Friday, August 14, 2020

ழ !

 Sabeer Ahmed


செம் மொழி இருக்க

மும் மொழி எதற்கு?

எம் மொழி விளக்கு

உம் மொழி விலக்கு !


சட மென நீர்த்த

முட மொழி மீட்க

வட மொழி திணிக்க

இட மிலை உமக்கு !


தேன் தமிழ் இருக்க

வீண் மொழி இழுக்கு

தென்னகம் செழிக்க

உன்னதம் முத்தமிழ் !


வீரமும் தீரமும்

பேசிடும் இலக்கியம்

ஆயிர மாயிரம்

எம் வசம் இருக்கு...


வர்ணமும் தோசமும்

மானுடம் வீழ்த்திட

பிறப்பைப் பழித்திடும்

குப்பைகள் எதற்கு?


சமூக நீதிக்கும்

சமத்துவம் கற்கவும்

செந்தமிழ் மொழியாம்

எந்தமிழ் இருக்க...


சாதிய கொடுமைக்கும்

சமூகப் பிரிவினைக்கும்

ஆற்றுநீர் பாய்ச்சும்

வேற்று மொழி வேண்டாம் !


தீன் குலத்தோர்க்கோ

வான்மறை இருக்க

திருக்குறள் தந்தது

செந்தமிழ் அன்றோ?


இறுதி மூச்சிலே

இழுக்குது உம்மொழி

உறுதியாய் உச்சியில்

உலகுக்கே எம்மொழி !


சிகர மொழியின்

‘ழ’கரம் வைக்கிறேன்...

தகர மொழிதரும்

பகரம் என்ன?


-சபீர்

adirainirubar

No comments: