Monday, September 3, 2018

ஐந்து நன்மைகள்.

நெரிசலான நாகர்கோயில் நகர வீதிகளில் எதற்காகவோ ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்கள்... யாருக்கும் எதற்கும் நேரமில்லை. ஓடுகிறார்கள், ஓடுகிறார்கள்...
ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த ஓட்டம் எங்கே போய் முடியும்?. என்ற கவலையில் நானும்... ஏனென்றால் அந்த கூட்டத்தில் நானும் ஒருவன் அல்லவா?

போத்தீஸ் சூப்பர் மார்க்கெட்டை நோக்கி என்னுடைய அன்றைய பயணம். போத்தீஸிலிருந்து தள்ளுபடி விலையில் கொஞ்சம் காய்கறிகள் வாங்க வேண்டும் (வீட்டுக்கார அம்மாவின் உத்தரவு)என்பது அன்றைய லட்சியம். கலக்ட்ரேட் ரோட்டில் வழியோர வாணிபம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களை கவர பல குரல்களில் சப்தமிடுகிறார்கள். அதில் சிலருடைய வசனங்களை கேட்கும்போது சிரிப்பு வரும். என்றாலும் இதெல்லாம் அவர்களுடைய வயிற்றுப்பிழைப்புக்காக என்பதை நினைக்கும்போது நம்மையறியாமல் ஒரு கவலையும் வரத்தான் செய்கிறது.


அன்றைய ஓட்டத்தில் ஒரு தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் ஒருவரின் வித்தியாசமான சப்தம் என்னைக் கவர்ந்தது. “சார் என்னிடமிருந்து காய்கறிகள் வாங்கினால், சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் வாங்குவதை விட உங்களுக்கு ஐந்து நன்மைகள் அதிகம் அந்த நன்மைகள் என்னவென்று தெரிய வேண்டுமா”.

திரும்பி பார்த்தேன். ஒரு அழுக்கு கைலியும் சட்டைக்கு பதில் தோளில் ஒரு துண்டும்அணிந்த ஒரு இளைஞன். பக்கத்தில் இருந்த செயறில் ஆறேழு வயதில் ஒரு பையன். அவன்தான் கேஷியர் என்று நினைக்கிறேன். நான் வாங்க நினைத்த என்னுடைய லிஸ்ட்டிலுள்ள அனைத்து காய்கறிகளும் இவரிடமும் இருக்கிறது. இன்று இவரிடமிருந்து வாங்கினாலென்ன?. (வீட்டுக்காரிக்கு தெரிய வேண்டாம்).

“அந்த ஐந்து நன்மைகள் என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா”.

கண்டிப்பாக..... சார் என்னிடமிருந்து வாங்கும் காய்கறிகளுக்கு நீங்கள் ஜி எஸ் டி தரவேண்டாம். நூறு ரூபாய்க்கு ஐந்து ரூபாய் லாபம். முதல் நன்மை.

சார் நீங்கள் வாங்கும் பொருட்களை கொண்டு போக நான் தரும் கவர் ஃப்றீ... சூப்பர் மார்க்கெட்டில் இந்த கவருக்கு குறைந்தது ஐந்து ரூபாய் தர வேண்டும். ( நாம் காசு கொடுத்து வாங்கும் கவரில் அவர்களுடைய விளம்பரம்). இது இரண்டாவது நன்மை.

மூன்றாவது நன்மை என்ன என்று அறிய ஆவலுடன் அவரைப் பார்த்தேன். சார் சூப்பர் மார்க்கெட்டில் அவர்கள் கேட்கும் விலையை நீங்கள் கொடுக்க வேண்டும். எங்களிடம் நீங்கள் விலை பேசி வாங்கலாம். நூறு ரூபாய் பொருளை 80 ரூபாய்க்கு கேட்டாலும் தருவோம். ஏனென்றால் எங்கள் வயிற்றுப்பிழைப்பு இது. எங்களுக்கு வேறு வருமானம் ஒன்றும் இல்லை. 20 ரூபாய் லாபம் இது மூன்றாவது நன்மை.

சரிதான் என்று தலையாட்டிவிட்டு அவரையே பார்த்தேன். “சார் நான்காவது இந்த காய்கறிகள் பக்கத்து கிராமங்களில் நாங்களே இயற்கையாக பூச்சிக்கொல்லி மருந்துகள் ஒன்றும் தெளிக்காமல் விவசாயம் செய்தது. இந்த காய்கறிகளை சாப்பிடுவதால் உடலுக்கு எந்த தீங்கும் வராது சார்...

அவர் சொல்வது அனைத்தும் சரியாகவே எனக்கு பட்டது. மேலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் அவர்கள் கேட்கும் விலையை கொடுத்து, விஷம் சேர்த்த காய்கறிகளை கியூவில் நின்று வாங்குவதற்கு தயாராகும் நாம் இதையெல்லாம் சிந்திக்கிறோமா?.....

சிந்தனையில் நிற்கும்போதே நான் கொடுத்த லிஸ்டில் உள்ள காய்கறிகளை பேக் செய்து கொடுத்தார். அவர் கேட்ட தொகையை கொடுத்தேன். பிறகு நான் அவரிடம், “எல்லாம் சரி ஐந்தாவது நன்மை என்னவென்று சொல்லவே இல்லையே” என்றேன் ஆவலுடன்.

அவர் செயறில் இருந்த பையனை காண்பித்து, “இது என்னுடைய மகன். இவனுக்கு ஏழு வயதாகிறது. இவனுடைய அம்மா ஒரு ஆக்சிடென்றில் இறந்து விட்டாள். இவனுக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டது. இவனுடைய மருத்துவத்திற்காக நான் யாரிடமும் கையேந்தியதில்லை. நீங்கள் விலை பேசாமல் கொடுத்த இந்த பணத்தின் ஒரு பகுதி இவனுடைய மருத்துவ செலவிற்கு உபயோகப்படும். இதுவும் நீங்கள் செய்யும் ஒரு சாரிட்டிதான் இதற்குரிய நன்மை இறைவனிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கும். இதுதான் நான் சொன்ன ஐந்தாவது நன்மை.

புன்னகையோடு அவர் சொல்லி நிறுத்தினாலும் அவருடைய கண்கள் நிறைந்திருந்தது....
நானும் கண்ணீரை மறைக்க முயன்று தோற்றேன்.

இது போன்ற துக்கங்களும், துயரங்களும் வழியோரங்களில் வியாபாரம் செய்யும் பலருக்கும் இருக்கலாம். நம்மால் இவர்களுக்கெல்லாம் உதவ முடியுமா???.

கோடிக்கணக்கில் மூலதனமுள்ள சூப்பர் மார்க்கெட் முதலாளிகளுக்கும், கார்ப்ரேட்டுகளுக்கும் பாக்கெட் நிறைக்க நாம் கொடுப்பதில் ஒரு பங்கை இதைப்போன்ற வழியோர வியாபாரிகளுக்கும் கொடுத்து உதவுவது அல்லவா உண்மையில் சாரிட்டி(தொண்டு).....

#படித்ததில் பிடித்தது. சில மாற்றங்களுடன்*
Madhumathi Suresh:

No comments: