Thursday, April 16, 2015

எழுதப்படாத என் கவிதை..!! நெஞ்சில் கனக்கும் அந்தக்கவிதை !

-நிஷா மன்சூர்

ஒரு அனுபவத்தை எழுத நினைத்தேன்.
அவ்வளவு துல்லியமாக எழுதத் துணிவில்லை
அவ்வளவு உண்மையாக எழுத மனமில்லை
சிறிதளவே சேர்க்கப்படும் கற்பனைகூட
அந்த அனுபவத்தின் சாரத்தை நீர்த்துவிடக்கூடுமென்பதால்
கூட்டிக்குறைத்து எழுதவும் இசையவில்லை.
போகட்டும் இந்த எழவு என்று தூக்கியெறியவும் முடியவில்லை.
இன்னும் மனதில் உருக்கொண்டு உருக்கொண்டு
ஓரிரு வரிகளாய் மலருமோ
அல்லது ஒரு புன்னகையாய்
ஒரு தழுவலாய்
ஒரு முத்தமாய்
ஒரு செல்லத் தட்டலாய்
வெளிப்பட்டு சூழலை அழகாக்குமோ
அல்லது
கழிவுநீரில் கரைந்தொழியும் உயிரணுக்களாய்ச்
சிதைந்தழியுமோ தெரியவில்லை.
நெஞ்சில் கனக்கும் அந்தக்கவிதையை
இந்த இடியோ
இந்த மின்னலோ
இந்த மழைத்துளிகளோ
கைப்பற்றிப் போகாதவரை
எப்படியாவது எழுதிவிடுவேன்
அதற்குள் நான் மரணித்துவிட்டால்
யாராவது ஒரு சஹிர்தயன்
காற்றில் மிதந்தலையும் என்
அந்தக்கவிதையை
எழுதியே தீருவான் எனப் பெரிதும் நம்புகிறேன்..!!

நிஷா மன்சூர்

No comments: