Friday, August 13, 2010

அரசியலில் ஈடுபடுங்கள்!


உலகின் மிகப்பெரிய ஜனநாயக அமைப்பு கொண்ட இந்தியாவின் அரசியல் வடிவம் என்பது முன்னேறிய நாடுகளான இங்கிலாந்து, அமெரிக்கா ஆகியவற்றின் அரசியல் கொள்கைகளின் கலவையாக இருக்கிறது. அரசியலில் ஈடுபடுபவர்களின் சுதந்திரமான செயல்பாடுகளுக்கு நம் அரசியல் அமைப்புச் சட்டம் உத்தரவாதமளிக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பலகட்சி உறுப்பினர்களை அங்கமாக கொண்ட பாராளுமன்ற ஆட்சி வடிவம் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கும், நிர்வாகத்துக்கும் பொறுப்பேற்றுக் கொள்கிறது. மாநிலங்களில் சட்டமன்றம் - நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ளாட்சி அமைப்புகள் என்று மக்களை ஆளும் அமைப்புகள் அனைத்துமே பாராளுமன்ற வடிவத்திலேயே இங்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தன்னை புதுப்பித்துக் கொள்கிறது. 60 ஆண்டுகால இந்திய குடியரசு வரலாற்றில் ‘எமர்ஜென்ஸி’ காலம் தவிர்த்து, வேறெப்போதும் இவ்வமைப்புகள் முடக்கப்பட்டதேயில்லை என்பதுதான் இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரும் சாதனை.

இப்படிப்பட்ட தலைசிறந்த மக்களாட்சி அமைப்புமுறையில், அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு என்னவகையிலான சுதந்திரம் இருக்கிறது? இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், இந்தியராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தகுதியான வயது வந்ததும் ஓட்டுரிமை வழங்குகிறது. ஓட்டு போடுகிற உரிமை இருக்கிற ஒவ்வொருவரும் அரசியலில் ஈடுபடுகிற அந்தஸ்து பெற்றவர்களாகிறார்கள்.

தனிப்பட்ட முறையில் தங்களுக்கு உடன்பாடான கொள்கைகளை கொண்ட கட்சியில் சேர்ந்தோ, அல்லது சுயேச்சையாகவோ தேர்தல்களில் பங்கேற்கலாம். அரசியலில் பங்கேற்க சாதி, மதம், இனம், மொழி, நிறம், ஆண் பெண் பேதம் எதுவும் தடையில்லை என்று அரசியல் அமைப்புச் சட்டம் சுதந்திரமளிக்கிறது.

அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கும் இந்தச் சுதந்திரத்தை உண்மையிலேயே அரசியலில் ஈடுபட நினைக்கும் எல்லோரும் பயன்படுத்திக் கொள்ள முடிகிறதா என்பதுதான் கேள்விக்குறி. ஏனெனில் அரசியல் கட்சிகளின் ஆதிக்கத்தில் இந்தியா இருக்கிறது. கட்சி சார்பற்றவர்கள் தேர்தலில் நின்று, வெற்றிபெற்று மக்களுக்கு சேவையாற்ற முடியுமென்ற நம்பிக்கை கடந்த அறுபதாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவருகிறது. சுயேச்சையாக ஒருவர் வெற்றிபெற வேண்டுமானால், அவர் அப்பகுதியில் செல்வாக்கு மிகுந்த செல்வந்தராகவே இருந்தாக வேண்டும் என்பதுதான் யதார்த்தம்.

தேர்தலில் நின்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பில்லாத பெரிய தொழில் அதிபர்கள் பலரும், அறிஞர் அவை என்று சொல்லப்படுகிற ராஜ்யசபாவுக்கும், சட்டமன்ற மேலவைகளுக்கும் ‘எப்படியோ’ தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதை அடிக்கடி செய்தித்தாள்களில் நாம் வாசிக்க நேர்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் தன் ஒவ்வொரு குடிமகனுக்கும் தரும் அரசியல் சுதந்திரம் என்பது ஏட்டளவில் மட்டுமே இருக்கிறது என்பதுதான் யதார்த்தமான உண்மை. அரசியலில் ஈடுபட்டு கவுன்சிலர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், முதல்வர், பிரதமர், குடியரசுத்தலைவர் என்று ஒரு எளியக்குடிமகன் உயரமுடியுமாவென்றால், முடியுமென்று சொல்கிறது அரசியல் சட்டம். முடியாது என்கிறது இந்தியாவின் தற்கால நிலவரம்.

இதற்கு யாரை குற்றம் சொல்வது? அரசியல் கட்சிகளையா, அரசியல்வாதிகளையா? அரசியல்வாதிகளுக்கு ஓட்டுபோட்டு, அரசியல் கட்சிகளை ஆட்சிப்பீடத்தில் ஏற்றும் வாக்காளர்களைதான் நாம் குற்றவாளிக்கூண்டில் ஏற்ற வேண்டும். ஏனென்றால் நம்மை ஆளுபவர்களை நாம் தான் தேர்ந்தெடுக்கிறோம். தேர்ந்தெடுத்துவிட்டு லஞ்ச லாவண்யம், ஊழல், அராஜகம், நிர்வாகக்குளறுபடி என்று அடுத்த ஐந்தாண்டுகளுக்கு புலம்பிக் கொண்டிருக்கிறோம். வேறு ஒரு கட்சியை அடுத்த தேர்தலுக்கு தேர்ந்தெடுக்கிறோம். அவர்கள் மீதும் அதே பழைய லாவணி. மீண்டும் அடுத்த தேர்தலில் முந்தைய கட்சியை ஆதரிக்கிறோம்.

தேர்தல் நாளன்று நம்மைப்போன்ற ஒருவருக்கு நாம் வாக்களிப்பதில்லை என்பதுதான் பிரச்சினை. அரசியலில் எளிமை, தூய்மை, வாய்மையென்று முயற்சிப்பவர்களுக்கு நாம் வாக்களிப்பதில்லை. ஜனநாயகத்துக்கு வலு சேர்க்க ஐந்தாண்டுகளுக்கு ஒரு நாளாவது நாம் நேர்மையாக, கூர்மையாக சிந்தித்து செயல்படுவதின் மூலமாகவே, நமக்கு கொடுக்கப்பட்ட அரசியல் சுதந்திரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்கிறவர்களாக அறியப்படுவோம்.

சரி, அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு இருக்கும் பொறுப்புகள் என்னவென்று பார்ப்போம். மிகச்சுருக்கமாக ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத்தருவதே இவர்களது தலையாயப் பொறுப்பு.

அடிப்படை உரிமைகள் என்றால் ஒவ்வொரு குடிமகனும், வாழ்வதற்கு ஏதுவான சூழல் என்று எடுத்துக் கொள்ளலாம். குடிநீர், உணவு, கல்வி, வேலைவாய்ப்பு என்று அடுக்கிக்கொண்டே போகலாம். உண்மையைச் சொல்லப்போனால் மக்களின் அடிப்படைத்தேவைகள் என்பது மிகக்குறைவானதுதான். ஆயினும் அதுகூட இந்த அறுபதாண்டு கால அவகாசத்தில் முழுமையாக நிறைவேற்றப் படவில்லை என்பதுதான் வேதனை. பாதுகாக்கப்பட்ட குடிநீர் கூட இன்னமும் அனைவருக்கும் கிடைக்கவில்லை. எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் கிட்டத்த 40 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். கல்வி, வேலைவாய்ப்பு என்று நிறையப் பிரச்சினைகள் இருந்துகொண்டே இருக்கிறது. இவையெல்லாம் இன்னும் பொறுப்புடன் செயல்படுங்கள் என்று அரசியல்வாதிகளுக்கு அலாரம் அடித்துக்கொண்டும் இருக்கிறது.

கடந்த ஆண்டு, இந்தியத் தலைநகர் டெல்லி பள்ளி மாணவர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றினைப் பார்ப்போம். உங்களுக்கு ரோல்மாடலாக யாரை எடுத்துக் கொள்வீர்கள் என்பது மாணவர்களிடையே கேட்கப்பட்ட கேள்வி. 13 சதவிகித மாணவர்கள் மறைந்த, சுதந்திரத்துக்கு பாடுபட்ட நாற்பதாண்டுகளுக்கு முந்தையத் தலைவர்களின் பெயர்களை உச்சரிக்கிறார்கள். இன்றைய அரசியல் தலைவர்கள் சிலரின் பெயரை சொன்னவர்கள் வெறும் 2 சதவிகிதம் பேர்தான். மீதி மாணவர்கள் பலரும் அரசியல்சாராத மற்ற பிரிவினரின் பெயர்களைதான் தங்கள் ரோல்மாடலாக கருதுகிறார்கள். அடுத்த தலைமுறை அரசியலை தவிர்க்கிறது என்பதை இன்றைய அரசியல்வாதிகள் உணர்ந்தேயாக வேண்டும். பொறுப்பினை தட்டிக் கழிப்பவர்கள் சமூகத்தால் தவிர்க்கப்படுகிறார்கள்.

கடந்துபோன அரசியல் தலைவர்களின் மீது கூட இன்றையத் தலைமுறைக்கு இருக்கும் நம்பிக்கைகளும், மதிப்பீடுகளும் ஏன் இன்றையத் தலைவர்கள் மீது இல்லை?

ஏழ்மை, கல்வியறிவின்மை, ஊழல், நோய்கள், ஊட்டமான உணவிண்மை என்று ஏராளமான விஷயங்கள் பாக்கியிருக்கிறது. இவற்றை விரைவாக களைவதுதான் அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களின் முக்கியமான பொறுப்பு. இதுவொன்றும் மலையை கயிறுக் கட்டி இழுக்கும் அசாத்தியமான பணியுமல்ல.

சந்தை சீர்த்திருத்தங்களுக்கு பிறகாக பொருளாதார அடிப்படையில் அசுரவேகம் அடைந்திருக்கும் நாடாக நம் நாடு இருக்கிறது. நாட்டை ஒரு வயலாக எடுத்துக் கொண்டால், பாய்ச்சப்படும் நீர் ஒரே இடத்தில் தேங்காமல் எல்லாப் பகுதிக்கும் பரவலாகப் பாயவேண்டும். இதைக் கண்காணிக்கும் பொறுப்புதான் அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு இருக்கிறது.

‘இது சரியில்லை, அது சரியில்லை’யென்று புலம்பிக் கொண்டிருப்பவர்களால் எந்த பிரயோசனமும் இல்லை. புலம்புபவர்களுக்கு உண்மையாகவே அக்கறை இருக்குமானால் நேரடியாகவோ, மறைமுகவாகவோ அரசியலில் ஈடுபட்டு அனைத்தையும் சரி செய்ய முன்வரவேண்டும். குறைந்தபட்சம் தேர்தல் நாளன்று ஓட்டு போட மட்டுமாவது வாக்குச்சாவடிக்கு சென்றாக வேண்டும் என்பதே நம் எதிர்ப்பார்ப்பு.

No comments: