Tuesday, April 3, 2018

இதயக்கூடு திறந்துவைத்து...

ஒருவன்
நல்லவனாய் இருப்பதை
ஏமாளியாய் இருக்கிறான்
என்று நகைப்பவர்கள்
ஏமாற்றுக்காரர்கள் என்று 
உறுதியாய்த் தங்களை 
அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்
நல்லவன் என்பது
ஏமாளி என்று பொருள்தரும்
குணாதிசயமன்று
எந்த நல்லவனும்
ஏமாந்து நிற்கத் தயாராய் 
இருப்பதே இல்லை
நல்லவனாய் இருப்பதென்பது
உன்னையும்
நல்லவனாய்க் காண 

விழைகிறேன் என்பதற்கான 
அறிவிப்புப் பலகை
அவ்வகை அறிவிப்புகளின் 
சங்கமங்களால்
நல்லோர் 
நல்லோரைக் கண்டு
கட்டியணைத்து 
அன்புபாச முத்தமிட்டு
மரணம்வரை உயர்ந்துவாழ
உறுதி எடுக்கிறார்கள்
அதுவே 
நல்லவர்கள் பெருகவும்
ஏமாற்றுக்காரர்கள் அழியவும்
இறைவன் எத்திவைத்த 
ஏற்பாடு
இறைவன் 
இருக்கிறான் என்று 
நம்புவதாலேயே
உள்ளங்கையில் 
இதயக்கூடு திறந்துவைத்து
யாதொரு சூதுமின்றி
வெளிப்படையாய்
உரையாடுகிறார்கள்
நல்லவர்கள்
அப்படி
உயிரின் 
சிற்றிழைகளும் தெரிய
அளவளாவும்
ஒருவனைக் கண்ணுற்றதும்
சிக்கிவிட்டான் ஓர் அடிமையென்று 
சப்புக் கொட்டுபவன்
மனிதனை வெட்டித் திண்ணத்
தேடியலையும்
மனிதக்கறி வெறியன்
அவ்வாறான 
மனிதக்கறி வெறியர்களைக் கண்டால்
தானும் வெறியனாய் ஆக
எந்த ஒரு நல்லவனும் 
சிற்சிறு நொடியும்
எண்ணுவதே இல்லை
மாறாக
அவன் நிழல்தீண்டும் 
தளத்தையும் விட்டு
வெகுதூரம் விலகி 
நல்லோர் வாழும்
சுவனபுரிக்குள்ளேயே
ஓடிப்புகுந்து 
பெருமூச்சுவிடுவான்
அவ்வகைப் 
பெருமூச்சுகளால் ஆனதே
இம் மண்ணிலேயே 
சொர்க்கம் காணும்
மகத்துவத்தின் பெருவெளி

அன்புடன் புகாரி
நினைத்துப் பார்க்கிறேன் - இந்த புன்னகைக்குக் காரணம் நான் ஒரு போட்டியில் வெற்றி பெற்று பரிசு வாங்கியதால்தான். இது நடந்தது சவுதி அரேபியாவில். சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு. போட்டி என்றால் பெரிய போட்டியென்றெல்லாம் இல்லை. சில ஜோடிகளும் சில பேச்சிலர் கேடிகளும் சேர்ந்து ஜோடிகளுக்கிடையே சில போட்டிகள் வைத்தார்கள். அதில் முதலாவதாக வந்தோம். இனிமையான நாட்கள் அவை. மறக்கவே முடியாது.

No comments: