Friday, February 14, 2014

ஐ லவ் சென்னை எப்பவும்

சென்னை வந்து இந்த மாதத்தோடு ஒன்பது வருடங்கள் ஆகின்றன. இந்த வருடங்களில் சென்னையின் வரலாற்றில் எல்லாம் இடம்பிடிக்கவில்லை தான். ஆனால் வருங்காலத்தில் நான் என் வரலாற்றை எழுதினால் பெரும் சாட்சியாய் இருக்கப் போவது சென்னை தான்..

சென்னை மீது எப்போதும் பெருங்காதல் உண்டு.. பெருங்காதலின் உபவிளைவாய் அவ்வப்போது கோபமும், சலிப்பும் கூட ஏற்படுவது உண்டு தான்... எந்த ஊருக்குக் கிளம்பினாலும் திரும்பி வர விரும்புகிற இடமாய் சென்னை தான் இருக்கிறது. சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களும் சரி, பெண்களும் சரி சொந்த ஊர்ப் பெருமை பேசுவதோ, ஊர் திரும்புதலை பற்றி யோசிப்பதோ குறைவுதான். ஆதிக்கத்தின் கீழ் இருப்பதை யாரும் விரும்புவதில்லை தானே?

பயங்களும், குழப்பங்களும் நிறைந்த என் பால்ய காலத்தை எப்போதுமே நான் நினைவுபடுத்திக் கொள்ள விரும்புவதில்லை.. நினைவு தெரிந்த நாளில் இருந்தே அந்த ஊரின் மூச்சுத் திணறலில் இருந்து வெளியேற வேண்டும் என்பதே கனவாய் இருந்தது. சென்னைக்கு முதலில் வந்தபோது வேலையே இருக்கவில்லை.. வேலை கிடைத்து விட்டதாய் வீட்டில் பொய் சொல்லி, தி.நகர் தராசு அலுவலக வாசலில் அப்பாவை நிற்கவைத்து, அதெல்லாம் பெரிய டிராமா...:)

சென்னையில் வேலை இல்லாமல் எத்தனையோ மாதங்கள் இருந்திருக்கிறேன். சுத்தமாக பணம் இல்லாமல், சாப்பாடு இல்லாமல் இருந்த போதும் மனதில் நம்பிக்கை மட்டும் குறைந்ததே இல்லை.. மாநகரங்களின் சுதந்திரத்தை சின்ன டவுனில் குப்பை கொட்டியவர்களால் தான் புரிந்து கொள்ள முடியும். ’’கொஞ்சம் நடந்துட்டு வரேன்’’ என்கிற வாக்கியத்தையே சென்னையில் தான் உச்சரிக்க முடிந்தது.. ஊரில் சொன்னால் ‘’நடக்கப் போறியா என்னாத்துக்கு?’’ என தலையில் கொட்டு விழும்.

நினைத்த நேரத்தில் தியேட்டர்களில் படம் பார்க்கலாம், தனியாக பயணிக்கலாம் (பயணம் சிக்கல் இல்லாதது என சொல்ல முடியாது ) மாலை ஆறு மணிக்கு பறவைகள் கூடடைவதைப் போல் வீடடைய வேண்டியதில்லை.. எட்டு மணிக்கு சாலையில் நடந்தால் முன்பின் தெரியாதவன் எல்லாம் ‘’இந்நேரத்துக்கு இங்க என்ன பண்ற?’’ (நாகர்கோயிலில் இந்த அனுபவங்கள் எனக்கு உண்டு) எனக் கேட்க முடியாது... முக்கியமான பக்கத்து வீட்டுக்காரர்களின் தொந்தரவு இல்லை.. ‘’அப்புறம் உங்க வீட்ல’’ என யாரும் வீட்டுக்குள் நுழைய மாட்டார்கள்.

சென்னையில் நான் எனக்காக, எனக்குப் பிடித்ததை மட்டும் சிந்தித்தால் போதுமானது. கிராமங்களைப் போல் எதிர் வீடு, பக்கத்து வீடு, அடுத்த வீட்டுக்காரர்களுக்காக நான் சிந்திக்க வேண்டியதில்லை.. ஒரு நண்பனோடு நான் நிம்மதியாக தெருவில் நின்று பேச முடியும்.. இன்னும் இன்னும் பலப்பல காரணங்களால் மாநகரங்களை நேசிக்கிறேன்..

நான் விளையாடியது போன்று என் குழந்தையால் ஓடி விளையாட முடியவில்லையே என முன்பெல்லாம் சென்னை குறித்து வருத்தப்பட்டது உண்டு.. அவள் வளர வளர அவளுக்கும் மாநகரம் தான் சரியென்று தோன்றுகிறது. சமூகம் விதிக்கும் கட்டுப்பாடுகளை தாண்டி வெளியேறுவதே ஒரு போராட்டமாக இருக்கும் வாழ்க்கை நம் பிள்ளைகளுக்காவது இல்லாமல் இருக்கட்டுமே.

கிராமத்தில் இருப்பவர்கள் எல்லோருமே நல்லவர்கள், நகரங்களில் அயோக்கியர்கள் ஒட்டுமொத்தமாக வசிப்பதாக சிலர் சொல்வதெல்லாம் எவ்வளவு பெரிய மூட நம்பிக்கை? ’’ஊர்ல ஒருத்தன் விழுந்தா பத்து பேர் தூக்குவாங்க, ஸிட்டில எவனும் கண்டுக்க மாட்டான்’’ என ஒரு கண்டுபிடிப்பை ஆதாரமாக சொல்வார்கள். வன்முமம், சாதிய கொடுமையும் கிராமங்களில் நிறைந்து கிடப்பதை எவ்வளவு எளிதாக மறந்து விடுகிறோம்.. மற்றபடி அன்பும், கருணையும் நிரம்பிய மனிதர்கள் கிராமம், நகரம் பேதமின்றி எங்கும் நிறைந்திருக்கிறார்கள்.

அழகான மலையடிவாரத்தில் குளிர்ச்சி நிரம்பிய மரங்களுக்கு நடுவே ஒரு சின்ன குடிசையில் பசு, கோழி இவைகள் சூழ்ந்த, கொஞ்சம் தொலைவுக்கு மனிதர்கள் அற்ற இடத்தில்.. நிறைய புத்தகங்கள்... நிறைய சினிமா.. என இயற்கை சூழ ஒரு வாழ்க்கை குறித்த கனவும் இருக்கிறது. மாநகரக் கனவு நடந்தேறியது போல் ஒருநாள் இக்கனவும் நடந்தேறும் அதுவரைக்கும் சென்னை அல்லது இன்னும் எதோ ஒரு மாநகரகம்..

ஐ லவ் சென்னை எப்பவும்:)


by பிரியா தம்பி 
Priya Thambi

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அங்கு நாட்கள் போவதே தெரியாது... 20 வருட அனுபவம்...

பிரியா தம்பி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...