நீர் வணங்கும் இறைவனை
அவர் வணங்க மாட்டார்

விழி யற்றோர் நிலையிலேயே
வழி கெட்டோர் விரைய - நேர்
வழி பெற்ற உம்மை
அவர் தொடர மாட்டார்

அன்றியும்...
கலைஞரும் சிற்பியும்
கலந்து படைத்த கடவுள்களை
கையெடுத்து அவர் வணங்க
நீர் இணங்க மாட்டீர்

அதுபோல்...
உலகங்களைப் படைத்த
உருவமற்ற இறைவனை
ஒருவன் என் றேற்றதுபோல்
அவர் ஏற்க மாட்டார்

ஆகவே கூறிவிடுக:
“உலக வாழ்க்கையில் லயித்த
உங்கள் வழி உங்களுக்கு
ஏக இறைவனை ஏற்ற
எம் வழி எமக்கு!”

-சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

Sabeer Ahmed

No comments: