Monday, January 1, 2018

இல்லற வாழ்வே இனிக்கும் வாழ்வு !

Abu Haashima
இறைத்தூதர் திருமணம் செய்து வாழ்வதை வலியுறுத்திச் சொன்னார்களென்றால் ..
இல்லற வாழ்வின் இலக்கணம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இறைவன் இலக்கியமாகவே சொல்கிறான் .
எப்படி ?
#கணவன்_மனைவிக்கு_ஆடையாகவும்_மனைவி_கணவனுக்கு_ஆடையாகவும்_இருக்க_வேண்டும்.
என்று சொல்கிறான்.
கணவன் மனைவி உறவுக்கு
இறைவன் சொன்ன உவமானம்
உலகில் வேறு எவராலும் சொல்லப்பட முடியாத மிக அழகான
அற்புதமான உவமானம் !
ஆடையாக இருங்கள் என்று இறைவன் ஏன் குறிப்பிட்டான் ?
ஆடைதான் …
மானத்தைக் காப்பாற்றுகிறது !

உயிரை இழப்பதற்குக்கூட மனிதர்கள் முன் வருவார்கள்.
ஆனால் ...
மானத்தை உயிரைவிட மேலாக மதிப்பார்கள் !
ஆடையை துறந்துவிட்டு அலைவதற்கு அறிவுள்ளவன் எவனும் ஆசைப்பட மாட்டான் !
தன் ஆடையை மற்றவர்கள் அவிழ்த்து தன்னை அவமானப் படுத்துவதற்கும் அனுமதிக்க மாட்டான் !
அரைகுறையாக ஆடை அணிபவன் அரை மனிதன் !
அரை மனிதன் என்பவன்
அறிவு வளர்ச்சி அடையாதவன் !
பைத்தியக்காரர்கள்தான் ஆடையை கிழித்துக் கொண்டு அலைவார்கள் !
மிருகங்கள் ஆடையே அணிவதில்லை.
ஆடை அணியவில்லையே
என்று எண்ணி
அவை வெட்கப்படுவதுமில்லை !
உணவில்லாமல் வாழ்பவன் கூட உடையில்லாமல் வாழ மாட்டான் !
ஆடை …
சுவாசத்தைப் போன்றது !
சுவாசம் நின்று விட்டால்மனிதன் மய்யத்தாகி விடுகிறான்.
மய்யத்து தானாகக் குளிக்காது.
தானாக ஆடை அணியாது !
ஒரு மனிதனின் உடலில் இருந்து உயிர் உருவப்பட்ட பிறகு தன் மானத்தை காத்துக் கொள்ளும் தகுதியை அந்த உடல் இழந்து விடுகிறது !
அதனால்தான் …
மய்யத்து குளிப்பாட்டப்படுகிறது.
கபன் எனும் ஆடை அணிவிப்கப்படுகிறது !
உயிர் இருக்கும்வரை உடையோடு இருக்க வேண்டும் என்பது இறைவன் விதித்த கட்டளை !
இந்த கட்டளையின் ஆழ்ந்த பொருள் …
மனைவியின் மானத்தை கணவனும்
கணவனின் மானத்தை மனைவியும் காப்பாற்ற வேண்டும் .
காற்றில் பறக்க விட்டுவிடக் கூடாது என்பதுதான் !
இன்றைய ஆடைகள் எப்படி இருக்கின்றன ?
திருமணத்திற்கு முன்னரே சில ஆடைகள் கிழிந்து போய் விடுகின்றன.
அல்லது
கறைபடிந்து விடுகின்றன !
மற்றும் சில ஆடைகள்
கணவன் அல்லது மனைவியின் பெற்றோரால் உருவப்பட்டு விடுகின்றன.
சில இடங்களில் கணவனே இந்த பாவத்தை செய்து விடுகின்றான்.
இன்னும் சில இடங்களில் மனைவி.
மானத்தைக் காப்பாற்ற வேண்டிய
கடமை உள்ளவர்களே மானத்தை வேட்டையாடி விடுகின்றனர்.
மானை வேட்டையாடுபவர்களே சிறை வாசத்தை பெறும்போது மானத்தை வேட்டையாடுபவர்கள் எப்படி
சுக வாசத்தைப் பெற முடியும் ?
கணவன் மனைவி உறவென்பது ஆயிரங்காலத்துப் பயிர்.
அந்தப் பயிர் தளைத்து வளர்வதற்கு கணவன் மனைவி இருவரும் கருத்தொருமித்து வாழ்ந்தால் மட்டும் போதாது.
அவர்களின் பெற்றோரும் சுற்றமும் நட்பும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து நல்ல பண்புகளை ஊற்றி வளர்த்து அவர்களின் இல்லறப் பயிர்
பூத்துக் காய்த்து கனிந்து நல்ல விருட்சமாக வளர
உறுதுணையாக இருக்க வேண்டும்.
அப்படிச் செய்தால்
எல்லோருடைய இல்லறத் தோட்டங்களும்
நல்லறச் சோலையாக மலரும்.
ஆயிரங்காலத்துப் பயிராக வளரும்.


Abu Haashima

No comments: