Sunday, May 29, 2011

அதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டால் திமுக நிலைமை என்னவாகும்?


கடாஃபி நல்லவரா? கெட்டவரா? - இங்கர்சால், நோர்வே.

அவரது குடிமக்களில் ஒருசாராருக்கு நல்லவர்; மற்றொரு சாராருக்குக் கெட்டவர். இதனால்தான் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் மக்கள் போரிடுகின்றனர்.

மாமியார் மருமகள் பிரச்னைகள் போல் மாமனார் மருமகன் பிரச்னைகள் வருவதில்லையே... என்ன இருந்தாலும் Male மக்கள் மேன்மக்கள்தானே? - ரிஸ்வான், பஹ்ரைன்.

ஆண்கள் தொழில், வணிகம், ஊழியம் என வருவாய் ஈட்டும் வழிதேடி வீட்டை விட்டு வெளியே செல்லும் நிலையில் வீட்டில் இருக்கும் பெண்களிடையே சில பிரச்சனைகள் உருவாகும். அதுவே மாமியார் மருமகள் போருக்கு வழிவகுக்கும்.

பொதுவே பெண்கள் பொசசிவ்னெஸ் குணம் உள்ளவர்களாக இருப்பதால் மகனும் கணவனும் என இரண்டு நிலைகளில் இருக்கும் ஒருவன் மீது கொண்ட
பொசசிவ்னெஸ் இப்போருக்குக் காரணம். வீட்டில் யாருக்கு பொசசிவ்னெஸ் அதிகம் என்ற ஈகோவும் காரணம்.

மருமகளை மாமியார் வேலைக்காரியாக நினைப்பதைப்போல் மருமகனை மாமனாரோ மாமியாரோ வேலையாளாக நினைப்பதில்லை. மேலும் பெரும்பாலோரான  மாமியாரும் மருமகளும் ஒரே வீட்டில் இருப்பர். மாமனாரும் மருமகனும் ஒரே வீட்டில் இருப்பதில்லை என்பதோடு எந்தத் தந்தையும் தம் மகளின் வாழ்க்கை (த் துணை)யோடு விளையாடத் துணியமாட்டார் என்பதும் மாமனார் மருமகன் சண்டை இல்லாமைக்குக் காரணமாகலாம்.

சதாம், ஒசாமா, அடுத்து..? - இளமாறன், ராயப்பேட்டை.
அய்மன் ஜவாஹிரி / முல்லா ஓமர்.

அண்ணா ஹசாரே - சமீப புரட்சி தொடரில், இந்திய புரட்சியின் ஆரம்ப குறியீடா? - இளவரசு, பரங்கிபேட்டை.

வினா புரியவில்லை.

அவர் என்ன பெரிய புரட்சி செய்து விட்டார்.?

நடைமுறையில் உள்ள சட்டத்தைச் செயல்படும் சட்டமாக ஆக்குவதற்கு உரிய வழியை உருவாக்கச் சொல்லி ஒரு போராட்டம் நடத்தியுள்ளார். முன்னர் ஒரு விடையில் நான் சொன்னதுபோல் குத்து விளக்காக உள்ளார்.

அதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டால் திமுக நிலைமை என்னவாகும்? - அருள், கத்தர்.

அ இ அ தி மு க வுடன் காங்கிரஸ் கூட்டணி வந்தால் கம்யூனிஸ்ட்கள் தி மு க பக்கம் வரலாம்; பா ம க, அ இ அ தி மு க பக்கம் போகலாம். வேறு பெரிய மாற்றம் எதுவும் வரப்போவதில்லை.

வலிமையான எம் ஜி ஆரும் இந்திரா காந்தியும் நெருக்கடி நிலைக் கொடுமையும் சேர்ந்திருந்தபோது கூட தி மு க அஞ்சவில்லை; அசரவில்லை. இப்போது எதிர்க் கட்சியாக இருக்கும் தகுதியைக் கூட இழந்து  கேவலமான  தோல்வியைச் சந்தித்தாலும் அதிலிருந்து மீண்டு வரும் தொண்டர் பலம் கொண்டது தி மு க…

ஊழல் பெருச்சாளிகளையும் உட்கட்சிக் கலகக்காரர்களையும் களையெடுத்துவிட்டு, ஸ்டாலின் தலைமையில் துவக்க காலத் துடிப்புடன் மக்கள் பணி ஆற்றினால் மீண்டும் தி மு  க ஆட்சிக்கு வரும்.

தனது பயணத்தின்போது பொதுமக்களுக்கு இடையூறாக போக்குவரத்தை நிறுத்தக்கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளாரே? - செந்தமிழ்செல்வன்,அருப்புக்கோட்டை.

தம் ஆட்சியில் முன்பு சாலை வெய்யிலில் காத்துக் கிடந்த மக்கள், அடுத்து வந்த தேர்தலில் தமக்களித்த தண்டனையை மறக்காமல் இருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம்..

தமிழகத்தில் அதிமுகவின் ஆட்சி இனிமேல் எப்படி இருக்கும்? - ப.கோ. வசீகரன்.

மேலே உள்ள வினாவில் இருப்பது உண்மையாக நடைமுறைப் படுத்தப் படும் என்பது உறுதியானால் முன்னர் ஜெயலலிதா ஆண்டதை விடச் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம். ஆனால் அவரின் அதிரடித் துவக்கம்( ரஸ்ஸலின் அலசல்) பழைய மாதிரியே இருக்கிறது..

ஆட்சி மாறும் போது முந்தய அரசு செயல்படுத்திய திட்டங்களை புதிய அரசு மாற்றும் போது ஏற்படும் பண விரயத்திற்கு யார் பொறுப்பு? இதனை தவிர்க்கவே இயலாதா வணங்காமுடியாரே? (உதாரணம்: தலைமைச் செயலகம்)- சரவணன், திருச்சி.

இப்படிச் செய்வோரே பொறுப்பு.

ஆனால் மக்கள் இதை உணர்வதாகத் தெரியவில்லை. நான்காம் தூணாகிய பத்திரிகைகளும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் மாயாவதி  லக்னோ நகரின் பல இடங்களில்,   1000 கோடி ரூபாய் அரசுச் செலவில் யானைச் சிலைகள் நிறுவியுள்ளார்; கூடவே கன்ஷிராமுக்கும் தமக்கும் அம்பேத்கருக்கும்…..

5.9 கோடி பேர்,வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் ஒரு மாநிலத்தில் இப்படி ஊதாரிச் செலவு நடந்ததை உச்சநீதிமன்றமே  கண்டித்துள்ளது. தாம் ஆட்சிக்கு வந்தால் இவற்றை அகற்றப் போவதாக முலாயம்சிங் யாதவ் சூளுரைத்துள்ளார். மக்கள் பணத்தை வீணாக்குவதில்  உ பி யுடன் தமிழ்நாடு சரிசமமாகப் போட்டியிடுகிறது.

விறைப்புத்தன்மை எதனால் குறைகிறது? - சூர்ய ப்ரகாஷ் சேதுராமன்.

வீர்யம் குறைவதால்.

சேது சமுத்திரம் திட்டம் கைவிடப்படுமா? - குணசேகரன், அதிராம்பட்டினம்.

முன்னர் இது தொடர்பாய் வினவப்பட்ட வினாவுக்கு 21/09/2010 அன்று வ மு விடைப் பகுதியில் நானளித்த விடையைக் கீழே காண்க!

கடல்சார் அறிவியல் அறிஞர்களும் பொறியாளர்களும் ஆய்வு மேற்கொண்டு சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற முயலும்போது, பாஜக மற்றும் அஇஅதிமுக தலைவர்களால் ராமர்பாலம் பெயர் கூறி முட்டுக்கட்டை இடப்பட்டது. 

முதலில் அறிவுப்பூர்வமான வாதங்களுடன் நீதிமன்றத்தில் மனுச் செய்த மத்திய அரசு அந்தர்பல்டி அடித்தபின் உங்கள் வினாவுக்கு வலுவில்லை. முதுகெலும்புள்ள வேறு மக்கள் அரசு வந்தால் நம் பிள்ளைகள் / பேரர்கள் காலத்தில் சேதுசமுத்திரத்திட்டம் நிறைவேறலாம்.
.

ஜார்ஜ் கோட்டைக்கு சட்டசபையை மாற்றுவதற்கு உத்தரவிட்டவர் யார்? ஆட்சிப்பொறுப்பு ஏற்பதற்கு முன்பே எப்படி மாற்றமுடியும்? - கஜேந்திரன், வாலாஜா பேட்டை.

இந்த வினாக்களைத் தொடுத்தே  வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். அரசு  விளக்கம் அளிக்கும் படி நீதிபதியும் உத்தரவிட்டுள்ளார். அவ்விளக்கம் வரும்போது தெரிந்து விடுமே!

எண்டோசல்பானுக்கு எதிராக உலகமே தடை விதிக்க முனைந்தபோது அதை எதிர்த்த ஒரே நாடு இ.ந்தியாவாமே? ஏன் இப்படி? - குமரன், வல்லம்படுகை.

இந்தியா மட்டுமே எதிர்த்தது என்பது தவறான தகவல். இந்தியா எதிர்ப்புத் தெரிவித்ததற்கு விலை மலிவு என்பது ஒரு காரணம்.
உலக உற்பத்தியில் 70 சதவீதம் எண்டோஸல்ஃபான இந்தியாவில்தான் உற்பத்தி செய்யப் படுகிறது. மலிவான எண்டோஸல்ஃபானுக்குத் தடை விதித்து அதை விடப் பன்மடங்கு விலை அதிகமுள்ள புதிய மருந்தை இந்தியாவில் விற்க மேலை நாட்டுக் கம்பெனிகள் செய்யும் சதி எனவும் இந்தியா கருதுகிறது.

தனிக்கட்சி, முதலமைச்சர் என்று ஹீரோக்கள் ஆசைபடுவதுபோல் ஹீரோயின்கள் ஆசைப்படுவதில்லையே ஏன்? - பாபு, சென்னை.

பெண் அரசியல்வாதிகள்,  தாம் உறுப்பினராய்  இருக்கும் பெரிய கட்சியின் தலைமைப் பதவியைப் பிடிப்பர்; அல்லது தாம் உறுப்பினராய் இருக்கும் கட்சியை உடைத்துத் தனிக் கட்சி உருவாக்குவர். சான்றுக்கு இந்திரா காந்தி, மாயாவதி, மமதா பானர்ஜி, ஜெயலலிதா போன்றோரைக் கூறலாம். விதிவிலக்காய் ஓரிருவர் இருக்கலாம்.

அரசியலில் பழுத்த அனுபவம் பெற்ற தலைவர்களே தனிக்கட்சி நடத்த முடியாமல் கடையை மூடி விட்டுப் பெரிய கட்சியுடன் ஐக்கியமான வரலாறு உண்டு. தி மு க விலிருந்து விலகித் “தமிழ் தேசீயக் கட்சி”  நடத்திய சம்பத், தி மு க விலிருந்து விலகி "மக்கள் தி மு க" என்ற ஒரு கட்சியை நடத்திய நாவலர் நெடுஞ்செழியன், அ இ அ தி மு க விலிருந்து பிரிந்து "நமது கழகம்" என்ற கட்சி நடத்திய எஸ் டி சோமசுந்தரம்,  காங்கிரஸிலிருந்து பிரிந்து “கா கா தே கா” நடத்திய குமரி அனந்தன் போன்றோரை இதற்குச் சான்றாய்க் கூறலாம். ஒரு நோஞ்சான் ஹீரோ பத்துத் தடியர்களைப் பந்தாடும் சினிமாக் காட்சி போல் அரசியல் எளிதானது இல்லை.

தமிழ்நாடு எல்லா நடிகர்களின் பின்னும் செல்லாது. நடிகர்களுள் எம் ஜி ஆர் அரசியல்வாதியாக, சட்டமன்ற உறுப்பினராக, ஆளும் கட்சியின் பொருளாளராக  வளர்ந்து அசைக்க முடியா மக்கள் செல்வாக்குப் பெற்ற  பின்னரே தனிக்கட்சி துவக்கினார். மிகப்பெரும் நடிகரான சிவாஜி கணேசன், பாக்யராஜ் போன்றோர் கட்சி நடத்தித் தோல்வி கண்டனர். டி ராஜேந்தர் கட்சி என ஒன்றை வைத்திருக்கிறார். விஜயகாந்த், அரசியல்வாதியாக முயன்று  இரு கழகங்களையும் விமர்சித்து எதிர்த்துத் தனியாக நின்றதால் மக்கள் ஆதரவு பெற்றார்; இப்போது பெரும் வெற்றி பெற்றுள்ளார். சரத்குமார் கட்சி அ இ அ தி மு க  கூட்டணி தயவில், சாதி வாக்காளர்கள் நிறைந்த தொகுதியில் வென்றுள்ளது. இதையெல்லாம் பார்த்தே ரஜினி, பல காலம் தம் ரசிகர்கள் வற்புறுத்தி வேண்டியும்  தனிக் கட்சி தொடங்கவில்லை.

இது தான் தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை. கட்சி நடத்துவது என்பது பெரும் செலவு பிடிக்கும் சமாச்சாரம். இதில் நடிகைகள் கட்சி துவங்குவதாவது? குறைவான காலமே திரையில் மின்னும் வாய்ப்புள்ள அவர்கள், குறுகிய காலத்தில் முடிந்த அளவு சம்பாதித்துப் பாதுகாப்பாக ஒதுங்கவே விரும்புவர். புத்திசாலிகளான அவர்கள் தனிக் கட்சி துவக்கும் வாய்ப்பில்லை. மக்களும் ஆதரிக்கப் போவதில்லை. வடக்கே ஹேமமாலினி, ஜெயாபாதுரி, ஜெயப்ரதா போன்றோரும் தெற்கே, ரோஜா, குஷ்பூ போன்றோரும் என  விரல் விட்டு எண்ணும் அளவு நடிகைகளே அரசியலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களும் தனிக்கட்சி நடத்தும் ஆற்றலற்றவர்கள். பின் எங்கே இருந்து முதல்வர் கனவு? கனவுக் கன்னிகள் வீண் கனவு காண்பதில்லை.

(வணங்காமுடி பதில்கள் அனைத்தையும் இங்கு காணலாம்)
வணங்காமுடிக்குக் கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.com என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.
Source : http://www.inneram.com/2011052916907/vanagamudi-answers-29-05-2011

No comments: