Tuesday, September 6, 2022

#உமையாக்கள்_பாகம்_2 #அலீ_பின்_அபுதாலிப்_அத்தியாயம்_3 அபு ஹாஷிமா

 


#உமையாக்கள்_பாகம்_2

     #அலீ_பின்_அபுதாலிப்_அத்தியாயம்_3

                          அபு ஹாஷிமா

அண்ணல் நபிகளின்

அடிமனத்துக் காதலையெல்லாம்

அள்ளி எடுத்து சூடிக் கொண்டவர்

கதீஜா பிராட்டியார் .

அம்மையார் பெற்றெடுத்த

அழகு மகள் பாத்திமா

நபிகளின் ஓவியப் பிரதி .

அருமை மகள் மீது நபிகளாருக்குக் கொள்ளைப் பிரியம் .

தமது ஈரல் குலை என

உணர்ச்சி பொங்க அழைத்த பெருமானாரின் உயிர் கவிதை

ஃபாத்திமா .

தாயை இழந்த மகளுக்கு

தந்தையே   தாயுமானார் .

இதயப் பூவுக்கு மணம் முடித்து மகிழ ஆசைப்பட்டார் தந்தை .


ஃபாத்திமா பூமகளுக்கு

பருவம் பூத்த பத்தொன்பது வயது.

நபிகள் பெருமான்

தங்கள் குலக்கொடியின்

துணைக்கொடியை

இதயத்தில் நினைத்து

அது தகைய வருகின்ற நாளுக்கு

தவம் இருந்தார் .

பத்ரு களத்தில் வீரம் எழுதிய

வேங்கை  அலீயின்

வெற்றிப் பாக்களுக்கு

கதீஜா மகளார் 

கம்பீர மெட்டமைத்தார் .

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்

பெரும் பணக்காரர் .

நபிகளின் மகளுக்கு மணமாலை சூட்ட விருப்பப்பட்டு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் மஹராக தருவதற்கு தயாராக இருந்தார் .

நபிமார்களின் புதல்விகள்

பணத்திற்காக விற்கப்பட மாட்டார்கள்

என்பதை எடுத்துரைத்தார் நபிகள் .

பெருமானார் பெற்றெடுத்த பெண்ணரசிக்கு

வீரமகன் அபுதாலிப் பெற்றெடுத்த

வேங்கை அலீயே தகுதியானவர்

என அறிந்து கொண்ட

அபுபக்கரும் உமரும்

ஃபாத்திமாவை மணமுடிக்கும்

ஆசையை அலீயிடம் தூண்டி விட்டார்கள் .

அலீ ஏழையாக இருந்ததால்  பெருமானாரிடம் பெண் கேட்டு செல்ல

அவர் நாணப்பட்டார் .

நபிகளும் அலீயையே மணமகனாக தேர்ந்தெடுக்க விருப்பம் கொண்டார். ஆனாலும் ...

அல்லாஹ்வின் அனுமதிக்காக

நபிகள் காத்திருந்தார் .

நண்பர்களின் அன்புத் தொல்லை தாங்காமல் அலீ ஒருநாள்

பெருமானாரைக் காணச் சென்றார் .

ஆனால் வெட்கத்தின் வசப்பட்டு

நபிகள் வீட்டு முற்றத்திலேயே

முடங்கிக் கொண்டார் .

அருமை அலீ வந்திருப்பதை அறிந்த அண்ணல் பெருமானார் அவர்கள்

விரைந்து வந்து அவரை வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்கள் .

ஃபாத்திமாவை மணக்க விரும்பும்

தனது ஆசையை  சொல்ல

அலீயின் நாக்கு துடித்தது .

நாணம் தடுத்தது .

நபிகள் பெருமானார் அர்த்தம் பொதிந்த புன்னகை ஒன்றை படர விட்டு

" அலீயே  ... உமக்கு ஏன் இன்றைக்கு இத்தனை வெட்கம் ?

எண்ணி வந்ததை சொல்வதற்கு என்ன தயக்கம் ? " என்று கேட்டார்கள் .

அண்ணலின் செல்ல மகளை

தன் இல்லத்தின் மணமகளாக

ஆக்கிக் கொள்ளும் விருப்பத்தை

தயங்கித் தயங்கி சொல்லி முடித்தார் இளைஞர் அலீ.

நபிகள் ஆனந்தமாய்  அலீயை

அணைத்துக் கொண்டார்கள் .

அவரது வேண்டுதலையும்

ஏற்றுக் கொண்டார்கள் .

அலீ பெண் கேட்டு வருவதற்கு

சற்று முன்னர்தான் இறைவனின் அனுமதியும் அண்ணலுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

மிகுந்த மகிழ்வோடு அலீயை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு வந்தார் பெருமானார் .

மதினா நகரின் மக்கள் அழைக்கப்பட்டார்கள் .

பள்ளியின் முன்னால் திரண்டிருந்த மக்களிடையே அலீ பாத்திமா திருமண செய்தியை நபிகள் அறிவித்தார்கள் . இறைவனின் இசைவையும் எடுத்துச் சொன்னார்கள் .

தங்கள் மாநபி மகளின் 

மணச் செய்தியைக் கேட்டு

மாந்தர்தம் நெஞ்சமெல்லாம்

மகிழ்ச்சியில் நீராடின.

அவர்களின் கண்களிலெல்லாம்

ஆனந்த கண்ணீர் குதித்தாடின.

ஃபாத்திமா நாயகியார் தனது

இதயத்தின் இணக்கத்தை

மெளனத்தின் மொழியால் வெளிப்படுத்தினார் .

மக்கநபி மகளை மணமுடிப்பதற்கும்

மஹர் கொடுப்பதற்கும்

மிக்க ஏழையாக இருந்த அலீயிடம்

பணம் இல்லை .

பெருமானார் வழிகாட்டுதலில் தனது இரும்பு அங்கி ஒன்றை விற்பதற்கு

அலீ எடுத்து வந்தார் .

ஐந்து திர்ஹம் கூட பெறாத அந்த அங்கியை வள்ளல் உதுமான் 500 திர்ஹம் விலை கொடுத்து வாங்கிக் கொண்டார் .

தனக்கு சொந்தமாகிவிட்ட அதனை

மீண்டும் அலீக்கே அன்பளிப்பாய் வழங்கி ஆனந்தப்பட்டார் உதுமான்.

பணத்தை பெற்றுக்கொண்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிலாலை அழைத்து திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வரப் பணித்தார் .

மதினாவின் மக்கள் எல்லோரும்

நபியின் வீட்டில் திரண்டு இருக்க

அண்ணல் பெருமானார் அவர்கள்

தங்கள் அருமை கண்மணி

மகள் பாத்திமாவை

அலீ பின் அபுதாலிப் அவர்களுக்கு

மணம் செய்து கொடுத்தார்கள் .

" இறைவா இவர்கள் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பின் மீதும் உறவின் மீதும் அருள் பாலிப்பாயாக . இவர்களின் குழந்தைகளின் மீது உன் அருளை பொழிவாயாக " என அருளாசி பொழிந்தார்கள் .

திருமண விருந்தாக வழங்கப்பட்ட ஒரு கூடை பேரீத்தங்கனிகளை மக்கள் ஆர்வத்தோடும் வேகத்தோடும் எடுத்து ருசித்து சுவைத்து மகிழ்ந்தார்கள் .

திருமணம் முடிந்ததும் மணமகளை மணமகன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல தோழியர்கள் வந்தார்கள் .

பெற்ற மகளை மனம் உகந்தவருக்கே

கட்டிக் கொடுத்திருந்தாலும் கூட

மகள் மறு வீடு செல்வதை நினைத்து நபிகள் கண்கலங்கினார்கள் .

ஆருயிர் மனைவி கதீஜாவோடு இருந்து நடத்தி வைக்க வேண்டிய தங்கமகள் திருமணத்தை தான் மட்டுமே இருந்து நடத்தி முடித்த நிலையை நினைத்து நெஞ்சம் நெகிழ்ந்தார்கள்.

பள்ளிக்குச் சென்று தாம் திரும்பி வரும் வரையில் இருவரும் பேசிக்கொள்ள வேண்டாம் என மணமக்களிடம் கூறிவிட்டு சென்ற பெருமானார் இரவு நேர தொழுகையை முடித்துவிட்டு வந்தார்கள் .

ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வரச்செய்து அதில் தங்களின் திருக்கரங்களை நனைய விட்டு

அந்த நீரை மணமக்களின்

தலையின் மீது தெளித்தார்கள் .

தம் அருமை மகளைப் பார்த்து

" என் அன்புக் கண்மணியே மாப்பிள்ளைகளில் மிகச் சிறந்தவரை

நான் தேர்ந்தெடுத்து இருக்கிறேன்.

அவரை உமக்கு மணமுடித்து தந்திருக்கிறேன் . உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகட்டும் . அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் . " என வாழ்த்தினார்கள்.

பெருமானாரின் வாழ்த்துரைக்கேற்ப

அலீ - ஃபாத்திமா தம்பதிகள்

ஈருடல் ஓர் உயிராகவே வாழ்ந்தார்கள். ஒருவர் மனதை ஒருவர் புரிந்து கொண்டு அவர்கள் நடத்திய இல்லறம் முஸ்லிம்கள் அனைவருக்கும் பாடமாகவே அமைந்திருக்கிறது .

வறுமை அவர்களை வாட்டிய போதும் பொறுமையை கொண்டு அவர்கள்

அதனை வெற்றி கொண்டார்கள் .

கோதுமையை கையரைக்க

கோவுரையை நாவுரைக்க

போதுமென்ற பொன்மனத்தால்

பொலிவடைந்தீர் ஃபாத்திமா

என்ற இறையருட் கவிமணி

கா. அப்துல் கபூர் சாஹிப் அவர்களின்

புகழ் வரிகளுக்கேற்ப வாழ்ந்தவர்

ஃபாத்திமா நாயகியார்.

பல நாள்

பசித்திருந்து நோன்பிருந்து வாடியபோதும்

நோன்பு திறக்க வந்து சேர்ந்த உணவையும்

வறியவர்க்கு வாரி வழங்கிய வள்ளல்களாய் வாழ்ந்து காட்டிய அவர்களின் வாழ்வு ஈகையின் சிறப்பை

உலகுக்கே எடுத்துக் காட்டுவதாய்

அமைந்திருக்கிறது.

* இன்ஷா அல்லாஹ் ...

தொடரும் !

Abu Haashima

No comments: