Thursday, May 9, 2019

கிரிக்கெட் விளையாடப்படுமா?”

சீன பிரதமர் லீகியாங்கின் இந்திய வருகையின்போது தனியார் டிவி நிருபர் ஒருவர் சம்பந்தமில்லாத ஒரு கேள்வியை அவரிடம் கேட்டார்.

“சீனாவில் இனியாவது கிரிக்கெட் விளையாடப்படுமா?” என்பதுதான் அது.

அதற்கு லீகியாங் சொன்ன பதில்.

“ஒரு போதும் இல்லை. நாங்கள் ஒரு நாளில் சிறு பகுதியைத்தான் விளையாட்டிற்கென எடுத்துக் கொள்வோமே தவிர, ஒரு நாளையே விளையாட்டிற்காக எடுத்துக் கொள்வதில்லை.


அதுவும், இங்கு மாதக் கணக்குகளில் கிரிக்கெட் ஆடுவதையும், அதற்காக கோடிக்கணக்கான இளைஞர்கள் தங்கள் நேரத்தை அர்ப்பணிப்பதையும் பார்த்தால் எனக்கு ஆச்சரியமும், பரிதாபமும்தான் ஏற்படுகிறது” என்றார். சீனாவிற்கும், இந்தியாவிற்கும் உள்ள பொருளாதார வளர்ச்சி விகிதத்தைக் கணக்கிட்டால், நம்மால் சீனாவை எட்டிப் பிடிக்க முடியாது என்கிறார்கள். ஒரு வேளை சீனப் பிரதமர் லீகியாங் போன்ற தெளிவான சிந்தனை உடைய சீனத் தலைவர்கள் அதற்குக் காரணமாக இருக்கலாம். சிக்ஸர்களுக்காக எழுந்த இந்திய இளைஞர்களின் கைத்தட்டல்களில் லீகியாங் சொன்ன பதில் ஒருவேளை இந்திய ஊடகங்களில் அமிழ்ந்து போயிருக்கலாம். ஆனால், ஐ.பி.எல் ன் நிஜம் அவ்வப்போது வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. ஐ.பி.எல். தொடரைப் பொறுத்தவரை, கலாச்சார சீரழிவு, ஆபாச நடனம், மேட்ச் ஃபிக்ஸிங், ஸ்பாட் ஃபிக்ஸிங் போன்ற அப்பட்டமான விளைவுகளை மட்டுமே நாம் அறிகிறோம். ஐ.பி.எல். தொடர் ஏற்படுத்தும் மறைமுக எதிர்வினைகள் பற்றி நாம் பெரும்பாலும் அறிந்திருப்பதில்லை. *ஐ.பி.எல். தொடர் நடைபெறும் இந்த இருமாத காலங்களில் ஈயடிக்கும் வணிகத்துறைகள் ஏராளம வணிக வளாகங்கள், கண்காட்சிகள், தீம் பார்க்குகள், நூலகங்கள், அறிவியல் கருத்தரங்குகள் போன்ற எல்லா துறைகளுமே நலிந்து விடுகின்றன.

கோடைக்கால விடுமுறையை மாணவர்களை பயனுள்ள வகையில் கழிக்க விடாமல் செய்யும் இந்த ஐ.பி.எல். தொடர் இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான இளைஞர்களின் ஆக்கபூர்வமான நேரத்தையும் எடுத்துக் கொள்கிறது. பின்னிரவு வரை நடைபெறும் ஆட்டத்தால் மக்களின் மறுநாளைய பணிகள் சீர் குலைகின்றன.

ஒரு சில தனியார் அமைப்புகள் கோடி கோடியாக கொள்ளையடிப்பதற்காக, ஒட்டுமொத்த நாட்டு மக்களையே ஆண்டுதோறும் இரு மாத காலம் ஐ.பி.எல். லுக்கு அடிமையாக்கி சுரண்டுவது அதர்மம் மட்டுமல்ல, சட்டவிரோதமானதும் கூட.

சினிமா மற்றும் டாஸ்மாக் போதையில் அகப்படாதிருந்த வெகு சில இளைஞர்கள் கூட இந்த ஐ.பி.எல். போதைக்குள் அகப்பட்டுக்கொண்டிருப்பது நிச்சயம் நாட்டுக்கு நல்லதல்ல.

 சுவாமி விவேகானந்தரும், டாக்டர் அப்துல்கலாமும் பெருமதிப்பு வைத்திருக்கிற இந்திய இளைஞர்களை குட்டிச்சுவராக்கும் *எந்த போதையையும், அது கிரிக்கெட்டாக இருந்தாலும் நாம் அனுமதிக்கக்கூடாது.😰

No comments: