Monday, June 30, 2014

சவுதி அரேபியாவில் நோன்பு மாதம் சிறப்பாகச் செல்லும்.

சவுதி அரேபியாவில் நோன்பு மாதம் சிறப்பாகச் செல்லும். பெரும்பாலான அலுவலகங்களில் அதிகப்படியாய் நாள் ஒன்றுக்கு ஆறுமணி நேரம் பணி செய்தால் போதும்.

சூரிய உதயத்திற்கு முன் நோன்பு வைக்க வேண்டும். அதன்பின் நீர் கூட அருந்தக்கூடாது. சூரிய அஸ்தமனத்திற்குப்பின் நோன்பு திறக்க வேண்டும். பின் எது வேண்டுமோ சாப்பிடலாம்.

சவுதி அரேபியாவில் கோடை காலத்தில் சூரிய உதயம் முன்பே நிகழ்ந்துவிடுவதால், அதிகாலை மூன்று மணிக்கே நோன்பு வைக்க வேண்டி வரும்.

அதன்படி நாங்கள் தொழுகை அழைப்புக்கு முன் உணவு உண்டு நோன்பு வைத்துவிட்டோம். மணி மூன்றரை ஆகிவிட்டது.

மணி நான்கு ஆகியும் அப்துல் கதீர் உணவு உண்டுகொண்டு இருந்தான்.

”கதீர், என்னாச்சு இன்று உடல் நலம் சரி இல்லையா?”

“இல்லையே, நன்றாக இருக்கிறேன்”

“நோன்பு வைக்க வில்லையா?”

”வைக்கிறேனே”

”இன்று நோன்பு மூன்று மணிக்கே வைக்க வேண்டும்? தொழுகை அழைப்பு முடிந்து அரை மணி நேரம் ஆகிவிட்டது”

“நான் நாலரை மணிக்குத்தான் நோன்பு வைப்பேன்”

”ஏன்?”

”ஹைதராபாத்தில் நாலரை மணிக்குத்தான் நோன்பு வைப்போம்”

“கதீர், அங்கே சூரிய உதயம் தாமதமாக வரும். அதனால் தொழுகை அழைப்பு தாமதமாக வரும். ஆகவே நோன்பை நாலரை மணிக்கு வைக்கலாம். ஆனால் இங்கே சூரிய உதயம் முன்பே வந்துவிடுகிறது எனவே மூன்று மணிக்கே நோன்பு வைக்க வேண்டும். அப்படித்தானே குரானில் சொல்லி இருக்கிறது?”

”நான் சவுதிக்காரன் அல்ல. நான் ஹைதராபாத். ஹைதராபாத்தில் நாலரை மணிக்குத்தான் நோன்பு”

அப்துல் கதீர் தெளிவாகத்தான் இருந்தான். நாங்கள்தான் குழம்பிவிட்டோம்.

இதில் உபரி சிரிப்பு என்னவென்றால், நோன்பு திறப்பதை மட்டும் ஹைதராபாத் நேரத்தில் திறக்க மாட்டான். சவுதி படி முன்கூட்டியே பள்ளிவாசலில் தரும் இலவச உணவை உட்கொண்டு திறந்துவிடுவான்.

(அப்பொழுது நான் சவுதி அரேபியாவில் பணியாற்றிக்கொண்டிருந்தேன்- நாங்கள்தான் குழம்பிவிட்டோம் )

அன்புடன் புகாரி

No comments: