Thursday, March 24, 2016

அரச கட்டளை

நான் இறந்தால், உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் என் சவப்பெட்டி அருகில் அமர வேண்டும்.
நான் பாதுகாத்து வைத்துள்ள விலை மதிப்பற்ற பொக்கிஷங்கள் வழிநெடுகிலும் தூவப்பட வேண்டும்.
என்னை கிடத்தியிருக்கும் சவப்பெட்டியின் இருபுறமும் என் கைகள் வெளியில் தெரியும் வண்ணம் மேல் நோக்கி விரித்து வைக்கப்பட வேண்டும்.
உலகின் பாதிக்கும் மேலான நிலபரப்பை தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்து ஆட்சி புரிந்த மாவீரன், அலெக்சாண்டரின் கடைசி ஆசைகளை கேட்டு அவனது தளபதிகள் திகைத்தனர்.
அவனது அப்போதைய வயது முப்பத்திரண்டு.

மிகவும் இளம் வயது. பாபிலோனியாவில் - ஒரு காட்டு மண்டபத்தில், மலேரியா காய்ச்சலின் தீவிர ஜுரத்தில், அவன் மூர்ச்சையாகி கிடந்த போது சுயநினைவின்றி அவன் பிதற்றுகிறான் என்று தான் அவன் தளபதிகள் எண்ணினர்.
சற்று நினைவு திரும்பிய அலெக்சாண்டரிடம், அவன் பிரதம தளபதி அதற்கான காரணத்தை விளக்கும்படி வேண்டினான்.
அந்த கேள்விக்கு சிரித்துக் கொண்டே பதிலை தந்தான் அலெக்சாண்டர்.
மருத்துவர்களை அழைக்க காரணம்...
உலகின் உன்னத மருத்துவ மேதைகளால் கூட மாமன்னன் அலெக்சாண்டர் உயிரை காப்பாற்ற இயலவில்லை.
விலை உயர்ந்த பொக்கிஷங்களால்... இறந்து போனவனுக்கு எந்த பயனும் இல்லை. வாரி - வழியெங்கும் எறிவதே மகத்துவம் வாய்ந்த செயலாகும். தேவை உள்ளவர் இதனால் பயன் பெறலாம்.
கைகளை வெளியில் தெரியும்படி கிடத்தக் காரணம்......
அலெக்சாண்டர் வெறுங்கையோடு தான் பிறந்தான். இப்போது வெறுங்கையோடு தான் மரண ஊர்வலம் போகிறான்.
எதையும் கொண்டு வரவுமில்லை.
இங்கிருந்து எதையும் கொண்டு போகவுமில்லை.
மாமன்னன் வாழ்ந்த வெற்று வரலாற்றை உலக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நமது நிலைகெட்ட கோமாளித் தலைவர்களை நினைத்தால் சிரிப்பு தான் வருகுதய்யா.

Vavar F Habibullah

No comments: