Tuesday, October 25, 2016

மார்பகப் புற்றுநோய் — கட்டுக்கதைகளும் பதில்களும் (பகுதி 1)

Shahjahan R

கட்டுக்கதை-1 : பிரா அணிவதால் மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
• தவறு. மார்பகத்தின் அமைப்புக்கேற்ப வடிவமைக்கும் (உட்புறம் மெல்லிய இரும்பு அல்லது பிளாஸ்டிக் பட்டைகள் வைத்த) பிரா அணிவதால், அது நிணநீர் கணுக்களை அழுத்துகிறது, அதனால் மாசுகள் உடலுக்குள் தங்கி விடுகின்றன, அதனால் மார்பகப் புற்றுநோய் வருகிறது என்ற கதை அபத்தமானது. அறிவியல்ரீதியாக பொருந்தாதது. அணியும் பிராவின் வகை அல்லது அதன் இறுக்கத்துக்கும் மார்பகப் புற்றுநோய்க்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவரவர் வசதிக்கேற்ப (இறுக்கமாகவோ தளர்ச்சியாகவோ) பிரா அணியலாம், அணியாமலும் இருக்கலாம்.
கட்டுக்கதை-2 : மார்பகத்தில் வரும் கட்டிகள் எல்லாமே புற்றுக்கழலைகள்தான்.

• தவறு. பெண்களின் மார்பகத்தில் வரும் கட்டிகளில் 80 விழுக்காடு, புற்றுநோய்க்குத் தொடர்பில்லாக காரணிகள் அல்லது நிலைமைகளால் வருகின்றன. இருப்பினும், மார்பகத்தில் எந்த மாற்றம் தெரிந்தாலும் ஆலோசைன பெறுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறாரகள். காரணம் என்னவென்றால், ஆரம்பநிலையிலேயே கண்டறிவது நன்மை தரும். மார்பகக் கட்டி புற்றுக்கழலையா என்று கண்டறிய, மம்மோகிராம், அல்ட்ராசவுண்ட், அல்லது பயாப்சி பரிசோதனையை மேற்கொள்ளுமாறு மருத்துவர் கூறுவார்.
கட்டுக்கதை-3 : அறுவை சிகிச்சையின்போது கட்டியின்மீது காற்றுப் படுவதால் புற்றுநோய் பரவிவிடும்.
• அறுவை சிகிச்சையால் புற்றுநோய் பரவாது. அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர், தான் எதிர்பார்த்ததைவிட அதிகமாகப் பரவி இருப்பதை அறுவை சிகிச்சை செய்யும்போது கண்டறியலாம். முதல்முறை உருவான கட்டியை நீக்கியபிறகும்கூட நோய் இதர பகுதிகளுக்குப் பரவக்கூடும்.
கட்டுக்கதை-4 : செயற்கை மார்பகங்களைப் பொருத்துவது புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும்.
• செயற்கை மார்பகம் பொருத்துவது என்றால் என்ன என்று முதலில் பார்ப்போம். மார்பகம் சிறியதாக இருப்பது, இரண்டு மார்பகங்களில் ஒன்று மட்டும் அளவில் சிறியதாக இருப்பது, புற்றுநோய்க்காக அல்லது வேறு நோய்க்காக மார்பகத்தை அறுவை சிகிச்சை செய்த்து ஆகிய காரணங்களால் செயற்கை மார்பகம் பொருத்தக்கூடும். அல்லது மார்பகத்தை பெரிதாகக் காட்டுவதற்காகவும் செயற்கை மார்பகத்தை பொருத்தக்கூடும். (இந்த வழக்கம் மேலைநாடுகளில்தான் அதிகம்.) இது சிலிக்கான் (அல்லது சலைன்) என்னும் தனிமங்களால் செய்யப்படுகிறது. இரண்டிலும் மேலுறை சிலிக்கானாகவே இருக்கும். ஒன்றில் சிலிக்கான் ஜெல் அடைக்கப்பட்டு, உறை மூடப்பட்டிருக்கும். மார்பகத்தின் கீழ்ப்பகுதியில் அறுத்து, சிலிக்கான் பொதியை உள்ளே செருகி தைத்து விடுவார்கள். மற்றொன்றில், சிலிக்கான் உறையை முதலில் உள்ளே செலுத்தி, அதில் சலைன் என்னும் உப்பு நீரை உள்ளே செலுத்தி மூடி விடுவார்கள். இதுதான் மார்பகப் பொதி (பிரெஸ்ட் இம்ப்ளான்ட்) எனப்படுகிறது. சலைன் நீர் பொருத்திய பொதியைக்காட்டிலும் சிலிக்கான் பொதி இயற்கையான மார்பகம் போன்ற உணர்வைத் தரும் என்கிறார்கள்.
செயற்கை மார்பகம் பொருத்துவதற்கும் புற்றுநோய்க்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. உள்ளே பொருத்தப்பட்ட பொதி ஒருவேளை சிதைந்துவிட்டாலும் அதனால் பாதிப்பு ஏதும் கிடையாது. சலைன் நீர் உடலோடு கலந்து விடும். சிலிக்கான் ஜெல் உடலோடு ஒட்டாமல் அப்படியே இருக்கும். செயற்கை மார்பகம் பொருத்தியவர்களுக்கு ஏதும் பிரச்சினை வந்தால் அறுவை சிகிச்சை செய்து அதை நீக்கி விடுவார்கள், அல்லது பழையதை நீக்கிவிட்டு புதியதை பொருத்துவார்கள். செயற்கை மார்பகப் பொதி சிதைவதால் மார்பகத்தின் வடிவம் மாறுவது, மார்பில் வலி போன்ற வேறு பிரச்சினைகள் வரலாமே தவிர, புற்றுநோய் இதனால் வருவதில்லை.
கட்டுக்கதை-5 : எட்டு பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் வரும் சாத்தியம் உண்டு.
• மார்பகப் புற்றுநோய் விகிதம் நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. வயது அதிகரிக்க அதிகரிக்க வாய்ப்புகளும் அதிகம். 85 வயதை எட்டியவர்களுக்கு வேண்டுமானால் எட்டில் ஒருவருக்கு வரக்கூடும்.
கட்டுக்கதை-6 : வியர்வைத் தடுப்பான்களை (antiperspirant) உபயோகிப்பதால் மார்பகப் புற்றுநோய் வரும்.
• இதற்கு ஆதாரம் ஏதுமில்லை என்கிறது அமெரிக்க புற்றுநோய் கழகம். ஆயினும், இன்னும் ஆராய்ச்சி தேவை என்றும் அதுவே சொல்கிறது. ஓர் ஆய்வில், மார்பகப் புற்றுநோய்க் கழலையை பரிசோதித்தபோது, அதில் மிகச்சிறிய அளவில் பாரபென் இருப்பதாகத் தெரிய வந்தது. பாரபென் என்பது வியர்வைத் தடுப்பான்களில் பயன்படுத்தப்படும் தனிமம். ஆனால், அந்த ஆய்வு பாரபென் காரணமாகவே மார்பகப் புற்றுநோய் வந்தது என்று நிரூபிக்கவில்லை, இரண்டுக்கும் இடையிலான தொடர்பையும் நிரூபிக்கவில்லை.
வியர்வைத் தடுப்பான்களில் அலுமினியத்தின் தனிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை வியர்வைத் துளைகளை அடைத்து செயலாற்றுகின்றன. மார்பகத்தின் அருகே உள்ள பகுதிகளில் அடிக்கடி இதைப் பயன்படுத்துவதால் இந்தத் தனிமங்கள் தோலில் ஊடுருவி, எஸ்டிரோஜன் போன்ற ஹார்மோன் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எஸ்டிரோஜன் என்பது மார்பகப் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தூண்டக்கூடியது என்று சிலர் கூறுகிறார்கள். மற்றொரு ஆய்வு, 16 வயதுக்கு முன்பே அக்குளில் சவரம் செய்பவர்கள், வியர்வைத் தடுப்பான் பயன்படுத்தியவர்கள் மத்தியில் மார்பகப் புற்றுநோய் அதிகம் என்று கண்டறிந்துள்ளது. ஆயினும் இதுவரை துல்லியமாக நிரூபிக்கப்படவில்லை. இன்னும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. antiperspirant, deodorants போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது என்று கூறலாம்.
கட்டுக்கதை-7 : மார்பகம் சிறிதாக இருப்பவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் குறைவு.
• மார்பகத்தின் அளவுக்கும் புற்றுநோய்க்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. சிறிய மார்பகங்களை பரிசோதிப்பது எளிதாக இருக்கலாம், மார்பகம் மிகப் பெரியதாக இருந்தால் பரிசோதிப்பது சிரம்மாக இருக்கலாம். மார்பகம் எந்த அளவுடையதாக இருந்தாலும், பெண்கள் அனைவரும் அவ்வப்போது பரிசோதித்துக்கொள்வதே நல்லது.
கட்டுக்கதை-8 : மார்பகப் புற்றுநோய் எப்போதும் ஒரு கட்டியின் வடிவிலேயே வரும்
• தவறு. மார்பகத்தில் வரும் ஒரு கட்டி புற்றுக்கழலையின் அடையாளமாகவும் இருக்கலாம், அல்லது சாதாரணக் கட்டியாகவும் இருக்கலாம். 80 சதவிகிதக் கட்டிகள் புற்றுக்கழலைகள் அல்ல. மார்பகத்தில் தோன்றும் இதர மாற்றங்களையும் பெண்கள் கவனித்துப் பார்க்க வேண்டும் — வீக்கம், தோலில் அரிப்பு, தோலில் புள்ளி புள்ளியாக தோன்றுதல், நிறம் மாறுதல், சிவத்தல், பட்டை பட்டையாகத் தோன்றுதல், மார்புக் காம்பு அல்லது தோல் கெட்டிப்படுதல், காம்பிலிருந்து பாலைத் தவிர திரவம் / இரத்தம் கலந்த திரவம் கசிதல்.
மார்பகத்தில் ஒரு கட்டியாகத் தெரிவதற்கு முன்பே புற்றுநோய் தோளுக்குக் கீழே நிணநீர்க் கணுக்களுக்கும் பரவியிருக்கக்கூடும். ம்ம்மோகிராம் சோதனை வெளியே தெரியாத நோயின் அறிகுறிகளைக் காட்டக்கூடும்.
கட்டுக்கதை-9 : மார்பக நீக்க அறுவை சிகிச்சை செய்துவிட்டால் அதற்குப்பிறகு புற்றுநோய் வராது
• மார்பகத்தில் கட்டியை நீக்க இரண்டு வகையான அறுவை சிகிச்சைகள் உண்டு. 1. லம்பெக்டமி – இதில் கட்டியை மட்டும் நீக்குவார்கள்; 2. மாஸ்டெக்டமி – இதில் மார்பகத்தை நீக்குவார்கள். மார்பகம் நீக்கப்பட்டு விட்டதால் புற்றுநோய் அணுக்கள் முற்றிலுமாக ஒழிந்து விட்டதாகப் பொருள் அல்ல. அறுவை சிகிச்சைக்கு முன்பே அவை வேறு பகுதிகளுக்குப் பரவியிருக்கலாம். சில பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த பிறகும் தோன்றலாம், சிலருக்கு காயத்தின் தழும்பு இருக்கும் இடத்தில் தோன்றலாம். ஆபத்துக் காரணிகள் அதிகமாக இருக்கும் பெண்களுக்கு மார்பகம் நீக்கப்பட்ட பிறகும் கழலை வளர வாய்ப்பு உண்டு. ஆறுதலான செய்தி என்னவென்றால், மார்பகம் நீக்கப்பட்ட பிறகு மீண்டும் மார்பகத்தில் புற்றுக்கழலை வரும் வாய்ப்பு 90% குறைவு.
கட்டுக்கதை-10 : பரம்பரையாக மார்பகப் புற்றுநோய் உள்ள பெண்களுக்குத்தான் மார்பகப் புற்றுநோய் ஆபத்து உண்டு.
• தவறு. மார்பகப் புற்றுநோய் இருப்பதாக்க் கண்டறியப்பட்ட பெண்களில் 70% பெண்களுக்கு நோய் வருவதற்கான காரணிகள் ஏதும் இருக்கவில்லை. பரம்பரையாக வருவது என்பதும் ஒரு காரணிதான், அது மட்டுமே காரணியல்ல.
ஏ என்பவரின் குடும்பத்தில் நேரடி உறவுடைய பெற்றவர், உடன்பிறப்பு, பிள்ளை இவர்களில் யாருக்கேனும் மார்பகப் புற்றுநோய் இருந்தது அல்லது இருக்கிறது என்றால், ஏ-வுக்கும் வரக்கூடிய வாய்ப்புகள் இரண்டு மடங்கு அதிகம். குடும்பத்தில் நேரடி உறவினர் இரண்டு பேருக்கு இருக்குமானால் ஏ-வுக்கு வரும் வாய்ப்பு இன்னும் அதிகமாகிறது.
மேலும் சில கட்டுக்கதைகளை அடுத்த பதிவில் பார்ப்போம்.

Shahjahan R

No comments: