Monday, April 6, 2015

தொப்புள் கொடி சமாச்சாரம்

தொப்புள் கொடி சமாச்சாரம்

ஒரு காலத்தில், குழந்தை பிறந்த சற்று நேரத்தில் தொப்புள் கொடியை வெட்டி, குழந்தையை பிரித்தெடுத்த பின்னர் தாயின் கருப்பையில் அடுத்த வெளியேற்றத்திற்காக காத்திருக்கும் ஓரு சிறு மாமிச பிண்டம் போல் தோற்றம் தரும் நச்சுக்கொடியை விரைந்து அகற்றி அதை மண்ணில் புதைத்து விடுவது வழக்கமாக இருந்தது.
முன்னெல்லாம் குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியை வெட்டி விடுவார்கள் . அது தவறு, சற்று நேரம் தாமதித்து கொடியை வெட்டினால் குழந்தைக்கு நச்சுக் கொடியிலிருந்து சற்று அதிக இரத்தம் ஓடி வர வாய்ப்புண்டு.அந்த இரத்தம் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு நன்மை பயக்கும். இதுபோக ஒரு 50மில்லி அளவு இரத்தம் நச்சுக்கொடியில் தேங்கி கிடக்கிறது.
இந்த இரத்தத்தை பிழிந்து எடுத்து இதற்கான இரத்த வங்கிகளில் சேமித்து வைத்தால் பின்னாளில் குழந்தைக்கு ஏற்படும் இரத்த சம்பந்தமான மற்றும் மரபணு சம்பந்தமான நோய்களின் தாக்குதலில் இருந்து நோய் பாதித்த குழந்தையை காப்பாற்ற இயலும் என்பது மருத்துவ ஆராய்ச்சி தரும் தகவல்.
இந்த இரத்தத்தில் வெள்ளை அணு, சிவப்பு அணு, பிளேட்லட் அணு மற்றும் ஸ்டெம் செல் அணு போன்றவை கலந்து கிடக்கின்றன. சில வகை இரத்த புற்று நோய், இரத்த சோகை மற்றும் மரபணு சம்பந்தமான குடும்ப நோய்கள் இந்த குழந்தையை பின்னாளில் தாக்கினால் சேகரித்து வைத்த இந்த தொப்புள் கொடி இரத்தத்தை பயன்படுத்தி குழந்தையை காப்பாற்ற இயலும் என்பது மருத்துவ ஆராய்ச்சி தரும் நம்பிக்கை.
இந்த இரத்தத்தை பயன்படுத்தி நோய் வாய்ப்பட்ட குழந்தைகளை காப்பாற்றியதாக எந்த மருத்துவ குறிப்பும் இதுவரையில் இல்லை. அமெரிக்க குழந்தை மருத்துவ கழகமும் சரி, இந்திய குழந்தை மருத்துவ கழகமும் இந்த சிகிச்சை முறையை ஏற்று கொள்ளவில்லை. இதுபற்றி தங்கள் ஐயப் பாட்டை வெளிபடுத்தி வருகின்றன.
இது இவ்வாறு இருக்க,
நாகர்கோவில் நகரில் சில பிரசவ மருத்துவ மனைகள் பிரசவத்துக்காக வரும் தாய்மார் களிடம் தொப்புள் கொடி இரத்தத்தை சேகரிப்பது நன்மை பயக்கும் என்ற தவறான தகவலை பரப்பி வருகின்றனர். இதற்காக 50000 ரூபாய் வரையில் பணத்தை பெற்று வருகின்றனர். இந்த இரத்தத்தை சேகரித்து வைக்க உருப்படியான அரசு அநுமதி பெற்ற எந்த இரத்த வங்கியும் நாகர்கோவில் நகரில் இல்லை. இந்த இரத்தத்தை சேகரித்தால் மட்டும் போதாது, இது கெட்டு போகாமல் பாதுகாக்க வருடா வருடம் கணிசமான பணமும் செலுத்த வேண்டும். அரசு இரத்த வங்கிகள் இந்த பணியை செய்வதில்லை. தனியார் தொப்புள் கொடி இரத்த வங்கிகளை நம்புவதற்கு இடமில்லை.. இப்படி சேமிக்கும் இந்த இரத்தம் பின்னாளில் அந்த குழந்தைக்கு பயன்படுமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. குழந்தை வளர்ந்து வாலிபன் ஆனபிறகு இந்த இரத்தத்தை பயன்படுத்த இயலாது. குடும்ப மரபணு சம்பந்தமான நோய் குழந்தைக்கு இல்லை என்றால் இந்த இரத்த சேகரிப்பால் எந்த பலனும் இல்லை.
தொப்புள் கொடி இரத்தம் பயன்படுத்தி குழந்தைகளை நோயினின்றும் பாதுகாத்த தாக அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் கூட தகவல்களை தரவில்லை. மேநாடுகள் கூட இந்த விசயத்தில் மவுனத்தையே பதிலாக தருகின்றன.
பெற்றோர் ஒப்புதலே இதில் முக்கியம். மகப் பேறு நிபுணர் இதற்காக சொல்லும் காரணங்கள் மிகவும் முக்கியமானவை. நாகர் கோவில் நகரில் " ஸ்டெம் செல்" சிகிச்சை அளிக்க சான்றிதழ் பெற்ற மருத்துவ மனைகள் இல்லை.
ஸ்டெம் செல் தெராப்பி பற்றியும், கார்டு பிளட் பேங்க் பற்றியும் தெரிந்து கொள்ளவே இந்த ஸ்பெஷல் பதிவு.
 Vavar F Habibullah

No comments: