Tuesday, May 13, 2014

ஒரு கேள்வியும், ஒரு பதிலும் சில மழுப்பல்களும்...!!

ஒரு கேள்வியும், ஒரு பதிலும் சில மழுப்பல்களும்...!!

-நிஷா மன்சூர்

அரவிந்தன் நீலகண்டன்,
உங்கள் தமிழ்ஹிந்து தள கட்டுரைகளையும் தமிழ்பேப்பர் கட்டுரைகளையும் படித்திருக்கிறேன்,
உங்கள் வாசிப்பும் உழைப்பும் மதிக்கத் தக்கது.
உங்களுக்கு தர்க்க ஞானமும்,எந்தக் கருத்தையும் உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் அபார திறமையும் வாய்த்திருக்கிறது.

எந்தக் கருத்தை முஸ்லீம்கள் முன்வைத்தாலும் அதை திசைதிருப்பி
அவர்களை உணர்ச்சி வசப்படுத்தி நீங்கள் விரும்பும் விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறீர்கள்.

நிற்க,
என்னைப் பொருத்தவரை நான் ஆன்மீகவாதி.
அவரவர் அவரவர்க்கான தனித்துவத்துடன் அவரவருக்கேயான
பிரத்யேக நம்பிக்கைகளுடனும் பிறர் நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் மதித்தும் வாழமுடியும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவன்.
எந்த ஒரு சமூகம் குறித்தும் அவதூறுகளைக் கிளப்புவதையும்
வெறுப்பை உண்டாக்குவதையும் கடுமையாக எதிர்க்கிறேன்.

தொடர்ச்சியான உங்கள் செயல்பாடுகள் மூலம் நீங்கள் முன்னிருத்தும் நிலைபாடு என்ன....??
நீங்கள் எதிர்பார்ப்பது என்ன...???
முஸ்லிம்கள் இந்த நாட்டில் எப்படி வாழவேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்....????
இந்த நாட்டில் அனைத்து மதத்தினரும் சுமுகமாக வாழ நீங்கள் முன்வைக்கும் தத்துவம் என்ன...???

சுமுகமான,புரிதல்களுக்கு தயாரான மனோபாவத்திலேயே நான் இந்தப்பதிவை இடுகிறேன்,
தயைகூர்ந்து இதை திசைதிருப்ப வேண்டாம்...!!
நாகரீகமான எதிர்வினைகளை எதிர்பார்க்கிறேன்....!!

#‎மீண்டும்‬ சொல்கிறேன் உங்களைக் காயப்படுத்துவதோ கடுப்பேத்துவதோ என் நோக்கம் அல்ல...!!

அரவிந்தனின் பதில்;
------------------------------

நான் இஸ்லாமிய கிறிஸ்தவ அல்லது நவீனத்துவ தாக்கங்கள் அனைத்தும் இல்லாத ஒரு தூய பழமைவாத பாரதிய மரபையோ பொற்காலத்தையோ எதிர்நோக்கவும் இல்லை அத்தகைய ஒரு பழமைவாத பொற்கால கனவில் எனக்கு நம்பிக்கையும் இல்லை.

இஸ்லாமியர்கள் எப்படி வாழ வேண்டும் என நான் கருதுகிறேன் என கேட்கிறீர்கள். அதை சொல்ல நான் யார்? எந்த ஒரு மனிதனும் எப்படி வாழ வேண்டும் என்று சொல்ல கட்டுப்படுத்த எனக்கு எவ்வித உரிமையும் இல்லை. இந்த பண்பாட்டின் பன்மை பேணும் மரபை அழிக்கும் ஒற்றைத்தன்மை கொண்ட மனப்பரவல்களை நான் எதிர்க்கிறேன். அவ்வளவுதான்...!!

எனது கேள்வி;
---------------------
உங்கள் நம்பிக்கைகளை நான் மதிக்கவும் என் நம்பிக்கைகளை நீங்கள் மதிப்பதுமான பரஸ்பர சாத்தியங்கள் ஏற்படாதா....?

அரவிந்தன் பதில்
---------------------------
மதிப்பது என்பது வேறு...பொது புலத்தில் அனைவருக்குமானதாக முன்வைக்கப்படும் போது அதை கேள்விக்குள்ளாக்குவதென்பது வேறு

எனது கேள்வி;
--------------------------
மதிப்பது சாத்தியமில்லை,எனில் சகலத்தையும் அடித்து நொறுக்கிவிட்டு நீங்கள் நிறுவ முயல்வது என்ன என்பதுதான் என் பதிவின் ஆதாரமே...!!

##‪#‎பதில்‬  இல்லை...!!
                                  நிஷா மன்சூர்

No comments: