Saturday, October 7, 2017

கட்டிப் போடப்பட்ட வெள்ளாடு..!. / நிஷா மன்சூர்

#கமலா சுரைய்யா
அறியாமையின் தூணில்
கட்டிபோடப் பட்ட ஜந்து நான்
ஒருமுறை தூணைச் சுற்றி
மீண்டும் திரும்பிப்போய்
இன்னொரு முறை சுற்ற மட்டுமே முடியும்
வெடித்துச் சிதறும் வெடிகுண்டுகள்
என்னை வழிமறித்து நிறுத்துகின்றன.
எனக்கு இந்தக் காலத்தின் உளவியல்
அப்படியொன்றும் பிடிபடுவதில்லை
அதற்கு முலையூட்டும்
தத்துவ சிந்தனை என்று அவர்கள் அழைக்கும்
தாயையும் எனக்குப் புரியவில்லை
எனக்கு அறிமுகங்கூட இல்லாத
ஒருவரைக் காயப்படுத்த
என்னால் முடியாது

இன்று நிலவும் வெறுப்பை
என்னால் பங்கிட முடியாது
நான் எவருடையதோ ஒரு வளர்ப்பு மிருகம்.
காலத்தில் நெருங்கி வந்து
மெல்லமெல்ல நொறுக்குவதற்காகக்
கைவிடப்பட்ட
பழைய விளையாட்டுப் பண்டம்
பசி முற்றி
பிளாட்டோவின் 'குடியர'சையும்
காளிதாசனின் 'சாகுந்தல'த்தையும்
சொந்த நம்பிக்கைகளைப் பற்றிய
குர்ஜியேவின் அலசலையும்
அப்புறம்
நிச்சயமாக
வால்ட் விட்மனின்' புல்லின் இதழ்க"ளையும்
மெய்ந்து தீர்த்த
வெள்ளாடு நான்.
வெள்ளோட்டம் பார்க்க வரும்
கசாப்புக்காரர்களுக்குப் போதுமான
கொழுத்த இறைச்சி எனக்கில்லை
நோய்க்கே நோய்வந்தது போன்றவள் நான்
என்னை இரவு உணவாக்கிக் கொள்ள
யாருக்கும் விருப்பமிராது
வெறுப்புக்கும் ஆயுதச் சந்தைகளுக்கும்
தான் தோன்றிக் கொலைகளுக்குமான
இந்த நூற்றாண்டில்
இது ஒரு வரமேதான்.
( கமலா சுரைய்யாவின் கடைசிக் காலக் கவிதைகளில் ஒன்று)
http://tamil.webdunia.com/…/rememb…/0906/01/1090601015_1.htm

நிஷா மன்சூர்


No comments: