Wednesday, January 24, 2018

மேற்குச் சூரியன் ......அபு ஹாஷிமா

பாபா 
பழனி பாபா -
இமைகளின் மீது 
இருள் 
இறக்கி வைக்கப்பட்ட 
ஒரு சமுதாயத்தின்
விழி திறக்க வந்த 
வெளிச்ச விடியல் !
௦௦௦
கிழக்குகள் ஊட்டிய 
போலிக் கரிசன மதுவிலும் 
வடக்குகள் ஊற்றிய 
வஞ்சகக் கூழிலும்
காவிகள் கொட்டிய 
வெஞ்சினத் 
திராவக வெறியிலும் 
வாடிக் கிடந்த 
பிறைப் பயிர்களை 
தடை கிழித்து வந்து 
தலை நிமிர்த்தி வைத்த 
மேற்குச் சூரியன் !
௦௦௦

நசுக்கப்பட்டும் 
நெரிக்கப்பட்டும் 
காற்றைத்தேடிக் 
கைவீசிக் கொண்டிருந்த 
குரல்வளைகளுக்கு 
ஊமை சிறை உடைத்து 
சுதந்திர சுவாசம் தந்த 
உரிமைப் போராளி !
௦௦௦ 
அவன் பேசினான் -
மேடைகள் 
பட்டறைகளானது !
அவன் தீட்டிய 
சொல்லரிவாள்களின் முன்னே 
மரண வியாபாரிகளின் 
கொலை அருவாள்கள் 
முனை முறிந்து விழுந்தன !
௦௦௦௦
இடி 
மின்னல் 
மழை என
பகை மேகம் கிழித்து 
களம் இறங்கிய 
அவன் வேகம் கண்டு 
அரவக் குஞ்சுகளாய் 
அரண்டு நின்றது 
கணவாய்தாண்டி வந்த
கள்வர் கூட்டம் !
௦௦௦
தட்டி எழுப்பவும் 
தட்டிக் கேட்கவும் 
தணலாக வந்த 
தலைவனைக் கண்டு 
தரணிக்கே 
தன்மானம் வந்தது !
ஒடுக்கப்பட்ட இனத்தின் 
குருதி குடித்தே 
கொழுத்துத் திரிந்த 
நூலறுந்த நரிகளுக்கு 
அவமானத்தால் 
முகம் வெந்தது !
அகம் நொந்தது !
௦௦௦
மானத்திற்கும் 
அவமானத்திற்கும் 
வேற்றுமைத் தெரியாத 
இழி பிறவிகளின் 
இருட்டறைகள் 
சதிமானங்களின் 
"சங்"கமமானது !
ஒரு சகாப்தத்தை 
சத்தமில்லாமல் ஆக்கும் 
சகுநித்தனங்கள் 
அங்கேதான் 
"சிண்டு" கட்டிக் கொண்டது !
௦௦௦
பத்தினித் தாய் மார்பில் 
பால் குடித்து
உடல் வளர்ந்த 
உத்தமனின் உடலுக்கு
வெட்டுக்கள் 
பதினெட்டு !
௦௦௦
நாய்ப்பால் குடித்து வந்த 
பேய் மகன் வீசிய 
கோடரி வீச்சில் 
கோமகன் 
குடல் சரிந்தது ! 
அகம் அதில் 
ஈமானைச் சுமந்த 
அஹமது அலி என்னும் 
வேங்கைப் புலி 
மண்ணில் சாய்ந்தது ! 
௦௦௦
இனி எப்போதும் 
சாய்க்க முடியாத 
வரலாற்றின் 
வாரிசுகளாக 
அவன் 
விதைத்துச் சென்ற 
வீரத்தின் 
வித்துக்களுக்கு 
ஒருநாளும் இனி 
சாக்காடில்லை என்பது 
மதவெறி 
நோக்காடுகளுக்குத் 
தெரியவில்லை !
௦௦௦
வீரர்கள் 
வீழ்த்தப்படும்போதுதான் 
வாழவே ஆரம்பிக்கிறார்கள் !
வீழ்ந்து கிடந்த 
ஒரு சமுதாயம் 
ஆளும் வழிகளை
வகுத்துக்காட்டி 
பாபா 
வாழ்ந்து கொண்டிருக்கிறார் 
வரலாற்றின் பொன்னேடுகளில் !
@ எவ்வளவோ கவிதைகள் 
எழுதி இருக்கிறேன்.
எழுதிக் கொண்டுமிருக்கிறேன்.
இது போன்று நான் எழுதிய 
பழைய கவிதைகளை 
மீண்டும் படிக்கும்போது
சிலிர்த்துப் போகிறேன்.
பழனிபாபாவுக்கு 
ஷஹீதுகளுடைய அந்தஸ்தை 
வல்ல இறைவன் வழங்குவானாக !


No comments: