Tuesday, February 2, 2010

நகையே!

Jewels

அக்கா வரும் போதெல்லாம்
நடக்க வேண்டியிருக்கிறது
அடகுக் கடைக்கு.

தங்கச்சிக்காகவும் இனி
தனியாக வாங்கிச் சேர்க்கணும்.

கல்லூரிக் கனவில்
மூழ்கியிருக்கும் தம்பிக்கு
கை கொடுக்கக் காத்திருக்கும்
அம்மாவின் தாலிக்கொடி
 
இன்னமும் மீட்கப்படவேயில்லை
அண்ணனின் பயணத்திற்கு வைத்த
அண்ணியின் வளையல்களும்
அவளுடைய வாழ்க்கையும்.

அணிவதற்கன்று;
அவசரத்திற்கென்று
ஆகிவிட்ட உனக்கு
நல்ல பெயர் தான்
நகையே!

- இப்னு ஹம்துன்
நன்றி: http://www.keetru.com/literature/poems/ipnu_3.php

No comments: