Saturday, September 2, 2017

தியாகத் திருநாள் !


     (   எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )


                    உயர்வான  ஒற்றுமையை உளம்நிறையத் தியாகமதை
                       உலகினுக்கு உணர்த்திநிற்கும் உண்மைமிகு திருநாளாய்
                   நபிபெருமான் வழிநடப்போர் வாழ்வினிலே கடைப்பிடிக்கும்
                         நல்லஹஜ்ஜுப் பெருநாளை நாடெல்லாம் போற்றிடுமே !

                வாழ்நாளில் நல்லவற்றை வையகத்தில் செய்வார்க்கு
                     வாழ்நாளில் பெருநாளாய் வாய்த்துவிடும் ஹஜ்ஜுவுமே
               வாழ்வினிலே நல்லவற்றை மனமேற்றி நில்லார்க்கு
                      வாழ்வினிலே பெருநாளாய் அமைந்துவிடா ஹஜ்ஜுவுமே !


                கூத்தாடிக் கும்மாளம் அடிக்கின்ற கூட்டத்தார்
                   குறையுடைய வாழ்க்கையினை தேர்ந்தெடுத்த கூட்டத்தார்
               நபிபெருமான் வழிதன்னை புரிந்துவிடா கூட்டத்தார்
                      நாட்டினிலே ஹஜ்ஜுதனை நாடிவிடல் நல்லதல்ல !

              சன்மார்க்கம் நாடுவோர்க்கும் சமூகநலன் தேடுவோர்க்கும்
                  இம்மாநிலத்தில் ஹஜ்ஜு ஏற்றதாய் அமையுமன்றோ
             தியாகசிந்தை இல்லாரும் அர்ப்பணிப்பு செய்யாரும்
                 திருநாளாம்  ஹஜ்ஜுதனை  கடைப்பிடித்தல் முறையன்று !

             புத்தாடை  புனையுங்கள் புத்துணர்ச்சி பெற்றிடுங்கள்
                     மக்காவின் நாயகரை மறவாமல் நினைத்திடுங்கள்
            மூடத்தனைத்தை யெல்லாம் மூட்டைகட்டி வையுங்கள்
                     ஏழைகளின் சிரிப்பினிலே இறைவனையே காணுங்கள்  !

               மக்காவை தரிசித்து மாகடமை ஆற்றிடுங்கள்
                     பெற்றுநிற்கும் செல்வமதை மற்றவர்க்கும் உதவிடுங்கள்
               நற்றவத்தால் உபதேசம் பெற்றுவந்த நபிபெருமான்
                      உற்றதுணை எனநினைத்து ஒற்றுமையாய் வாழ்ந்திடுங்கள் !

                தக்கோராய் வாழுதற்கு மக்காவை தரிசியுங்கள்
                       தரமிக்க குரான்தன்னை தவறாமால் ஓதுங்கள்
                உண்மையுடன் ஹஜ்ஜுதனை உளமார கொண்டாடி
                       உலகமெலாம் நன்மைவர ஒழுக்கமுடன் வாழுங்கள் !

                  ஹஜ்ஜுசெலும் நபிபக்தர் கடமையினைப் போற்றிடுங்கள்
                         ஹஜ்ஜுவெனும் திருநாளை கண்ணியமாய் பார்த்திடுங்கள்
                  கருணையன்பு பாசமுடன் ஹஜ்ஜுநாளில் இருந்திடுங்கள்
                           கையெடுத்து வணங்கிநின்று கடவுளையே போற்றிடுங்கள் !

 எம் . ஜெயராமசர்மா

 from: Muduvai Hidayath <muduvaihidayath@gmail.com>

                   

No comments: