Wednesday, March 30, 2022

ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) சில குறிப்புகள்.

 

ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) சில குறிப்புகள்.

அரபு நாடுகளில் சவுதி, குவைத்திற்கு அடுத்த படியாக பெட்ரோல் வளமும், செல்வ வளமும் மிக்க ஒரு நாடு இது.

இது தனித்தனி அமீர்களால் (Rulers) ஆளப்படும் ஏழு அமீரகங்களின்(Emirates)  கூட்டமைவு. இந்தக் கூட்டமைவு 1972ல் உருவானது. ஆரம்ப காலத்தில் இந்தக் கூட்டமைவில் ஓமன் நாடும் ஒரு அங்கமாக இருந்தது. பின்னர் சுல்தான் காபூஸின் தலைமையில் தனி நாடாக செயல்படத் துவங்கியது.

இந்த அமீரகங்களின் கூட்டமைவுக்கு முன் இந்தப் பகுதிகள் Trucial states என வழங்கப்பட்டது. தங்களுக்குள் ஒருவருக்கொருவர் எல்லைப் பிரசினைகளுக்காக அடித்துக் கொண்டிருந்தனர். 1972 வரை இந்திய ரூபாயே இங்கு செலாவணியாக இருந்தது.

இவற்றின் எண்ணை வளம், அதன் எதிர்கால பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இவை ஒன்றிணைந்து ஒரே நாடாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த அபுதாபியின் ஆட்சியாளர் ஷேக் ஸையத் பின் சுல்தான் அல் நஹ்யான் அதற்கான அழைப்பினை விடுத்தார்.


அதனை ஏற்று அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், ஃபுஜைரா, உம் அல் குயின், ராஸ் அல் கைமா மற்றும் ஓமன் இணைந்து 1972ல் ஐக்கிய அரபு அமீரகம் உருவானது. பின்னர் ஓமன் பிரிந்து செல்ல மற்ற ஏழு அமீரகங்கள் இன்று வரை ஒரே கூட்டமைவாக இருந்து வருகிறது.

ஒவ்வொரு எமிரேட்டும் தனித்தனி குடும்பங்களால் ஆளப் படுவதால் ஆரம்பத்தில் ராணுவம் கூட தனித்தனியாக இருந்தது. பின்னர் அவையும் இணைக்கப் பட்டு UAE Defence  ஆனது.

இந்த கூட்டமைவு உருவாக்கத்தில் நவீன துபாயின் தந்தையும் அதன் ஆட்சியாளருமான ஷேக் ராஷித் பின் சையீத் அல் மக்தூமின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

இதில் அபுதாபி பரப்பிலும், செல்வத்திலும், எண்ணை வளத்திலும் மிகப் பெரியது. இதன் தலை நகரே இந்நாட்டின் அரசியல் தலைநகரம். இதன் ஆட்சியாளரே நாட்டின் ஜனாதிபதி.

ஆரம்பத்தில் எண்ணை வளத்தில் மட்டுமே கவனம் செலுத்திய அபுதாபி சமீப காலங்களில் வர்த்தகம் மற்றும் சுற்றுலா, கட்டுமானம் போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது.

அபுதாபியின் ஆட்சியாளர் குடும்பத்திற்கு சொந்தமான முதலீட்டு நிறுவனமான Abudhabi investment authority( ADIA)  உலகின் மிகப் பெரிய முதலீட்டு நிறுவனங்களில் ஒன்று. இதன் முதலீடுகளை பின் வலித்தால் ஐரோப்பாவின் சில நாடுகள் திவாலாகும். சிடி பேங்க் போன்ற முக்கிய வங்கிகள் இதன் கட்டுப்பாட்டில் உள்ளன.

இரண்டாவது பெரிய எமிரேட்டான துபாயின் தந்தை ஷேக் ராஷித், தம்முடைய எண்னை வளம் குறைவானது மற்றும் நிரந்தரமற்றது என்பதை உணர்ந்து தமது எண்ணை வருவாயைக் கொண்டு துபாயை ஒரு உலக வர்த்தக மையமாக உருவாக்கி ஏராளமான முதலீட்டை ஈர்த்து, துபாயை ஒரு வாய்ப்பு களின் நகரமாக்கினார். புதியதாக ஜெபல் அலி என்ற ஒரு துறைமுகத்தை உருவாக்கி வர்தகத்தை பெருக்கினார். அவரது மகன்கள் துபாயை ஒரு உலக சுற்றுலா மையமாகவும் மாற்றிக் காட்டினர். அரபு நாடுகளில் கட்டுமானம் மற்றும் உள் கட்டமைப்பு வசதிகளின் முன்னோடி துபாய். நாட்டின் வணிக தலைநகரம் துபாய். இதன் ஆட்சியாளர் கூட்டமைவின் துனை ஜனாதிபதி மற்றும் பிரதமர்.

மூன்றாவது பெரிய எமிரேட் ஷார்ஜா. இதன் எண்ணை வளம் குறைவு. துறைமுகம் மற்றும் வர்த்தகத்தின் மூலம் ஓரளவுக்கு வளமான ஷார்ஜா சவுதி அரேபியாவின் செல்லப் பிள்ளை. முற்றிலும் ஷரியத் சட்டங்கள் அமலிலுள்ள இந்த எமிரேட்டில் ஐந்து நட்சத்திர விடுதிகளில் கூட மது பானம் கிடையாது. இது நாட்டின் கலாச்சார தலைநகராக கருதப்படுகிறது.

இந்த எமிரேட்டின் ஆளுனர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் காஸிமி சிறந்த கல்வியாளர். முனைவர் பட்டம் பெற்றவர். நாட்டின் முதல் பல்கலைக் கழகமான ஷார்ஜா யுனிவர்சிடியை இவர் தான் உருவாக்கினார். மிக நீண்ட ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் அரபு ஆட்சியாளர் இவர் தான். (தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள். நடுவில் ஏழு நாட்கள் நீங்கலாக)

அடுத்த எமிரேட்டான ஃபுஜைரா, கோர்ஃபாக்கான், ஃபுஜைரா என்ற இரு துறைமுகங்களினா மூலம் நடை பெறும் வர்த்தகத்தின் மூலம் வளம் பெற்றுள்ளது. இதன் ஆளுநர்கள் நாட்டின் சுப்ரீம் கவுன்சிலின் உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் உள்ளனர்.

அஜ்மான், ராஸ் அல் கைமா, உம் அல் குயின் போன்ற எமிரேட்கள் அபுதாபியின் நிதி உதவியை நம்பியே உள்ளது.

முதன் முதலில் அபுதாபியும், துபாயும் பஹ்ரைனுடன் சேர்ந்து கல்ஃப் ஏர் என்ற விமான நிறுவனத்தை உருவாக்கினர். கொஞ்ச காலத்திற்கு பின் துபாய் தனியாக எமிரேட்ஸ் என்ற உலகின் சிறந்த விமான நிறுவனத்தை உருவாக்கி துபாயை அதன் மையமாக்கினர். சமீப காலத்தில் அபுதாபியும் பிரிந்து தமக்கென எதிஹாத் என்ற விமான நிறுவனத்தை தொடங்கி அபுதாபியை அதன் மையமாக்கி உள்ளனர்.

ஒரு காலத்தில் முத்துக் குளித்தலும், மீன் பிடித்தலையும், 'கடற் கொள்ளையையுமே முதன்மையான தொழிலாகக் கொண்ட இந்த பகுதிகள், இன்று உலகின் அதி நவீன வர்த்தக மையமாக வளர்ந்துள்ளன. எல்லாவற்றிற்கும் எண்ணை வளமே அடிப்படை காரணம்!



Senthilkumar Deenadhayalan


No comments: