Wednesday, December 1, 2010

தங்க முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும்


பதிவர் பராரி அவர்கள் பின்னூட்டத்தில் தங்கத்தைப்பற்றி எழுதுங்களேன் என்று கூறியிருந்தார். நான் தங்கக் கடையில் பணிப்புரிவதை அறிந்தவர் என்றே நினைக்கிறேன். இதற்கு முன் பதிவிட்டுக் கொண்டிருந்த கவிவனம் என்ற எனது வலைப்பூ வைரஸ் தாக்குதலினால் முடங்கிப்போனது. அதில் தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கும் தங்கத்தை வாங்குபவர்களுக்கும் சில யோசனைகளை எழுதியிருந்தேன். அதை மீள்பதிவாக இங்கு எழுதவில்லை யென்றாலும் தங்கத்தைப்பற்றிய நிகழ்காலத்தின் நிலைகளை எனக்கு தெரிந்த விசயங்களை கொஞ்சம் சொல்லலாம் என்று நினைக்கிறேன். எழுதத்தூண்டிய நண்பர் பராரி அவர்களுக்கு நன்றி.
(0)
தங்கம் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கிறது.வீடு இல்லாமல் இருப்பவர்களைவிட தங்கம் இல்லாமல் இருப்பவர்கள் மிகக்குறைவு என்றேதான் சொல்லவேண்டும். ஆண்களைவிட பெண்களை அதிகமதிகம் கவரக்கூடியது தங்கம்.
(0)
பல ஏழைகளின் வாழ்க்கையில் விளையாடிக்கொண்டிருப்பது இந்தத்தங்கம்.
வரதட்சணை என்பது பணமாக கொடுக்கப்படும் கைக்கூலி. ஆனால் இன்று வரதட்சணை பணமாக அல்லாமல் பல இடங்களில் தங்கமாக வாங்கப்படுகிறது கொடுக்கப்படுகிறது.100 சவரண் 200 சவரண் என்று வசதிக்கேற்ப கேட்கப்படுகிறது.
(0)
ஆசியா கண்டத்தில் அதிகமான தங்கம் இறக்குமதியும் விற்பனையும் நம் இந்தியாவில்தான் நடக்கிறது. இந்தியர்கள் பெரும்பாலோர் தங்கத்தை சேமிப்பு நோக்கம் கருதியே வாங்குகிறார்கள்.
இப்படி சேமிப்பின் நோக்கத்தில் வாங்கக்கூடிய தங்கம் தரமானது தானா.? நாம் கொடுக்கக்கூடிய பணத்திற்கு தகுந்த மதிப்பு அந்ததங்கத்தில் இருக்கிறதா.? என்ற பல சந்தேகக்கேள்விகள் நம்பலரிடையே இருந்து வருகிறது.
(0)
காய்கறி கடைகளில் நம்பெண்கள் காய்களை ஒடித்துப்பார்த்து அழுத்திப்பார்த்து நசுக்கிப்பார்த்து முகர்ந்துப்பார்த்து வாங்குவார்கள்.
புடவைக்கடைகளில் தரம் நிறம் துணியின் தன்மை என்று பார்த்து பார்த்து பல கடைகளில் ஏறி இறங்கி வாங்குவார்கள்.
ஆனால் தங்கக்கடையில் மட்டும் நம்பெண்களும் ஆண்களும் எளிமையாக ஏமாந்துவிடுகிறார்கள் ஏமாற்றிவிடுகிறார்கள்.காரணம் தங்கத்தை உரசிப்பார்க்க அதன் தரத்தை அலசிப்பார்க்க ‘லேப்;’ வசதி எல்லா ஊர்களிலும் இல்லை.
(0)
இன்று பல நகைக்கடைகளில் வாங்கக் கூடிய தங்கத்தை இயந்திரத்தில் வைத்து சோதனை செய்து கொடுப்பதாக நிறைய விளம்பரங்கள் பார்க்க முடிகிறது. இதுவும் ஒருவகையான ஏமாற்றல்தான்.
இன்றைய பெண்கள் கொஞ்சம் விழிப்புணர்வாக இருப்பதினால் தங்கத்தைப்பற்றி பலவிதமான கேள்விகள் கேட்பதினால் அதே விழிப்புணர்வுக்கு தங்கவியாபாரிகளும் இயந்திரங்களின் மூலம் வந்துக்கொண்டு இருக்கிறார்கள். இதில் எல்லா நகைக்கடைக்காரர்களும் ஏமாற்றுகிறார்கள் என்று நான் கூறவில்லை. அதிகமானோர் ஏமாற்றுகிறார்கள் என்றே சொல்கிறேன்.

ஒரு கடையில் வாங்கிய நகையை அதை விற்கும் போது இன்னொரு கடைக்காரர் வாங்குவதில்லை அப்படியே வாங்கினாலும் அடிமாட்டு விலைக்கு எடுத்துக்கொள்வார்கள். காரணம் என்ன.? அதன் தரம் அவர்களுக்கு தெரியும்.இது இந்தியாவில் செய்து இந்தியாவில் விற்கப்படும் நகைகளுக்கு மட்டும்தான்.இதே வெளிநாட்டிலிருந்து குறிப்பாக துபாய் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாங்கிய நகைகளுக்கு எந்தக்கடைக்கு போனாலும் நல்ல தொகை கிடைக்கும்.காரணம் தரம்தான்.
(0)
ஏன் நம்மவர்கள் அந்தத்தரத்தை கொடுக்கக்கூடாது.?
(0)
அப்படிக்கொடுத்தால் அவர்களால் அதிகமான லாபம் ஈட்டமுடியாது. உல்லாசமான வாழ்க்கை வாழமுடியாது. பல நகைக்கடைக்கார்களின் வாழ்க்கையைப் பாருங்கள். எனக்கு தெரிந்த பத்தர்கள் சிலர் இன்று பெரிய நகைக்கடை அதிபராகத் திகழ்கிறார்கள்.
(0)
சாதாரனமாக துவங்கிய கடைகள் நாளடைவில் அழங்காரமாக வடிவமைத்து விஸ்திரப்படுத்தி குளிர்சாதனங்கள் வைத்து மக்களை கவரக்கூடிய அளவிற்கு வளர்ந்திருப்பார்கள். நேர்மையான வியாபாரத்தில் எளிதில் இப்படியானதொரு வாழ்க்கைக்கு வரமுடியாது என்பது உண்மை. அவர்களின் ஆடம்பரமான வாழ்க்கைக்கு அப்பாவிமக்களின் உழைப்பை வேர்வையை சுவைப்பது எந்த வியாபாரிக்கும் நியாயமானதல்ல.
ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்று சொல்வார்கள்.நாம் விழிப்புணர்வுடன் இருந்தால் நம் பணத்தை நாம் வாங்கக்கூடிய பொருளை தரமாக நியாயமாக வாங்கலாம்.
(0)
இந்தியாவில் வாங்கிய 22கேரட் நகையை துபாயில் விற்பனை செய்தால் அல்லது நகைமாற்றம் செய்தால் அதற்கான மதிப்பு என்னத் தெரியுமா.?
18kt மதிப்புபோட்டு எடுப்பார்கள் அதாவது ஒரு கிராம் 22கேரட் இந்திய ரூபாய்படி 1500 க்கு வாங்கி இருப்பீர்கள். அதை விற்கும் போது 1200 க்கு வாங்குகிறார்கள்.இந்த 1200- 18kt விலை.300ரூபாயை நாம் ஒரு கிராமுக்கு இழக்கிறோம்.
இதே துபாயில் வாங்கப்பட்ட 22kt தங்கத்தை துபாயிலேயே நகைமாற்றம் செய்தால் 30 ரூபாய் மட்டும் (3திரஹம்)ஒரு கிராமுக்கு குறைத்து எடுத்துக் கொள்வார்கள்.இந்தியாவில் அதேவிலைக்கு எடுத்துக் கொள்கிறார்கள்.
அப்படிப்பார்த்தால் 270 ரூபாய் ஒரு கிராமுக்கு இந்திய நகைக்கடைக்காரர்கள் நம்மிடம் அதிகமாக வாங்குகிறார்கள்.
ஒரு கிராமுக்கு 270 என்றால் 10 சவரண் நகை (80 கிராம்) வாங்கப்படும்போது 21600 ரூபாயை நாம் ஏமாறுகிறோம்.இது தரமில்லாத நாம் 22kt என்று நம்பி வாங்கப்படும் நகைக்கு இந்த நிலை.
(0)
22kt, 21kt, 18kt - என்று தரம் வைத்துள்ளார்கள் அது எதன் அடிப்படையில் என்று பார்க்கலாம்.
இந்த கட்டுரை கொஞ்சம் பெரிதாக வரும்போல இருக்கிறது ஆதலால் தொடராக எழுதலாம் என்று நினைக்கிறேன். நகைப்பற்றி உங்கள் சந்தேகங்களையும் பின்னூட்டத்தில் எழுதுங்கள்.தொடர்வோம்…


தங்கத்தைப் பற்றி மொத்தம் ஏழு தொடராக எழுத இருக்கிறேன்
Source : http://kismath.blogspot.com/2009/10/blog-post_31.html

1 comment:

எஸ்.கே said...

மிகவும் பயனுள்ள தகவல்!