Monday, June 19, 2017

டி.ஆர்...! ஒரு ஃபிளாஷ்பேக் ஸ்டோரி ?

Gajini Ayub
1982 கால கட்டத்தில் (ஒரு தலை ராகம் திரையிடப்பட்டு ரசிக்கப்பட்ட பின்) தமிழக ரசிகர்கள் டி ராஜேந்தரின் அடுத்த படம் எப்படி இருக்கப்போகிறது என்று எதிர்பார்த்து காத்திருந்த காலமது...
டி ஆர் தன் அடுத்த பட இயக்க வாய்ப்புக்கு சிலரை அணுகியபோது ஜேப்பியார் வாய்ப்பு தந்ததில் புதுசா " வசந்த அழைப்புகள்" என்று தலைப்பிட்டு திரைக் கதை எழுத ஆரம்பித்தார்! ( அதற்கு முன் இந்த படக்கதைக்கு' என் பிரிய வசந்தமே' என்று பெயர்.ஏனோ மாறிவிட்டது)
அதற்கு முன் தன் பொருளாதாரபற்றா குறையால் சென்னை திருவல்லிக்கேணி நல்லதம்பி முதலி தெருவில்( அறங்கக்குடி எஸ்.எம்.சம்சுதீன் அவர்களின் ஹேப்பி மேன்ஷனில்) ஆதரவுகேட்டு தரைவிரிப்பு போட்டு தங்கிகொண்டிருந்த டி ஆர் , தயாரிப்பாளர் அடுத்த வாய்ப்பு கொடுத்ததால் சென்னை மூன்று நட்சத்திர
ஹோட்டலான சுதர்ஸன் இண்டர்நேஷனலில் தங்க வைக்கப்பட்டிருந்தார் ...!

சுதர்ஸன் ஹோட்டலின் முன்பகுதியில் அந்த நிறுவனத்துக்கு சொந்தமானஇடத்தில் காண்டிராக்ட் அடிப்படையில் சாப்பாட்டு கேண்டீன் ஒன்று இருக்கும் அங்கேதான் தன் ரூமிலிருந்து இறங்கி வந்து டி ஆர் சாப்பிட்டு விட்டு போவார். அந்த காண்டிராக்ட் கேண்டீன் உரிமையாளர் திருச்சியை சேர்ந்த ஷாகுல் ஹமீத். அங்கு சாப்பிட போகும்போதெல்லாம் டி ஆருக்கும் ஷாகுல் ஹமீதுக்கும் ஒரு பரிச்சயம் ஏற்பட்டது . ஷாகுல் ஹமீதும் டி ஆரிடம் தன் வியாபாரக் கவலைகள் பகிர்வார் . ஏதோ இந்த கேண்டீன் சுமாராகத்தான் வியாபாரம் போகிறது என்பாராம். டி ஆரும் இப்போதுதான் நான் ரெண்டாவது படத்துக்கு தயாராகிறேன்...நான் நல்ல நிலைக்கு வந்தா உங்க ஹோட்டலை விரிவு படுத்த உதவுகிறேன் என்பார் டி ஆரும் ! அப்போது ஷாகுல் ஹமீதும் சரி சரி பரவா இல்லே நீங்க சாப்பிடும்போது பணம் இல்லேன்னாலும் லேட்டாக வாங்கிக்கறேன நம்ம கிட்ட பழகிட்டீங்க நீங்க நல்லா வரணும் தம்பி என்பாராம்!
அப்புறம் வசந்த அழைப்புகளும் படமாகி ரிலீஸ் ஆகி வெற்றி பெற்று திரை உலகில் உயர்ந்த இடத்தில் டி ஆர் வைத்து பார்க்கப்பட்டார் . பொருளாதாரம் அவரை ஓரளவு உயர்த்தி வீடும் வாடகைக்கு எடுத்து குடி போனார் !
பிறகொரு முயற்சியில் தங்கைக்கோர் கீதம் என்ற படம் எடுத்து முடியும் சமயம் நேராக தனக்கு அன்னமிட்ட ஷாகுல் ஹமீதை தேடிப்போனார் டி ஆர் ! அவரைபார்த்து பரபரப்பான ஷாகுல் ஹமீதிடம் நீங்கதான் தங்கைக்கோர் கீதம் சென்னை நகர பட வினியோகிப்பாளர் என்று முடிவு செய்து விட்டேன் என்று டி ஆர் கூறியதும்
ஆத்தாடி நான் எங்கிட்டு போவேன் சில லட்சங்களுக்கு. இல்லே நீங்க நினைக்கிறமாதிரி என் பொருளாதாரமில்லே டி ஆர் தம்பி என்றார் ! சரி ,பிறகு வருகிறேன் னு புறப்பட்டார் டி ஆரும் !
சில தினங்களுக்கு பிறகு டி ஆர் ,ஷாகுல் ஹமீதை போனில் அழைத்தார். அவரும் வந்தார். அவரிடம் டி ஆர் , உங்க கிட்ட இருக்கிற பணத்தை கொண்டு வாங்க இன்னொருத்தர் சென்னை நகர விநியோக ஸ்தராக சேர்ந்திருக்கிறார் அதில் நீங்க ஒரு பார்ட்னர் உங்க பேர்லதான் டிஸ்ட்ரிப்யூஷன் கம்பெனி இருக்கும் கம்பெனிக்கு நல்ல பெயர் வச்சிட்டு நாளைக்கு வந்திடுங்க என்றார் !
என்ன சொல்றீங்க டி ஆர் நான் டிஸ்ரிப்யூட்டரா சொன்னா வெளீல கூட நம்ப மாட்டாங்க என்று விட்டு மறுநாள் வந்து கையில் இருந்த பணத்தையும் வளநாடு சினி ரிலீஸ் என்று ஒரு பெயரையும் டி ஆரிடம் சமர்ப்பித்து விட்டு டிஸ்ட்ரிப்யூட்டர் ஆனார் அந்த சாப்பாட்டு கேண்டீன்காரர் !
தங்கைக்கோர் கீதம் வந்தது ...தங்க காசுகளை இலாபத்தில் அள்ளியது !
மிகப் பெரிய டிஸ்ட்ரிப்யூட்டர் ஆனார் ஷாகுல் பாய் ! அதன் பின் பல பட அதிபர்கள் ஷாகுல் பாய் வீட்டில் என் படத்தை டிஸ்ட்ரிப்யூட் பண்னுங்கன்னு வற்புறுத்தினர்
அதற்கு பிறகு டி ஆரின் ஏழு படங்களுக்கு திருச்சி தஞ்சை விநியோகஸ்தர் ஷாகுல் ஹமீதுதான் !
# நான் கஷ்டபட்டபோது அன்னமிட்டு ஆதரவு தந்ததும் ஒரு முஸ்லிம்தான் ! அவரை மறக்காமல் ஒரு மறு உதவி செய்தேன் அம்புட்டுதான் என்கிறார் டி ஆர் !


Gajini Ayub

No comments: