Tuesday, May 21, 2019

துவேஷங்களில்லாத தேசத்தை நாங்கள் கட்டி எழுப்புவோமென்று !



எவ்வளவு அழகான மனிதன் நீ
எத்தனை இளமையான தலைவன் நீ
எவ்வளவு கம்பீரமான பிரதமர் நீ
நாட்டின் கவுரவத்தை
உன்னைப்போல் அழகாக்கியவனல்லவா நீ !

உலகத்தையே சுற்றி வந்த போதும்
கேலிக்கு ஆளாகாதவனல்லவா நீ
பறப்பதை தொழிலாகச் செய்த விமானத் தொழிலாளி நீ
அரசியல் கடந்தும் நாட்டு மக்களால்
நேசிக்கப்பட்டவன் நீ
வளமான தேசத்தை கட்டமைக்க
விமானத்திலிருந்து
இறங்கி வந்தவன் நீ
நாட்டின் எதிர்காலம் நீ என
மக்கள் நம்பிக்கையை பெற்றவன் நீ !


சிதறடித்து விட்டார்களே ...
உன்னையும்
எங்கள் உணர்வையும் !

பாவிகள் தகர்த்தது
உன் உடலையா ?
இல்லை... இல்லை ...
இந்த தேசத்தின் ஆன்மாவை !

சதிகாரர்களின்
சவுந்தர்ய பூமியில்
சாந்தியை விரும்பும் உன்னை
சாந்தியடைய வைத்து விட்டார்களே !

ஒளிமயமான எதிர்காலத்தை
நிர்மூலமாக்கிவிட்டு
இல்லாத சாதனையைச் சொல்லி
ஒப்பாரி வைக்கிறார்கள்
உலகம் சுற்றிகள் !

நீ இருக்கும்போது
தெரிந்து கொள்ள முடியாத
நீ வாழ்ந்த
அனலிடை வாழ்க்கையை
உன்னை இழந்த பிறகுதான்
புரிந்து கொண்டோம்!

இருந்தாலும் ...
உன் பாட்டனும்
உன் தாயும்
நீயும்
விதைத்துச் சென்ற
மதவெறியூட்டப்படாத
சமாதானப்பயிர்
கருகி விடாது
என்ற நம்பிக்கை
இன்னமும் எங்களுக்கிருக்கிறது !

இன்றைய உனது
நினைவுநாளில்
உறுதி கொள்கிறோம்...
துவேஷங்களில்லாத
தேசத்தை
நாங்கள்
கட்டி எழுப்புவோமென்று !

Abu Haashima

No comments: