Friday, July 10, 2015

உன்னால் முடியும்!!


வாலிபரே!! வாலிபரே!! 
வசந்த எல்லைத் தொட்டவரே
காலிறுதியாட்டம் வென்ற
காட்டாறு குணத்தவரே!!

வீதியெங்கும் வீண்வம்பு உனை
விலைப்பேசக் காத்திருக்கு
நீதி வழி யாதென்று
நீ அறிந்து நடைபோடு

அரும்பென மீசை முடி
அங்கங்கே துளிர் விடும்
அடித்தொண்டைக் குழி கிடந்து
அழகு குரல் ரெண்டு படும்

குறும்பெனப் பட்ட உன் செய்கை
பிறர் குறைக்கு ஆளாகும்
கூடவொழுக்கமெலாம்
கூடி வந்து உறவாடும்

விரலிடுக்கில் வெண்சுருட்டு
வித விதமாய் கைத்தொலைபேசி
பருவ மாற்ற விளம்பரமாய்
பறக்கும் இருச்சக்கர வாகனமும்

தலைவனென்றுத் தூக்கிப்பிடிக்க
யாரோ ஒரு சினிமாக்காரன்
தரங்கெட்டு விலைபோக
யாரோ ஒரு கட்சிக்காரன்

குளிர் பான அகராதியில்
மதுவையும் பதிந்த பெருமை
கூடார் பட்டியலில்
தந்தையை இணைத்த பேருண்மை

இளையோரே!! இளையோரே!!
இதுவல்ல உன் அடையாளம்

இலவச மோகங்காட்டி
இருப்பவர் தாலியறுக்கும்
மது விலாக்கா தலைவர்கள்
இம்மண்ணுக்கு இனி வேண்டாம்

மனிதருக்குள் பகையூட்டி
மதிகெடுத்து தலைவாங்கும்
மனிதமில்லா மதமொன்றும்
இம்மண்ணுக்கு இனி வேண்டாம்.

பசுமையழகுச் சேலையுறிந்து
பாலையாய் சிதைத்தொழிக்கும்
பன்னாட்டு நிறுவனமொன்றும்
இம்மண்ணுக்கு இனி வேண்டாம்

இளையோரே!!இளையோரே!!

இலையுதிந்த காலங்கள்
இன்றோடு போகட்டும்
இனி வரும் விடியல்கள்
இம்மண்ணின் வசந்தமாக இன்றே எழு

உன்னால்  முடியும் !!
 
தமிழ் பிரியன் நசீர்
 

No comments: