Thursday, November 21, 2019

வெற்றிடம்


Vavar F Habibullah

பிறந்தோம்,வளர்ந்தோம்,
வாழ்ந்தோம்,வீழ்ந்தோம்
மறைந்தோம் என்பது எல்லாம்
சாமானியனுக்கும்,சகலகலா
வல்லவனுக்கும் ஒன்று தான்.

வெந்ததை தின்று,விதியை
நொந்து,மரணத்தை சுவைத்து
வாழ்வை முடிப்பது என்பது
சாமானிய மனிதனுக்கும்
சரித்திர நாயகனுக்கும்
பொது விதி தான்.


முப்பத்திரண்டு வயதில்
கண்ணில் பட்டதை
எல்லாம் கைக்குள் அடக்கிய
மகா அலெக்சாண்டரின்
வெற்றிடத்தை நிரப்ப வந்த
ஜூலியஸ் சீஸர், அவனது
நெருங்கிய நண்பர்களாலேயே
குத்தி,கொலைச் செய்யப்பட்டு
மாண்டு போனான்.சீஸரின்
வெற்றிடத்தை நிரப்ப வந்த
நெப்போலியன் புற்று நோய்
கண்டு மாண்டு போனான்.

பாசிசத்தின் தந்தை
இத்தாலியின், முசோலினியை
அவன் தேசத்து மக்களே
கொன்று, மிலான் நகரில்
தலைகீழாக தொங்க விட்டு
செத்த பிணம் என்றும் பாராமல்
கற்களை எறிந்து தங்கள்
கோபத்தை தீர்த்து கொண்டனர்.
முசோலினியின் வெற்றிடத்தை
நிரப்புவேன் என்று சூளுரைத்த
நாசிசத்தின் தந்தை ஹிட்லர்
உலகை வெற்றி கொள்ள
நினைத்து அது முடியாத போது
தன்னைத் தானே சுட்டு
தன்னுடலை மாய்த்துக்
கொண்டான். உலகில்
வெற்றிடத்தை நிரப்ப
வந்தவர்களின் வரலாறுகளை
சரித்திரம் இவ்வாறு தான்
பதிவு செய்கிறது.

சும்மா கதை விடாம
நம்ம ஊர பத்தி ஏதாவது
சொல்லி தொலையும் ஐயா
என்று நீங்கள் சொல்வது
கேட்கிறது.....

தமிழ் நாட்டில், அரசியலில்
அண்ணாவின் வெற்றிடம்
கலைஞரால் நிரப்பப்பட்டது.
எம்ஜிஆரின் வெற்றிடம்
ஜெயலலிதாவால் நிரம்பியது.
கலைத்துறையில்....
கலைஞரின்,சிவாஜியின்
எம்ஜிஆரின் வெற்றிடம் இன்றும்
நிரப்பப்படாமல் தான் இருக்கிறது.

எம்ஜிஆர் ஒரு படத்தில்
பாடுவார்...
“முயல் கூட்டம் சிங்கத்தின்
எதிர் நிற்பதோ
அதன் முறையற்ற செயலை
நாம் வரவேற்பதோ....!”
இப்போதைய அரசியலில்
அண்ணா அறிவாலயத்திற்கு
கமல் தேவை இல்லை.
அதுபோலவே அதிமுக விற்கு
ரஜனியும் தேவை இல்லை.
இரண்டு கழகங்களிலும்
வெற்றிடம் இருப்பதாக
தெரியவில்லை.
Empty vessels always
Make more noise

Vavar F Habibullah

No comments: