Monday, October 31, 2016

இனியாவது புத்தி புகட்டட்டுமென

துரோகியின் குற்றச்சாட்டுகளுக்குள் ஒளிந்திருக்கும்
உண்மையின் சிறுதுளிக்குள்
மூழ்கி மூர்ச்சையடைகிறாய் நீ
பின் நேர்மையின் தடயங்களைச் சிறு காகிதப் படகாக்கினாய்
பின் இக்கட்டான தருணங்களில் அணிந்திருந்த நம்பிக்கைகளை துடுப்பாக்கினாய்
பின் ஆரம்பகால எதிர்பார்ப்புகளற்ற உழைப்பை


மிதக்கும் ஒரு மரமாக்கிப் படகிலேறினாய்
இது கவிழ்ந்து விடக்கூடாதே என்று
உன் மனைவியின் கண்ணீரைக்கொண்டு பிரார்த்தித்தாய்
எப்படியாவது கரைசேர வேண்டுமே என்று
உன் குழந்தைகளின் நம்பிக்கைகளைக் கொண்டு இறைஞ்சினாய்
சலனப்பட்ட தருணங்கள் ஒரு திமிங்கலமாக உருவெடுத்து
மூழ்கடித்துவிடுமோ என்று திகிலுடனே படகைச் செலுத்திக் கொண்டிருக்கிறாய்

இந்த நெருக்கடியில் எடுத்துக்கொண்ட சபதங்களும்
இந்த வழுக்கலில் கற்றுக்கொண்ட பாடங்களும்
இனியாவது புத்தி புகட்டட்டுமென 
காற்றும் கடலும் கரைசேர்க்கட்டும் உன்னை என்றேன்



நிஷா மன்சூர்

No comments: