Thursday, July 30, 2015

மரணம் வாழ்கையின் உண்மை

திடீரென இறப்பு இறைவனை நாடி
திடீரென இறப்பு செய்தி அதிர்ச்சி அனைவருக்கும்
திடீரென நிகழ்வாக நமக்கு
திட்டமிட்ட நிகழ்வு இறைவனுக்கு

இறைவன் கொடுப்பான் எடுப்பான்
இறைவன் கொடுப்பதும் எடுப்பதும் அவன் உரிமை
இறைவன் கொடுத்த உயிரை எடுக்க நமக்கு உரிமையில்லை
இறைவன் கொடுத்ததை எடுத்ததால் வருந்துவதில் பயனுமில்லை

மரணம் வாழ்கையின் உண்மை


“(பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே!” (அல் குர்ஆன் 55:26)
நபி (ஸல்) அவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறும் போது, “நிச்சயமாக நீரும் மரிப்பவர்! நிச்சயமாக அவர்களும் மரிப்பவர்களே!” (அல்குர்ஆன் 39:30)

மரணம் என்பது ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும், எந்த இடத்திலும், எந்த வயதிலும் ஏற்படலாம். எனவே மரணம் வந்துவிட்டால் அதை தடுக்கவோ அல்லது அதை பிற்படுத்தவோ அல்லது அதை விட்டு தப்பிக்கவோ இயலாது. அல்லாஹ் கூறுகிறான்:

“ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்” (அல் குர்ஆன் 7:34)

இறந்து விட்டால் நம்மைபற்றி நல்ல வார்த்தைகள் மக்கள் சொன்னால். நமக்காக இறைவனிடத்தில் வேண்டினால் அதுவே இந்த உலகில் நாம் பெற்றதில் உயர்வானது
இருக்கும்போது ,தட்டுங்கள் ,திருத்துங்கள் ,வழிகாட்டுங்கள் இறந்த பின் குறையாக யாரையும் சொல்லிவிடாதீர்கள் .இதுதான் இஸ்லாத்தின் வழிமுறை.

ஒருவர் உயிரோடு இருக்கும்வரை நல்லது கெட்டது எது செய்தாலும் அதை விமர்சனம் செய்வதும் குறைகளை சுட்டிக்க்காட்டுவதும் தவறில்லை. ஆனால் ஒருவர் மரணித்து விட்டால் அவரைப்பற்றி குறைகூறுவதை நபி(ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.

இறந்தவர்களை திட்டாதீர்கள்: ஏனெனில் அவர்கள் என்னென்ன செய்தார்களோ அதன் பலனை அவர்கள் அடைந்து விட்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) நூல்: அஹ்மத், புகாரி

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

இறந்தவரை மூன்று பொருள்கள் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) இரண்டு திரும்பிவிடுகின்றன. ஒன்று மட்டுமே அவருடன் தங்கிவிடுகிறது. அவரை அவரின் குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

உம்மு அத்திய்யா(ரலி) அறிவித்தார்
கணவருக்காகத் தவிர (வேறு யாருடைய இறப்புக்காகவும்) மூன்று நாள்களுக்கு அதிகமாகத் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாதென எங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது.
இதை முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) அறிவித்தார்.
எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் வாக்கு பிரமாணம் (பைஅத்) எடுக்கும்போது நாங்கள் மையத்திற்காக ஓலமிட்டு அழக்கூடாது என்றும் வாக்கு பிரமாணம் எடுத்தார்கள். அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம்

No comments: