Friday, February 16, 2018

பழையன போற்றுதும் புதியன புகுதலும் ஒரு புதையலைப்பார்த்த மகிழ்வு உள்ளத்தில்


நீடூரின் பழைய புகைவண்டி நிலைய கட்டிடம் இப்போது இருக்கும் புதியதைவிட பெரியது, அன்றைய மக்களின் விசாலமான மனதைப்போல!
எவெரேனும் ஹஜ்ஜுக்குச் சென்றாலும், திரும்ப வந்தாலும் ரயில் நிலையம் முழுக்க மக்கள் வெள்ளம் தான்!.
மாலை நேரங்களில் மதரஸா ஆசிரியர்கள் மாணவர்களுக்கும் கூட அது ஓர் சிறந்த ஓய்விடம்.
ஆலமரத்தின் விழுதுகளில் தொட்டில் கட்டி ஆடும் சிறுவர்களின் குதூகலம்....
அதெல்லாம் பழைய காலம்!
இன்றைய முதியோர்களின் வசந்த காலம்!

அப்பொழுதெல்லாம் குட்ஸ் வண்டிகளும் வந்து நிற்கும் இடமாகவும், குடோனும் கூட இருந்தது.
மூட்டைகளை எடை போடும் தராசில் ஏறி நின்று தங்களது எடை அளவை பார்த்துக்கொண்டு சந்தோஷப்பட்டவர்கள் பலர் உண்டு.
ஸ்டேஷனுக்கு எதிர்ப்புரம் இரண்டு தண்டவாளத்திற்கு அந்தப்-புரம் ஸ்டேஷன் மாஸ்டரின் வீடு இருக்கும்.
தேரிழந்தூரைச் சேர்ந்த் அப்துல் அஜீஸ் அண்ணன் பல ஆண்டுகளாக இங்கு ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியாற்றினார்கள். ரயில் வரும்போதும், போகும்போதும் ஸ்டேஷன் மாஸ்டர் யூனிஃபார்மில் பச்சைக்கொடி, சிகப்புக்கொடியை அசைக்கும் காட்சியும், இரவு நேரத்தில் சிக்னல் விளக்கை அசைக்கும் காட்சியும் இன்னும் மனக்கண்ணில் நிழலாடுகிறது.
பள்ளித் தேர்வு - பரீட்சை நெருங்கும்போது மாணவர்கள் பலருக்கு அமைதியாக படிக்கும் இடமாகவும் இந்த திறந்தவெளிப் பள்ளிக்கூடம் பயன்பட்டிருக்கிறதே!
வெளியூரிலிருந்து திரும்பும்போது இதற்குள் காலடி வைக்கும்போது சொந்த இல்லத்துக்குள் நுழைந்து விட்டது போன்ற உணர்வு ஏற்படுமே! அந்த உணர்வு இப்போதில்லையே ஏன்?
மழைக் காலங்களில் ஆடுகளுக்கும் கூட கொட்டகையாக பாதுகாப்பளித்த இடமல்லவா?
தொடர்ந்து பராமரிக்கப்பட்டிருந்தால் இடிக்கப்பட்டிருக்காதே எனும் ஆதங்கம்...
கட்டிடத்தின் முகப்பு தான் எவ்வளவு ஒரு கம்பீரம், கலைநயம்.
ஒரு புதையலைப்பார்த்த சந்தோஷம் உள்ளத்தில்...

M A Mohamed Ali




-------------------------------------------------------------
நீடூர் ஒரு சிற்றூராக பள்ளிவாசல் தெரு, மேலத்தெரு, கீழத் தெரு, என்ற மூன்று தெருக்களுக்குள் முடங்கிக் கிடந்தது. அஞ்சல் நிலையம் இல்லாமலும், ஊருக்கு அருகில் இரயில் பாதை இருந்தும் ஒரு இரயில் நிலையம் இல்லாமலும் இருந்தது. 1918-ல் ஒரு கிளை அஞ்சல் நிலையம் நீடூரில் அமைப்பதற்கு அவர்கள் முன்னோடியாக இருந்தார்கள். தற்போது நீடூரில் இரயில் நிலையம் அமைந்திருக்கும் இடம் அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப் அவர்களின் சொந்த இடமாகும். அந்த இடத்தை இனாமாக கொடுத்தது மட்டுமல்லாமல் அக்காலத்திலேயே ருபாய் ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து இரயில் நிலையம் ஏற்படுவதற்கு மூல புருஷராக இருந்தார்கள்.நீடூரை விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் அப்பொழுதே வேரூன்றலாயிற்று 

No comments: