Tuesday, March 8, 2016

வெள்ளி பூத்தே விடியும் வானம்மா

நான் எழுதிய என் முதலாவது கவிதை இது
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வெள்ளி பூத்தே விடியும் வானம்மா 
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
பத்து மாதம் சுமந்தே என்னைப்
பரிவுடன் வளர்த்தவள் அன்னை!
இத் தரை தன்னில் இவளருந் தியாகம்
எழுந்தே தொட்டிடும் விண்ணை !
கண்ணே ! என்று இமையைப் போலவே
காத்திருப்பாள் இவள் நிதமே !
பொண்ணே என்றும் பூவே என்றும்
பொழியும் அன்போர் விதமே !
ஈயோடெறும்பு எதுவும் அணுகா(து)
இனிதாய் வளர்த்த உள்ளம்
தோயும் அன்புச் சுடராய் என்னைத்
துலங்க வைத்தாய் உய்வோம் !
பள்ளிப் பாடம் சொல்லித் தந்தே
பண்பாய் அனுப்பி விடுவாள்

வெள்ளி பூத்தே விடியும் வானாய்
விளங்க அனைத்தும் இடுவாள் !
பட்டம் பெற்றே பதவிகள் பெற்றுப்
பாரினில் துலங்க வைத்தாள்
தொட்டுப் பேசித் துணையாய் நிற்கும்
தூய உள்ளம் அன்னை !
உதிரந் தன்னைப் பாலாய் உதிர்த்து
ஊட்டி வளர்த்தவள் அன்னை
இதயத் தரையில் வாழும் உள்ளம்
இவளை மறேவேன் மண்ணில் !
(உலகின் அனைத்து அன்னையர்களுக்கும் அன்பு வாழ்த்துக்கள்!)

No comments: