Tuesday, October 24, 2017

பேசாத படத்தின் குழந்தை பேசுகிறது ....

அப்துல் கபூர் 

பாசத் தொட்டிலில்
எனை தாலாட்டி
உணர்வு மேலோங்க
உள்ளம் பூரிக்க
உணவு ஊட்டுகிற
அருமைத் தாயே
கண்கள் கலங்காதே ....
சுற்றுச் சூழலில்
மாசு படர்ந்த
காற்றை சுவாசிக்கிற
தூசு படர்ந்த
சோக வாழ்க்கையில்
எனை வாழ வைத்திட
காசு தேடி
போராடும் தாயே
கண்கள் கலங்காதே ....

வயிறு பசித்து
வதை படும்
ஏழைத் தேவதை
சீவாத தலையோடும்
சிரிக்கிற முகத்தோடும்
அன்பை விளம்பி
விழியில் வழிகிற
கண்ணீரை துடைத்து
தாயை தேற்றி
ஆறுதல் கூறுகிறது ....
கையின் இடுக்கில்
உடைந்த பிஸ்கட்டோடும்
மனசின் அடுக்கில்
உடையாத மகிழ்ச்சியோடும்
நகர்கிற வீதிகளில்
வாழ்க்கை நகர்கிறது ....

அப்துல் கபூர் 

No comments: