Friday, September 3, 2010

மனம் மகிழுங்கள்-13

நூருத்தீன் 
 
நாம் சிறுவர்களாக இருந்தபோது நேரம் அதிகம் இருந்ததைப் போலவும், இப்பொழுது காலம் சுருங்கி நேரமே போதாமல் இருப்பது போலவும் உணர்கிறோமல்லவா?

“இப்போதான் வருஷம் பிறந்த மாதிரி இருக்கு; அதுக்குள்ளே எட்டு மாசம் ஆயிடுச்சா?”

“நாளு எவ்வளவு கிடுகிடுன்னு ஓடுது.”

இப்படி விதவிதமான வசனங்கள் ஒவ்வொருவரும் கேட்டிருக்கக்கூடும், உரைத்திருக்கக்கூடும். பத்தாண்டுகளுக்குமுன் ஒருநாளைக்கு இருபத்திநாலு மணி நேரமாக இருந்தது இன்று பத்தொன்பதரை மணிநேரமாகச் சுருங்கிவிட்டதா என்ன? கிடையாது!

பிறகு? நேரம் என்பது என்ன?

அடிப்படையில் நேரம் என்பதன் சாரம் மனதில் இருக்கிறது. “பரபரப்பான வாழ்க்கை முறையும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக நமக்கு அறிமுகமாகிக் கொண்டேயிருக்கும் அறிவியல் உபகரணங்களும் நமது நேரக்களவாணிகளே என்று அடித்துப் பேசக்கூடிய தனிக்கட்டுரை சமாச்சாரம்” - அதைப் பின்னர் பார்ப்போம். ஆனால் அங்கும் மனதுதான் அடிப்படை.

கடந்துபோன நிமிடம் சரிதம். அடுத்த நிமிடம் என்பது கேள்விக்குறி. இந்த நொடி மட்டுமே சாசுவதம். இதை முதலில் நமது மனம் உணர்ந்து கொண்டால் மற்றதெல்லாம் புகைபடிந்த கண்ணாடியைத் துடைத்ததைப்போல் தெளிவாகிவிடும்.

“அப்போ சரித்திரம் வேஸ்ட்டா? புண்ணியமாப் போகும் யாராவது எஜுகேஷன் போர்டுக்குச் சொல்லி அந்த சப்ஜெக்டை பாடத்திட்டத்தில் இருந்து தூக்கச் சொல்லுங்கள். படிப்பதற்குள் மண்டை காயுது,” என்று மாணவர்கள் குதிக்கவும் வேண்டாம்; “எதிர்காலத்திற்குத் திட்டம் வகுப்பது, அதற்கென சேமிப்பது. இதெல்லாம் என்ன கேணைத்தனமா?” என்று பெரியவர்கள் கோபப்படவும் வேண்டாம். அதெல்லாம் தப்பே கிடையாது. சொல்லப்போனால் முக்கியம்; மிக முக்கியம்.

நம் மனது சாந்தியுடன் திகழ்வதும் நமது தினசரி செயல்பாடுகள் திறனுற அமைவதும் நமது நிகழ்கால நொடியை நாம் எப்படி உணர்ந்து அனுபவிக்கிறோம் என்பதைப் பொருத்து இருக்கிறது.

இறைபக்தி உண்டு, இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது என்றாலும் இறைவனுக்குரிய நிகழ்காலச் செயல்பாடுகளை உணர்ந்து அனுபவித்துச் செய்யாவிட்டால் அது வெறும் சம்பிரதாயம். மனதிற்குள் சாந்தி தோன்றாது. கவலை நீங்காது.

நிகழ்கால நொடியை நோக்கி நாம் நமது சிந்தையைச் சரியாகச் செலுத்தத் துவங்கிவிட்டால் மன மகிழ்விற்கான சூட்சமம் புரிந்துவிடும். தன்னிறைவிற்கான காரணம் தெரிந்துவிடும். விரிவாய்ப் பார்ப்போம்.

இந்த நொடி எனும் “இப்பொழுது” இருக்கிறதே அது மனதிற்குச் செய்யவல்ல நன்மை-தீமைகளைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டியது முக்கியம்.

குழந்தைகள் விளையாடும்போதோ, ஏதாவது ஒரு காரியத்தில் மூழ்கியிருக்கும்போதோ கவனித்திருக்கிறீர்களா? அந்த நொடியை அவர்கள் அனுபவித்து வாழ்ந்து கொண்டிருப்பார்கள். டிவி பார்ப்பதாக இருந்தாலும் சரி, மணலில் வீடு கட்டுவதாக இருந்தாலும் சரி, நமக்குக் கப்பல் போல் தெரியும் படத்தைக் காண்பித்து, “அப்பா இந்த பஸ்ஸைப் பாரேன்,” என்று வண்ணம் பூச ஆரம்பித்தாலும் சரி, கடமையே கண்ணாயினார் என்றுதான் இருப்பார்கள். வேறு எதுவும் அவர்கள் சிந்தையில் இருக்காது. உங்கள் அவசரம் அவர்களுக்கு முக்கியமில்லை. குழந்தைகளை நீங்கள் எவ்வளவு உரக்கக் கூப்பிட்டாலும் அவர்கள் இஷ்டப்பட நேரத்திற்குத்தான் பதில் வரும்.

அந்தத் தூய தருணத்தை வளர்ந்த மனிதர்களாகிய நாம் கவனமாய்த் தொலைத்து விடுகிறோம். அதற்குப் பகரமாய் ஒரே நேரத்தில் பல விஷயங்களை மனதினுள் போட்டுக் குழப்பிச் சிந்திக்கும் கலையை வளர்த்துக் கொள்கிறோம். பழைய பிரச்சனைகளும், நாளையக் கவலைகளும் நிகழ்கால நொடியில் நமக்குள் புகுந்துகொண்டு கூட்டம் நிரம்பிய பஸ் ஃபுட்போர்டு பயணிகளுடன் திணறுவதைப்போல் மனம் திணறுகிறது. விளைவு? மகிழ்ச்சி “பை.. பை..“. அதன் தொடர்ச்சியாய் எந்தவொரு செயலையும் சரியாகச் செய்துமுடிக்க இயலாத பயனற்ற நிலைக்குச் செல்கிறோம்.

அது மட்டுமா? வேறு கூத்தும் உண்டு.

'நாளை ஒருநாள் எல்லாம் சீரடையும்; திரையில் கடைசியில் போடும் சுபம்போல் ஒரு தருணம் வரும்; அப்பொழுது பார்த்துக்கொள்ளலாம்' எனும் மாயக் கற்பனையில் நமது இன்பம், மகிழ்ச்சி என்பதையெல்லாம் “நாளைக்கு“ என்று ஒத்திவைத்துவிடுகிறோம். “இப்பொழுது” கவலை, ஆயாசம், சோர்வு இப்படியாகத்தான் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறோம்.

பள்ளியில் படிக்கும் மாணவனுடைய எண்ண ஓட்டம் - “இந்த ஸ்கூலில் இருந்து வெளியே வந்தால் போதும். தினமும் ஹோம்வொர்க், வீக்லி டெஸ்ட், மன்த்லி டெஸ்ட், ஃபைனல் எக்ஸாம், என்று எல்லாத்துக்கும் சேர்த்து விடுதலை. வாழக்கையே இன்ப மயம்!” என்று அமைகிறது.

அப்படி லேசில் நடந்துவிடுமா?

ஸ்கூல் முடிந்தால் காலேஜ் கவலை
காலேஜ் முடிந்தால் வேலை கிடைக்க வேண்டுமே என்ற கவலை
வேலை கிடைத்தால் நல்ல சம்பளம் கிடைக்கவில்லையே என்ற கவலை
பஸ் முடியல மோட்டார் பைக் வாங்கினால் தேவலாம் என்று கவலை
அப்படி வாங்கியானதும், கார் வாங்கினால்தான் சரிப்படும் என்ற கவலை
அதற்கு முன்னரோ பின்னரோ ... கல்யாணம் முடிக்க வேண்டும் என்ற கவலை...

கல்யாணமான பிறகு வேறு பல புதுக்கவலைகள். தனக்காகக் கவலைப்பட்டது போதாதென்று இப்பொழுது வாழ்க்கையில் உடன் வந்து இணைந்த துணையாள் பொருட்டுக் கவலை. புதுநகை அவள் கண்ணில் படக்கூடாது, புது டிஸைன் புடவைகள் அவள் கவனத்திற்கு வரக்கூடாது என்று ஏகப்பட்ட கவலை. பிறகு அடுத்து குழந்தைகள், அவர்களது படிப்பு, நலன், எதிர்காலம் என்று மனிதன் மரணிக்கும்வரை கவலைக்கு ஓய்விருக்கிறதா என்ன?

இந்த அனைத்திலும் என்னதான் நடக்கிறது? நாம் நமது நிகழ்கால நொடிகளைத் தொலைத்து விடுகிறோம். ஒவ்வொரு நொடியையும் நேற்று அல்லது நாளையத் தருணத்தில் வாழ்ந்து கொணடிருக்கிறோம். இதிலெல்லாம் மனித குலம் வெகு ஒற்றுமை. இனம், மதம், மொழி, எல்லாம் தாண்டி அனைவருக்கும் இது பொது.

மன மகிழ்வு என்பது நிகழ்காலம் சார்ந்ததாகும். அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்று ஓர் உல்லாசப் பயணம் மேற்கொண்டால் ஊர்போய்ச் சேர்ந்த பிறகு லாட்ஜில் ரூம் போட்டு உட்கார்ந்தா யோசித்துப் பார்த்து மகிழ்வது? பயணத்தின் ஒவ்வொரு நொடியையும் ஒவ்வொரு காட்சியையும் கண்டு உணர்ந்து மகிழ்வதுதானே முறை?

அதைப்போல் வாழ்க்கையில் யாரெல்லாம் நமக்கு மிகமிக முக்கியமோ அவர்களுடன் நாம் நமது மகிழ்ச்சிகரமானப் பொழுதைக் கழிப்பதையும் ஒத்திப் போடுகிறோம். ஒருமுறை அமெரிக்காவில் நடத்திய ஆய்வொன்றில் சராசரி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தகப்பன், தன் இளங்குழந்தைகளுடன் நாளொன்றுக்குச் சராசரியாக முப்பத்தேழு நொடிகளே ஆரோக்கியமாய், மகிழ்ச்சியாய் நேரத்தைச் செலவிட ஒதுக்குகிறான் என்று கணக்கிட்டார்கள். இருபத்திநாலு மணி நேரத்தில் வெறும் முப்பத்தேழு நொடி.

இப்பொழுது அமெரிக்கா என்றில்லை, உலகம் முழுக்க அப்படித்தான் ஆகிவிட்டது. முப்பத்தேழு என்பது சற்றுக் கூடலாம் குறையலாம், அவ்வளவே! எல்லோருக்கும் காலில் சக்கரம்!

தகப்பனுக்குத் தன் குடும்பம், பிள்ளைகள் அவர்களின் சிறப்பான எதிர்காலம் ஆகியவற்றிற்காக உழைக்கும் நிர்ப்பந்தம் இருப்பது உண்மை. ஆனால் அது மேலெழுந்துபோய் அது சார்ந்த கவலைகள் அவனை மூழ்கடித்து யாருக்காக உழைக்கிறானோ அவர்களுடன் அவன் நிகழ்கால “இப்பொழுதை”த் தொலைத்து விடுகிறான்.

“வீட்டைக் கட்டி முடிப்போம்”, “இந்த ப்ராஜெக்ட் படுத்தி எடுக்கிறது, அது மட்டும் முடியட்டும்”, “சேமிக்கும் பணம் இந்த அளவைத் தொடட்டும்” - இப்படியே ஒவ்வொருவருக்கும் முடிவுறாத பட்டியல் உண்டு. அதெல்லாம் முடிந்தபிறகு பெண்டாட்டி பிள்ளைக் குட்டிகளுடன் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நினைத்தால், நாளை என்பதற்கு வாழ்க்கையில் எந்தவித உத்தரவாதமும் இல்லையே! நிதர்சனம் கைவசம் உள்ள “இப்பொழுது” மட்டுமே!

நிகழ்காலத்தில் மனம் மகிழ வாழ்வதென்பது என்ன?

வீட்டைச் செப்பனிடுவதோ, ஓவியம் வரைவதோ, மாட்டைக் குளிப்பாட்டுவதோ ஏதோ ஒன்று செய்து கொண்டிருக்கிறீர்கள். அதைச் செய்துமுடித்து, இறுதியில் அதன் பயனைக் கண்டு மகிழ வேண்டும் என்று காத்திருக்காமல் வேலை நடந்துகொண்டிருக்கும் போதே, முகத்தை வருடும் காற்று, பறவைகளின் சங்கீதக் குரல், அகர்வால் பாஸந்தி என்று உங்களைக் கேட்காமலேயே உங்கள் வாழ்க்கையில் உங்களைத் தீண்டி, பின்னர் தாண்டிப் போகிறவற்றில் தென்படும் சுவாரஸ்யங்களை உள்வாங்கி மனதில் இட்டு நிரப்பிக்கொள்வது. அவ்வளவுதான்.

நிகழ்கால “இப்பொழுதில்” வாழ்வதென்பது தற்போதைய தருணங்களைப் பற்றிய உணர்ச்சியை உணர்ந்து இனிமையாக்கிக் கொள்வது. நம் ஒவ்வொருவருக்கும் நிகழ்கால இனிய தருணங்களுக்குக் குறைவேயில்லை. ஆனால் அதைப் பயன்படுத்திக்கொள்வது அவரவர் கையில்தான் உள்ளது. ஏனெனில் அதை யாரும் மற்றவருக்குத் திணிக்க முடியாது.

“சாப்பிட்டுப் பார் காஜு பர்பி” என்று இனிப்புப் பலகாரத்தை வேண்டுமானால் மற்றவருக்கு ஊட்டலாம்.

“ஆஹா, அந்தச் செவ்வானத்தைப் பார், சிலிர்க்கலே?,” என்று உடனிருப்பவரைக் கேட்டால் அவர் உணர்ந்தால்தான் ஆச்சு. ஆனால் அவர் காலையில் மனைவி பூரிக்குக் கொடுத்த உருளைக்கிழங்கு மசாலாவில் உப்பு குறைந்திருந்த காரணத்திற்காக ஏற்பட்ட லடாயையே நினைத்துக்கொண்டிருந்தால்?

நிகழ்காலத் தருணங்களை உணர்ந்து வாழ்வதால் நன்மை இருக்கிறது என்கிறார்கள். என்னவாம்? மனதிலிருந்து பயம் போய் விடுமாம். தெனாலி அளவிற்கு இல்லையென்றாலும் சராசரி மனிதருக்கு அடிப்படையான ஒரு பயம் உண்டு. அது எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி அல்லது விளைவைப் பற்றியதாக இருக்கும். அந்தக் கவலை முற்றிமுற்றி நம்மை எந்தவொன்றையும் ஆக்கபூர்வமாய்ச் செயல்படவிடாமல் தடுத்துவிடுகிறதாம்.

அதற்காக பயந்துவிடாதீர்கள்!

அத்தகையத் தீவிர பயமோ கவலையோ அது நீங்கள் வெறுமே முடங்கிக் கிடக்கும் வரை மட்டுமே! ஏதாவது ஒன்று செய்து பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும் என்று நினைத்து நீங்கள் எழும் நொடியிலேயே உங்களது பயம் தணிந்துவிடும். முயன்று பார்க்க ஆரம்பித்ததுமே ஏதாவது ஒரு வழி தென்பட்டுவிடும்.

மனம் பயத்தை ஒத்திவைத்துவிட்டு மகிழும்!

எனவே நிகழ்காலத் தருணத்தில், எதிர்கால விளைவைப் பற்றிய பயத்தை மனதில் சுமந்து தொய்ந்துவிடாமல், ஆக வேண்டிய காரியத்தை யோசித்து, உணர்ந்து, செம்மையாய்ச் செயல்பட வேண்டும்.

அதேநேரம் நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் சில உள்ளன.

ஒன்று, இதெல்லாம் நல்ல காரியத்திற்கு.

அடுத்தது, வாழ்க்கையில் உண்மையான சோகங்களும் உண்டு. குடும்பத்தில் ஏதோ துர்சம்பவம். வேலை போய்விட்டது, திருடு போய்விட்டது இத்தியாதி. அவற்றையெல்லாம் வெறும் நிகழ்காலத் தருணத்தை நேசிக்கிறேன் பேர்வழி என்று சன் டிவியில் ”காமெடி டைம் பார்த்து மாற்றிவிட முடியாது. அவையெல்லாம் சீர்செய்யப்பட வேண்டிய நிகழ்வுகள். அதற்கு அந்தச் சோகத்திலேயே மூழ்கி வெறுத்து செயலற்று இருப்பதைவிட எழுந்து சோகம் களையும் முயற்சி ஏதாவது செய்ய வேண்டும். அல்லது அந்த நிகழ்வையொட்டிய காரியங்களுக்கு நடைபெற வேண்டிய விஷயங்களைச் செயல்படுத்த வேண்டும். மனம் இலேசாகும். காயங்கள் நாளாவட்டத்தில் மறையும். ஏனெனில் இறைவன் நமக்கு அளித்த அற்புத சக்தியொன்று உண்டு - மறதி. அது உதவும்.

அறியவேண்டியது யாதெனில், வருமுன் காவாதான் வாழ்க்கை எனும் பிரயத்தனத்தில் நிகழ்காலத்தைத் தொலைக்க வேண்டாம் என்பதே பாடம்.

மார்க் ட்வெய்ன் (Mark Twain) என்று ஓர் அமெரிக்கர். எழுத்தாளர், நகைச்சுவையாளர். அவர் ஒருமுறை குறிப்பிட்டார், ”நான் வாழ்க்கையில் பயங்கரமான விளைவுகள் பலவற்றைக் கடந்திருக்கிறேன். அவற்றுள் சில உண்மையிலேயே நிகழ்ந்திருக்கின்றன.”

புரிந்திருக்குமே?
னம் மகிழ, தொடருவோம்...

No comments: