Sunday, November 14, 2010

எந்திரனில் ரஜினிக்கு டூப்பாக நடித்த அலெக்ஸ் மார்ட்டின் குறித்து? (வணங்காமுடி பதில்கள்-14 நவம்பர் 2010)





எந்திரன் படத்தில் ரஜினிக்கு டூப் போட்டு நடித்த அலெக்ஸ் மார்ட்டின் என்பவரது வீடியோ வெளியாகி உள்ளதே! இது குறித்து வ.மு அய்யாவின் கருத்தென்ன? - பழனி
பொதுவாக வணங்காமுடி சினிமா, மதம் சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிப்பதில்லை.

கருப்பு-வெள்ளை, ஈஸ்ட்மென் படங்களிலேயே இரட்டை வேடத்தில் நடிப்பது சாதாரணமாகி விட்டபோது, கம்யூட்டர் கிராஃபிக்ஸ் யுகத்தில் வேறொருவரை வைத்து இரட்டை வேடத்தில் நடிக்க வைத்திருப்பதில் புதுமை எதுவும் இருப்பதாகக் கருதமுடியவில்லை.

பெரிய நடிகர்களுக்குச் சண்டைக் காட்சிகளில் டூப் போடுவது திரைப்பட உலகில் காலங்காலமாக நடந்து வருவதே! எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றோருக்கும் டூப் போட்டதுண்டு. இப்போது சண்டைக் காட்சிகளில் புதிய முறைகளும் பிரமிக்க வைக்கும் வேகமும் வெளிநாட்டு உத்திகளும் பயன்படுத்தப்படுவதால் வெளிநாட்டு நடிகர்கள் டூப் ஆகிறார்கள்.

தகவல் யுகத்தில் மூடி மறைப்பதற்கு ஒன்றுமில்லை எனுமளவுக்கு எல்லா விசயங்களும் பொதுவில் வந்துவிட்டன. ஒரு படத்தின் வெற்றிக்குப் பின்னணியில் பலர் இருந்தாலும் ஒரு சிலரே முன்னிறுத்தப்படுகிறார்கள். சூப்பர் ஸ்டாருக்கு டூப்பாக நடித்திருப்பவர் பெயரை "டூப்பர் ஸ்டார்" என்று போடாவிட்டாலும் டைட்டிலில் எங்காவது ஓர் மூலையில் அவரது பெயரைப் போட்டிருப்பார்கள்.

நீங்கள் கூறிய வீடியோவை இந்தச் சுட்டியில் காணலாம்: http://www.youtube.com/watch?v=0zak6CtB-2E



இணையப் பயன்பாடு குறைவாக உள்ள தமிழகத்தில் இணையதள பத்திரிகைகளால் தாக்கம் ஏற்படுத்த முடியுமா?- கயல்விழி
கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதுபோல் கணினியில்லா வீட்டில் குடி இருக்க வேண்டாம் எனுமளவுக்கு வீட்டுக்குவீடு கணினிகள் பெருகிவிட்டன. இணையத்தில் மின்னஞ்சலுக்கு அடுத்தபடியாக செய்திகளே பெரிதும் வாசிக்கப்படுவதாக நினைக்கிறேன். அச்சுப்பதிப்பு பத்திரிக்கைகளைவிட இணையப் பத்திரிகையில் பல்லூடக வசதி இருப்பதால், தமிழகம் மட்டுமின்றி உலகின் எப்பகுதியிலும் தாக்கத்தை ஏற்படுத்த இயலும்.

ஒரு பத்திரிக்கை வாசகனிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு அதன் உள்ளடக்கமே காரணமன்றி, தளமில்லை.

டென்மார்க் நாட்டின் ஜெலாண்டன் போஸ்டன் பத்திரிக்கையில் வெளியான கேலிச்சித்திரம் உலகளவில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு அதன் உள்ளடக்கமே காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


வணங்காமுடியாரே, கிரிக்கெட்டில் ரன் ஏதும் எடுக்காவிட்டால் வாத்து (Duck) என்று ஏன் அழைக்கின்றனர்? - ரஃபீக், மதுரை

எந்த முயற்சியும் செய்யாமல் அல்லது பொறுப்பைத் தட்டிக் கழிப்பதை ஆங்கிலத்தில் பேச்சு வழக்கில் DUCK OUT என்பர். அவ்வகையில் மட்டைப் பந்தாட்டத்தில் ஓட்டம் எதுமின்றி போன வேகத்தில் திரும்பும் மட்டையரைக் குறிக்க DUCK OUT என்று சொல்லப்படுகிறது. கிரிக்கெட் ஆங்கிலேயரிடமிருந்து இறக்குமதியான விளையாட்டு என்பதால் DUCK OUT என்ற அவர்களின் பேச்சு வழக்கு நிலைத்து விட்டது. கிரிக்கெட் உருவானது சாமானியர்களின் விளையாட்டாக அன்று; ஆங்கிலேய அரச குடும்பத்தாரின் சோம்பேறித் தனமான பொழுதுபோக்கு தான் கிரிக்கெட்டாக உருவானது. அரசகுடும்பத்தார் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் திரும்பியதை மரியாதையுடன் குறிக்க முதன்முதலில் 1866 ஜூலை 17 அன்று தி டெய்லி டைம்ஸ் நிருபர் The Prince retired to the royal pavilion on a "duck's egg" என்று எழுதினார். வாத்து முட்டை வடிவில் சுழி(பூஜ்யம்) இருப்பதால் கூட அவ்வாறு எழுத அவருக்குத் தோன்றி இருக்கலாம். அன்று முதல் வாத்து முட்டையில் இருந்து முட்டை வழக்கொழிந்து வாத்து மட்டுமே நிலைத்துவிட்டது என்று இன்னொரு கருத்து நிலவுகிறது.


சிவப்பு நிறம் எதிர்மறையை குறிப்பதாகக் காட்டப்படுவது ஏன்? - அழகப்பன், சென்னைபொதுவாகக் கவனத்தை ஈர்க்கச் சிவப்பு நிறம் பயன்படுகிறது. சாலைகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளில் (TRANFFIC SIGNAL) சிவப்பு விளக்கு கட்டாய நிறுத்தத்தைக் குறிக்கும். அதேபோல் அலுவலகங்களில் கோப்புகளைச் சிவப்பு நாடாவால் மூடினால் அவசரம் என்றும் பச்சைநாடா அவசரமில்லை என்றும் பொருள். சிவப்பு நிறம் எதிர்மறையாக அல்லாது கவன ஈர்ப்பாகவே பயன்படுத்தப்படுகிறது.

மாமிச உண்ணிகளில் மனிதன் மட்டும் பல்குத்துவது ஏன்? - ஜமால்
மாமிசம் உண்ணும் விலங்குகள் அவற்றின் நாவைச் சுழற்றியே பல்லிடுக்குகளில் சிக்கியுள்ள உணவுத் துணுக்குகளை எடுத்து விடுகின்றன. மனிதனின் பல்லிடுக்குகளில் சிக்கி இருக்கும் உணவுத் துணுக்குகள் பற்களில் குறுகுறுப்பை ஏற்படுத்துவதால் பல்குத்தும் குச்சியால் அவற்றை எடுக்க அவசரப்படுகிறான் மனிதன். மேலும் பேசும்போது பல்லிடுக்குகளில் தங்கியுள்ள உணவுத் துணுக்குகள் - குறிப்பாக மாமிச மீதங்கள் எச்சிலுடன் கலந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துவதாகப் பல் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

சக மனிதர்களுடன் பேசும்போது வாயிலிருந்து துர்நாற்றம் வந்தால் எதிரிலிருப்பவர் முகத்தைத் திருப்பிகொள்வதைத் தவிர்க்க வாய் துர்நாற்றம் இல்லாமல் இருப்பது அவசியம். அவ்வாறு துர்நாற்றம் எழாமலிருக்கு சாப்பிட்டபின் பல் குத்தும் பழக்கம் ஏற்பட்டிருக்கும்.

மாமிச உண்ணிகளில் மனிதன் மட்டுமே பேசுவதால் பல்குத்தும் பழக்கம் மனிதர்களிடம் மட்டும் உள்ளது!

புழு, பூச்சிகளின் மீது தண்ணீர் விழுந்தாலோ அல்லது தண்ணீரில் அவை விழுந்தாலோ புழு, பூச்சிகள் இறந்து விடுகின்றன. ஆனால் (தலையில் இருக்கும்) பேன் மட்டும் அவ்வாறு இறப்பதில்லையே ஏன்? - அமுமீ
பொதுவாக சுவாசிக்கத் தேவையான வாயு கிடைக்கும் வரை எந்த உயிரும் அழிவதில்லை. தலையில் நீர் பட்டதும் உயிர்வாழத் தேவையான பிரான வாயுவை பேன் தன்னைச் சுற்றி காற்றுக் குமிழை உருவாக்கி காத்துக் கொள்வதால் ஓரளவு தப்பிக்கின்றன. பேன் கொல்லியில் அத்தகைய வாயு கிடைக்காமல் போவதால் பேன்கள் கொல்லப்படுகின்றன.

இன்று அனைத்து கைபேசிகளிலும் உபயோகப்படும் SOS-(Save our Souls) எப்படி உருவானது? - கோபால்

கப்பல் நடுக்கடலில் தத்தளிக்கும்போது SAVE OUR SHIP என்ற குறியீட்டின் சுருக்கமே SOS என்று சுருங்கியது. கைப்பேசிகளில் 112, 911 ஆகிய எண்கள் கைப்பேசியை பூட்டி வைத்திருந்தாலும் அவசர உதவிக்கு அழைக்கும்படி சில செல்பேசி வழங்குனர்கள் சேவை வழங்குகிறார்கள். இதைத்தான் குறிப்பிடுகிறீர்களா?

SOS குறியீட்டை நேராகவும் தலைகீழாகவும் குழப்பமின்றி வாசிக்க முடியும் என்பதால் SOS - Save our Soul என்று உயிர்காக்கும் அழைப்பாகவும் சொல்லப்படுகிறது. உலகலாவிய அபயக் குறியீடாகவும் SOS கருதப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.


நாம் தேர்ந்தெடுக்கும் எம்.எல்.ஏக்களை சரியாக வேலை செய்யவில்லையென்றால் திரும்ப பெறும் திட்டம் கொண்டு வந்தால் நாடு உருப்படுமா? - இளவரசு, சிதம்பரம் இது புதுமையான ஒன்றன்று.

'லோக்நாயக்' என அழைக்கப்பட்ட ஜெயப்ரகாஷ் நாராயண் 1960 ஆம் ஆண்டுமுதல் இதைவலியுறுத்திக்கொண்டேயிருந்தார்.

எம்.ஜி.ஆர். 1972ஆம் ஆண்டில் அ.தி.மு.க.வைத் துவக்கி எதிர்க்கட்சியாக இருக்கும்போது இதைப்பற்றிப் பல தடவை வலியுறுத்திக்கொண்டேயிருந்தார். ஆனால் அவர் ஆட்சியைப் பிடித்ததும் இதை மறந்துவிட்டார்.

1977 இல் மத்தியில் ஆட்சியைப் பிடித்து ஜனதாக் கட்சி ஆண்டபோதும் 1989ஆம் ஆண்டில் ஆட்சியைப் பிடித்துத் தேசீய முன்னணி ஆண்டபோதும் இந்தத் திட்டம் பற்றி அலசப்பட்டது. ஆனால் அரசியல்வாதிகளின் கடுமையான எதிர்ப்பால் செயல்வடிவம் பெறவில்லை.

2001 ஆம் ஆண்டில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் கொண்டுவரப்பட்ட 'பஞாயத்ராஜ்"சட்டத் திருத்தத்தின்படி அம்மாநிலத்தின் அனுப்பூர் நகராட்சியில் 2002 ஆம் ஆண்டு இது நடைமுறைப்படுத்தப் பட்டு , மக்களின் நலனுக்கு ஏற்பச்செயல்படாத உறுப்பினர்கள் திரும்ப அழைக்கப்பட்டனர். இரண்டாண்டுகளுக்கு முன் சட்டீஸ்கர் மாநிலத்தில் மூன்று நகராட்சி மன்றங்களில் இது செயல்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளாட்சி மன்றங்களில் செயல்படுத்தப்படும் இம்முறையைச் சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் கொண்டு வருவதற்கு அரசியல்வாதிகளே தடையாக உள்ளனர்.

சோம்நாத் சட்டர்ஜி நாடாளுமன்ற சபாநாயகராக இருந்தபோது இத்திட்டத்திர்கு ஆதரவளித்தார். "இம்பீச்மெண்ட்" மூலம் ஜனாதிபதியையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் பதவி நீக்கம் செய்ய முடியும்; நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மூலம் பிரதமரையும் முதலமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்ய முடியும் எனும்போது இந்த அதிகாரம் பெற்றுள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை ஏன் திரும்ப அழைக்கக் கூடாது என அவர் ஒரு கருத்தரங்கில் பேசும்போது வினவினார்.

இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டால் ஊழல் கறை படிந்த மற்றும் பொறுப்பற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களை மாற்றி நல்ல நிவாகம் தர முடியும்.

லட்சக்கணக்கில் செலவு செய்து தேர்தலைச் சந்திப்பதால் அரசியல் கட்சிகள் இதற்கு ஒத்துழைக்கா எனில், குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி, தன் உறுப்பினரைத் திரும்பப் பெற்றுவிட்டு மக்கள் விரும்பும் வேறொரு நல்லவரை அவ்விடத்திற்கு நியமிக்கலாம் எனச் சட்டம் கொண்டுவந்தால் ஒருவேளை அரசியல்வாதிகள் ஒப்புக்கொள்வார்களோ என்னவோ?

ஆள்கடத்தல் சமீபகாலமாக அதிகரித்துள்ளதற்கு சமூக உளவியல் ரீதியாக ஏதேனும் காரணங்களை காண்கிறீர்களா? - இனியவன், கரூர்ஆடம்பர வாழ்வுக்கு ஆசைப்படுவோரின் பணத்தாசை இது போன்ற குறுக்கு வழிகளைச் சிந்திக்கச் சொல்கிறது.

சின்ன் மற்றும் பெரியத் திரைகள் வழிகளைச் சொல்லித் தருகின்றன.

உளவியல் காரணங்களைத் தேடுவதைவிட சமூகம் மற்றும் பண்பாட்டு வீழ்ச்சி தொடர்பான காரணங்க்ளையே இதில் தேடவேண்டும்.

ஆள் கடத்தலுடன் பாலியல் வன்முறைகளும் சேரும்போது உளவியல் காரணங்களையும் தேடவேண்டும்.

ஏனெனில் இவ்வகையில் பணம் கோரப்படுவது குறைவே.

இவை மட்டுமின்றிக் கணவனையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு அடுத்தவனுடன் இளம் தாய்மார்கள் ஓடிப்போவதையும் இவ்வகைத் தொடர்புக்காக கணவன் அல்லது மனைவிகள் இவர்களால் கொல்லப்படுவதையும் சில நாட்கள் அல்லது வாரங்கள் பழகியவனுடன் கூட இளம் பெண்களும் மாணவிகளும் தம் பெற்றோரையும் குடும்பத்தையும் துறந்து ஓடிப்போவதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
இது தொடர்பான ரஸ்ஸலின் கட்டுரையையும் வாசிக்கவும்... http://inneram.com/2010111211844/kidnapes-government-media-and-people

மாமியாருக்கு வீடு கொடுப்பது அவ்வளவு பெரியா தப்பா? - மகேஷ்தப்பில்லை.

ஆனால் அசோக் சவான் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்ததுபோல் செய்யக்கூடாது.



சின்னத்திரை ஸீரியல்கள் தனிமனித ஒழுக்க மாண்பை வளர்க்கின்றனவா அழிக்கின்றனவா? - வசீகரன், பட்டுக்கோட்டைசின்னத் திரையில் சில நல்ல தொடர்களும் வருகின்றன. எனினும் அவற்றை மிஞ்சும் வகையில் பலவும் ஒழுக்கச் சீரழிவுக்கு வழி சொல்கின்றன. மனிதனின் மன நிலை எளிதில் இரண்டாவதிலேயே சாயும் வண்ணம் பலவீனமானது என்பதைக் கருத்தில் கொண்டு திரைப்படங்களுக்கு இருப்பது போலத் தொலைக்காட்சித் தொடர்களுக்கும் சென்ஸார் தேவை.

ஒரு திரைப்படத்தில் விவேக் நடித்த நகைச்சுவைக் காட்சியில் சின்னத்திரைக் கதாபாத்திரங்களின் முறையற்ற பாலியல் உறவுகள் தொடர்பான கதையமைப்பைக் கிண்டல் செய்திருந்தார்.



பர்தாவை தடை செய்யக் கோரும் பால் தாக்கரேவின் கருத்து மதவெறியா? அல்லது குற்றங்களை தடுக்க வேண்டும் என்ற அக்கறையா? - முஸ்தபா, காயல்பட்டினம்முதலாவது.

அது உலகறிததாயிற்றே!

இந்நேரம் தளத்தில் இது பற்றி ரஸ்ஸலின் அலசலில் சொல்லப்பட்டிருந்ததே?



டார்வின் சித்தாந்தம் உண்மையா பொய்யா? - தாமரைக்கண்ணன்சித்தாந்தமே தவிர நிரூபிக்கப்பட்ட அறிவியல் உன்மை இல்லை.

மனிதனின் அடுத்த பரிணாம வளர்ச்சி நின்றுவிட்டதா?

கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.comஎரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.
Source : http://www.inneram.com/2010111411885/vanagamudi-answers-14-11-2010
----------------------------------------------------------------------------------

No comments: