Sunday, August 26, 2018

பள்ளிவாசல் நிர்வாகம்- பழைய வரலாறும் புதிய பார்வையும்-

Yembal Thajammul Mohammad



பள்ளிவாசல் நிர்வாகம்-
பழைய வரலாறும்
புதிய பார்வையும்-
---------------------------------------------------------------------------------
என்ற தலைப்பில்

தொடராகவோ குறிப்புகளாகவோ எழுதவேண்டும்...

அதுவும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள், தாம் நிறுவிய பொதுநல அரசின் சார்பில் முன்மாதிரியான அருளாட்சி செய்த மதீனாவிலிருந்து தொடங்கி எழுத வேண்டும்
என்று அடிக்கடி தோன்றுகிறது...

இறையில்லம் யாருடைய காணியாட்சிக்கும் உட்பட்டதா? அல்லது யாரோ சிலரின் உள்நோக்கங்களை நிறைவேற்றி நிலை நாட்டுவதற்கு உரிய இடமா?அல்லது பொதுமக்களின் ஆன்மீக லௌகீக நலனை முன்னிறுத்தி அவர்களை முன்னேற்றும் இடமா?அல்லது நமக்குத் தெரியாத பயன்பாடுகள் ஏதும் பள்ளிவாசல்களுக்கு உண்டா? என்பன போன்ற பல ஐயங்கள் எனக்கு வாழ்வில் எத்தனையோ முறை வந்து சென்றுள்ளன.

அதிகம் கல்லாத பேர்களை விட அதிகம் கற்றவர்களுக்கே கவனப்படுத்த வேண்டிய நிலை சிற்சில நேரங்களில் ஏற்படுவதை என்னைப் போலவே பலரும் (ஏக்கத்துடனோ,வருத்தத்துடனோ) யோசித்திருக்கக் கூடும்....

இதுபோல எத்தனையோ எண்ண ஓட்டங்கள் ...

நன்மையை நாடி எழுதினால், எங்காவது-யாருக்காவது பயன்படும் அல்லவா?

இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.....


பள்ளிவாசல் நிர்வாகம்-பழைய வரலாறும் புதிய பார்வையும் (2)
===============================================

“எங்கெங்கு தேடினும் காணாத நிம்மதி
இருக்கும் இடமன்றோ அல்லாஹ்வின் சந்நிதி
பங்கம் இல்லாமலே பல்கும் பெருநிதி
படைத்தவன் கொடுக்கின்ற சாந்தியே வெகுமதி!’’

என்று பாடினான் அவன். இங்கு சந்நிதி என்பது இறைவனின் ’திருமுன்’. எனினும் அதற்கு உகந்த இடமாக நம் மனதில் முதலில் தோன்றுவது பள்ளிவாசல் எனும் இறையில்லமே.

மனித குல வரலாற்றை யார் எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளட்டும்.இறைநம்பிக்கையாளர்களுக்கு முதல் மனிதரும் முதல் இறைத் தூதரும் ஆன ஆதம்-அலைஹிஸ்ஸலாம்- அவர்களில் இருந்தே தொடங்குகிறது. அவரும் அன்னை ஹவ்வா(அலை) அவர்களும் உலகில் சந்தித்துக் கொள்ளும் வரையில் மட்டுமல்ல,அதற்குப் பின்னரும் கூட அவர்கள் தமக்கென்று ஓர் இல்லத்தை முதலில் கட்டிக் கொள்ளவில்லை. இறைவனின் ஆணைப்படி மக்காவில் இருந்த ஒரு மணல்மேட்டில் ஆதம்-(அலை) அவர்களால்- முதல் மனிதரால் உலகில் முதன்முதலாக எழுப்பப்பட்ட கட்டிடமே இறை இல்லமான கஃபாதான்!உலக வரலாற்றில் முதலில் கட்டப்பட்டது கஃபாதான் என்பதை கட்டிடக்கலை தொடர்பான வரலாற்று வல்லுநர்களும் ஏற்கின்றனர் என்பதற்கு நூலாதாரம் உண்டு.

கஃபா < கஃபதுல்லாஹ் – அல்லாஹ்வின் இல்லமான இந்த இடம் உலகிலேயே ஆதம்-ஹவ்வா இணையருக்கு உவப்பான இடமாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அவர்களுக்கு இடையிலான காதலன்பு சிந்தாமல்,சிதறாமல் எப்படி முழுமையானதாக இருந்திருக்குமோ அதுபோல அவர்களுக்குக் கஃபதுல்லாஹ், பரிபூரணமான நிம்மதியை- மன இன்னமைதி (சாந்தி)யைத் தந்திருக்கும் என்பதிலும் ஐயமில்லை.

கஃபாவிற்கு அல்லாஹ்வின் இல்லம்(பைத்துல்லாஹ்), மாண்புமிகுந்த இல்லம்(பைத்துல் ஹரம்), ஆதிப் பழமை மிக்க இல்லம்(பைத்துல் அதீக்),இரத்தம் சிந்துதல் தடுக்கப்பட்ட-இறைவணக்கத்துக்காகவே ஏற்படுத்தப்பட்ட இல்லம், அநியாயக்காரர்களால் வெற்றி கொள்ளப்படாத இல்லம் என்று அடுத்தடுத்து ஏற்பட்ட பெயர்கள் எல்லாம் கஃபாவின் வரலாற்றோடு தொடர்புடையவை.

உலகத்தில் ஒரே ஓர் இணையர்,அவர்களுக்கு இறைவன் ஒருவன் என்று யாரும் சொல்லித்தரும் தேவை இருக்கவில்லை.அந்த இறைவனைத் தொழ ஒரே ஓர் இறையில்லம்! அதிலே அவர்கள் எவ்வளவு அமைதியாக,இனிமையாக, நிம்மதியாகத் தொழுது ஆன்மீக இன்பம் அடைந்திருப்பார்கள்!

ஒவ்வொரு பள்ளிவாசலும் பேரின்பம்தரும் கஃபாவின் பிரதிபலிப்புதான், ஒவ்வொரு மனிதரும் ஆதத்தின் மக்கள்தாம்! அந்தப் பிரதிபலிப்பும் பேரின்பமும் நமக்கு எந்த அளவுக்குக் கிடைக்கின்றன?இல்லையென்றால் அதற்கான காரணங்கள் யாவை?

சிந்திப்போம் …!

Yembal Thajammul Mohammad

No comments: