Thursday, August 31, 2017

பேஸ்புக்கைத் திறந்தால்

Abu Haashima
பேஸ்புக்கைத் திறந்தால்
#ரோஹிங்கியா  முஸ்லிம்களின்
மரணம் தோய்ந்த முகங்கள் நெஞ்சைக் கீறிக் கிழிக்கின்றன.
அவற்றைப் பார்த்துவிட்டு
வேறு பதிவுகள் போடுவதற்கு
மனம் ஒப்பவில்லை என்பதால்
இரண்டு நாட்களாக
எதுவும் எழுதத் தோன்றவில்லை !
பெருநாளில் கூட
ஆர்வமில்லை.
ஒரு நேரப் பசிக்கும்
ஓரிரவு மின்வெட்டுக்கும்
சில கொசுக்கடிகளுக்கும்
ரொம்பவே அலுத்துக் கொள்கிற
சொகுசான வாழ்க்கைக்கு
நாம் பழகி விட்டோம்.

கண்ணெதிரே
கணவனை
மகனை
தகப்பனை
அடித்து அடித்தே கொலை செய்யும்
புத்த தீவிரவாதிகள் ...
அந்தக் கொடுமையைப் பார்த்தும்
சத்தமிட்டு அழ உரிமையில்லாத
என் சகோதரிகள் ..
தாயின் முகத்தையே
முழுவதுமாக பார்த்து முடிக்காத
இந்த பச்சைக் குழந்தையின்
வெறிச்சோடிய கண்களில்
தெரிவது
பயமா
மரணமா ?
லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்
என்று அல்லாஹ்வின் சந்நிதானத்தில்
லட்சக்கணக்கில் செலவு செய்து
இறை அருளை நாடி நிற்கின்ற
ஹாஜிகள் ...
புனித மண்ணின்
பாதுகாவலர்கள் என்று
சொல்லிக் கொள்ளக் கூடிய
ஆட்சியாளர்களின்
காதுகளில்
பர்மா குழந்தைகளின்
கதறல் கேட்கவில்லையே !
இறைவா ...
உன் இல்லம் தேடி வந்தவர்களுக்கு
நீ
இரங்குகிறாயோ இல்லையோ
உன்னையேத் " தேடி "
வந்து கொண்டிருக்கிறார்களே
ரோஹிங்கியா முஸ்லிம்கள் ...
அவர்களுக்கு
நீ
இரங்கு அல்லாஹ் !
உன் உதவியை
அவர்களுக்கு
இறக்கு அல்லாஹ் !
உன்மீது
ஈமான் கொண்ட
விசுவாசத்திற்காக
தங்களையே
குர்பானி கொடுத்துக் கொண்டிருக்கிறார்களே
அவர்களுக்கு
உன் அருளைப் பொழிவாய்
யா அல்லாஹ் !
இந்த தியாகத் திருநாளில்
உன்னிடம்
நான் வைக்கும்
கருணை மனு இதுதான் !
இரக்கமுள்ளவனே
ரஹ்மானே
இதனை
நீ
நிறைவேற்று
#யாஅல்லாஹ் !

Abu Haashima

No comments: