Thursday, October 5, 2017

நாணமே நீயிடும் அரிதாரம் நீ

நாணமே நீயிடும் அரிதாரம் 
நீ 
வைகறைப் பனிவிழும் 
புல்மடியோ - மலை 
வாழையில் வெடித்த பொற் 
கனிநிலவோ
அந்தி 
வானத்துச் சந்தன 
ஒவியமோ - நதி 
கடலுக்குச் சூட்டிடும் 
நுரைச்சரமோ

முழு 
நிலவு உன் கூந்தலில் 
முகங்கழுவும் - வன 
வண்டுகள் கண்களைக் 
காதலிக்கும்
வான் 
வசந்தம் உன் இளமையில் 
அசைந்தாடும் - தேன் 
அருவியுன் இடைவிழ 
மனுப்போடும்
உயிர் 
எழுத்துக்கு உன் பெயர் 
உயிராகும் - உன் 
நாணமே நீயிடும் 
அரிதாரம்
நீ 
நடப்பது நிலத்துக்குத் 
தெரியாது - உன் 
நினைவின்றி கனவே 
விளையாது
மெல்ல 
முகர்ந்தால் துவள்வது 
அனிச்சமலர் - கண் 
பார்வையில் துவளும் நீ 
என்ன மலர்
உன் 
நகத்தையே உறிஞ்சும் 
செந்தேனீ - பொன் 
விரலுக்கு வேண்டாம் 
மருதாணி
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
அன்புடன் புகாரி

No comments: