Thursday, July 8, 2021

திருக்குர்ஆன் என்பது உங்கள் இறைவன் உங்களுடன் நடத்துகின்ற உரையாடல்!

 Nazreen Salman



திருக்குர்ஆன் என்பது உங்கள் இறைவன்  உங்களுடன் நடத்துகின்ற உரையாடல்!

------------------------------------------------------

திருக்குர்ஆன் ஓர் அற்புதம்! வாழ்கின்ற ஓர் அற்புதம்!

அது யாவர்க்குமானது!

அதனை எடுத்துப் படிக்கும் உங்களுக்கு அது என்னவெல்லாம் செய்யும் தெரியுமா? 

திருக்குர்ஆன் -

உங்களைக் கேள்வி கேட்கும்!

கேள்வி கேட்கவும் வைக்கும்!

பதில்களைத் தேடவும் வைக்கும்!

உங்களை சிந்திக்க வைக்கும்!

வியக்கவும் வைக்கும்!

நற்செய்தியும் சொல்லும்!

எச்சரிக்கவும் செய்யும்!

உண்மையை உணர்த்தும்!

பொய்களைச் சுட்டிக்காட்டும்!

உங்களுக்கு வழியும் காட்டும்!  வழி தவறிச் சென்றால் - சுட்டிக்காட்டவும் செய்யும்!

கதை சொல்லும்! வரலாறுகளை எடுத்துக் காட்டும்! படிப்பினை கொடுக்கும்!

உதாரணங்கள் சொல்லும்!

உவமைகளைச் சொல்லி புரிய வைக்கும்!

எளிமைப்படுத்தித் தரும்!

ஆழமான சிந்தனைக்கும் சவால் விடும்!

வானத்தை நோக்கச் சொல்லும்! பூமியை உற்று நோக்கச் சொல்லும்! ஆராயத் தூண்டும்!

எந்த ஒன்றும் வீணுக்காக அல்ல என்பதை உணர வைக்கும்!

மனிதன் என்பவன் யார் என்பதைப் புரிய வைக்கும்!

நமக்குள்ளே இயல்பாக இருக்கின்ற மனிதத் தன்மையை வளர்த்தெடுத்திடும்!

வாழ்க்கை என்பது என்ன என்பதை எடுத்துச் சொல்லும்!

வாழ்வின் நோக்கத்தைப் புரிய வைக்கும்!

மரணத்துக்குப் பின் என்ன என்பதை ஆணித்தரமாக உணர வைக்கும்!

மனிதனின் நிரந்தர வெற்றி என்பது என்ன என்பதைச் சுட்டிக் காட்டும்!

சுவனத்துக்கு வழி காட்டும்! நரகம் வேண்டாம் என எச்சரித்தும் வைக்கும்!

மனித அறிவால் புரிந்து கொள்ள முடியாத மறைவான விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும்!

திருக்குர்ஆன் - உங்கள் மீது அன்பு செலுத்தும்!  இரக்கம் காட்டும்! உணர்வுகளைத் தட்டி எழுப்பும்!

உங்களுக்கு மகிழ்ச்சியூட்டும்! கண்ணீரை  வரவழைத்து அழவும் வைக்கும்!

உங்கள் மீது கோபமும் படும்! தீமையைக் கண்டால் - உங்களைக் கோபப்படவும் வைக்கும்!

மனக் குழப்பத்துக்கு மருந்தளித்திடும்! கவலைப்பட  வேண்டாம் என்று ஆறுதலும் சொல்லும்!

நல்லவை-அல்லவை பிரித்தும் காட்டும்!

சேர்க்க வேண்டுவனவற்றை சேர்த்தும் காட்டும்!

பாவத்தில் வீழ்ந்து விட்டால் - திரும்பச் சொல்லி அழைக்கும்!

திரும்பி விட்டால் - அரவணைத்தும் கொள்ளும்!

நம்பிக்கையூட்டும்! தட்டிக் கொடுக்கும்!

நன்மையைக் கொண்டு முன்னேறச் சொல்லும்! ஊக்கமூட்டும்!

எந்த ஒன்றையும் - தேர்வு செய்திட முழு அனுமதி அளித்திடும்!

ஆனால் - விளைவுகளையும் சுட்டிக் காட்டிடும்!

**

ஆமாம் சகோதரிகளே, சகோதரர்களே!

திருக்குர்ஆன் என்பது உங்கள் இறைவன்  உங்களுடன் நடத்துகின்ற உரையாடல்!

திருக்குர் ஆன் என்பது - ஒரு தடவை - அப்படியே படித்து "முடித்து" விட்டு எடுத்து அப்பால் வைத்து விடுகின்ற ஒரு நூலும் அல்ல!

அது அனுதினமும் - படித்துணர வேண்டிய வாழ்க்கைப் புத்தகம்!   

**

ஆனாலும் திருக்குர்ஆனிடமிருந்து "பலன்" பெற்றுக்கொள்ள ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே!

அது என்ன?

திறந்த மனதுடனே திருக்குர்ஆனிடத்தில் நீங்கள் வர வேண்டும்!

உள் நோக்கத்துடன் வந்தால் -

அதே திருக்குர்ஆன் உங்களுக்கு நஷ்டத்தையே அன்றி அதிகப் படுத்தி விடாது!

நம்பிக்கை கொண்டவர்களுக்கு அருளாகவும், அருமருந்தாகவும்  உள்ளவற்றையே இந்தத் திருக்குர் ஆனில் இறக்கியுள்ளோம். எனினும் அநியாயக் காரர்களுக்கு இது நஷ்டத்தையே அன்றி  அதிகரிப்பதில்லை! (குர்ஆன் 17:82)

திறந்த மனதுடன் வாருங்கள்!

உங்கள் இறைவனிடம் கொஞ்சம் உரையாடிப் பாருங்கள்!



 Nazreen Salman


No comments: