Sunday, September 2, 2018

தாகத்திற்குத் தண்ணீர் தர தயங்குவதில்லை இவர்கள்.

byHussain Amma

அமீரகத்தில் பெரும்பாலான அரபிகளின் வீடுகளில், வாசலில் இவ்வாறு ஒரு குடிநீர் குளிர்பதனப் பெட்டி இருக்கும். யார் வேண்டுமானாலும் அதில் நீர் அருந்தலாம். தவிர எவ்வளவு வேண்டுமானாலும் பாட்டில்களில் தண்ணீர் பிடித்துக் கொண்டு செல்லலாம்.

அருகில் வேலை செய்யும் கட்டிடப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள், சாலை சுத்தம் செய்பவர்கள், அந்த வழியே செல்பவர்கள் என்று ஒரு நாளில் எவ்வளவோ பேர் அதில் நீரருந்தி, கையில் கொண்டு வரும் சில 5 லிட்டர்

பாட்டில்களிலும் பிடித்துச் செல்வார்கள்.


அயலில் வசிக்கும் ஆசிய குடும்பத்தினர்களில் சிலர், தம் குடும்பத்தின் ஒரு நாளைய குடிநீர் தேவைகளுக்கான தண்ணீரைப் பெரிய பெரிய கேன்களில் பிடித்துச் செல்வார்கள்.

தெருவில் விளையாடும் சிறுவர்கள், மைதானத்தில் கால்பந்து, கிரிக்கெட் விளையாடி களைத்துப் போகும் இளையோர்கள், வாக்கிங், ஜாக்கிங் என உடல் இளைக்கவென அவ்வழியே நடப்போர் இதில் நீரருந்தி ஆசுவாசம் கொள்வார்கள்.

சீஸனுக்கு மட்டும் வைக்கும் தண்ணீர்ப் பந்தல் போலல்லாமல், வருடம் முழுதும் இருக்கும். வளைகுடா நாடுகளில் ஆறுகள் கிடையாது; கடல் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டுத்தான் குடிநீர் ஆக்கப்படுகிறது. மின்சாரம் போல, தண்ணீருக்கும் பயன்படுத்தும் அளவைப் பொறுத்து கட்டணமும் உண்டு. எனினும், தாகத்திற்குத் தண்ணீர் தர தயங்குவதில்லை இவர்கள்.

இறைவன் அருளால்
இவ்வுலகத்தின் தண்ணீரைக் கொடுத்து,
மறுமைக்கான குளிர்நீரைப் பெறுகிறார்கள்!!

#Walking_Watching

Hussain Amma

No comments: