Thursday, May 16, 2019

அற்பம்

ஆக்கம்: சபீர் -

எண்ணியவற்றிற் கீடாகவும் – துணிந்து
பண்ணியவற்றிற் கிணையாகவும்
மண்ணிலடங்கிய பின் – மீண்டும்
விண்ணிலுயிர்ப்பிக்கும் நாளில்

வேதனைகளைக் கொண்டோ – அழகிய
வாழ்வதனைத் தந்தோ
தீர்ப்பெழுதும் நாளை – பொய்யெனக்
கொள்பவனைக் கண்டீர்?


மெய்ச்செய்தி இதனை – குருடாய்ப்
பொய்ச்செய்தி என்பவனே
அநாதைகளை விரட்டி – பெரும்
அநியாயம் செய்கின்றான்

ஏழைக்கு உணவளிக்க – இவன்
என்றுமே முயன்றதில்லை
இருப்போரைக் கொடுக்க வேண்டி – ஓர்
இம்மியும் தூண்டவில்லை

கவனச் சிதறலோடு – செய்யும்
தொழுகையாளிக்கும் கேடுதான்
சுவனச் சுவை வாழ்வு – வெறும்
கனவோடு தீரும்தான்

பாராமுகமான இவன் – தன்
தோராயத் தொழுகையிலே
ஆராய ஒன்றுமில்லை – இதில்
கூரான சிரத்தையில்லை

ஊரார்க்குக் காட்டிடவும் – இன்னும்
வேறாட்கள் பார்த்திடவும்
தொழுவது போலன்றோ – இவன்
விழுவதும் எழுவதும் !

அற்பமான பொருட்களின்பால் – இவன்
அளவற்றை ஆசைகொண்டு
சொற்பமான ஈகையையும் – தன்
சொல் செயலால் தடுத்திடுவான் !

oOo

(மூலம்: சூரா அல் மாவூன் /அத்தியாயம் 107 / அல் குர்ஆன்)

-Sabeer Ahmed abuShahruk
http://www.satyamargam.com

No comments: