Saturday, August 13, 2016

மாய் எங்கள் அன்பு மாய் ...

by J Banu Haroon

                                              மாய் எங்கள் அன்பு மாய் ...

 (மாய் என்ற வியட்நாம் சொல்லுக்கு பாட்டி என்று தமிழில் பொருள்படும்)
                                       =======================

கடந்த பதின் மூன்று வருடங்களில் மாய் அவர்களின் செறிவூட்டப்பட்ட அன்பிற்கு நாங்கள் பாத்திரமானோம் .....

அவர்களின் பிள்ளைகளில் ஒருவராக மாறிப்போனோம் ...இந்த அன்பிற்கும் ,அரவணைப்பிற்கும் எங்களால் விலை மதிப்பீடு செய்ய இயலவில்லை ....

இப்போதெல்லாம் அடிக்கடி பார்க்க முடியாமல் போனாலும் ,போனில் அழைப்பார் ....''ஏன் என்னை பார்க்க வரவில்லை ...எப்போ வருவீங்க ?...வரும்போது பானுவையும் அழைத்து வந்தால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் ''.....என்பார் .சற்றும் தாமதிக்காமல் என் கணவர் என்னையும் உடனே கிளம்பச்சொல்லுவார் ....மாய் -ஐ பார்க்கும் போதெல்லாம் அத்தனை ஒரு விவரிக்க முடியாத அன்பில் கட்டுண்டு போவோம் ....


கொஞ்சும் தமிழும் ,குழந்தை தமிழுமாக அவர் பேசும் பொழுது எனக்கு முழுவதுமாக புரியாமல் போனாலும் ....என் கணவர் விளக்கி சொல்வார் .....

நான் கடகடவென்று பேசும் தமிழ் அவருக்கு புரியாமல் போகும்போது ...அவரிடம் இவர் பொறுமையாக விளக்கி சொல்வார் ...புரிந்து கொண்டபின் ,''அப்படிவா ?...''என்று மாய் குழந்தையாக சிரிப்பார் ....

மாய் ---அவர்களின் வாழ்க்கையை நாங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு ஆரம்பகாலங்களில் யாரையாவது பேரப்பிள்ளைகளை விட்டு சுயசரிதை எழுதி....கையெழுத்துப்பிரதியை எங்களை படித்துப்பார்க்கச் சொல்லி கொடுத்தனுப்பிவிடுவார் ....புகைப்பட ஆல்பங்களை காட்டி மறக்காமல் மற்றவர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்திவிடுவார் ...நேரிலும் .....எங்களை மற்ற உறவுகளுக்கு அழகாக அறிமுகப்படுத்திவிடுவார் ....

மாய் --ன் விருந்து உபசாரங்களில் நாங்கள் திளைத்து திக்கு முக்காடிப்போயிருக்கிறோம் ....

மாய் --ன் அன்பு எங்களிருவரின் தாய்க்கு நிகரானது ...வியட்நாமியப்பெண்ணாகப் பிறந்திருந்தாலும் நீடூர் --நெய்வாசலின் நேசமிகு தமிழ் முஸ்லீம் மருமகள் ... ...மாய் விழுதுகள் நிறைந்த ஆலமரம் ....அங்கே தங்கி இளைப்பாறிச்செல்லும் மனித குலப்பறவைகள் ஏராளம் ...ஏராளம் ....

மாய் ஆரம்ப காலங்களில் தன்னுடைய பெயரை மேடம் .ஹஸீனா வஹாப் என்றே கூறினார் ...எப்போதும் தொழுகையும் ,குரான் ஓதுவதுமாக இருப்பார் .தன் கணவர் விட்டுச்சென்ற காலடித்தடங்களை மறக்காதவர் .....

என் கணவரை தன் மகன்களுக்கு இணையாக அன்பு பாராட்டி அவரை வரச்சொல்லிவிட்டு டீயும் ,வெண்ணீருமாக காத்திருப்பார் ....மனசின் எண்ணங்களை இவருடன் மனம்விட்டு பகிர்ந்துகொள்வார் ....உபசரிப்பில் சளைக்காதவர் ...வயோதிகத்தில் இப்போது தளர்வாக தெரிகிறார் ....ஆனாலும் கண்களில் பளபளப்பும் ,அதே பாசமிக்க அன்பும் .....


 (ஜின்னா தெருவில் 'மாய்' அவர்கள் மகிழ்வாய் வசிக்கும் இல்லம் )
நீடூர்-நெய்வாசல் ஜின்னா தெருவின் தனித்த முத்திரை மனுஷி அவர் .....என்னவோ இவரைப்பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளத்தோன்றியது ....
J Banu Haroon---- ஜெ பானு ஹாரூன்

No comments: