Tuesday, March 1, 2016

உட்டாலக்கடி

“இந்த உட்டாலக்கடி வேலையெல்லாம் நம்ம கிட்ட வேணாம்”. இப்படி பலரும் எச்சரிப்பதை நாம் கேட்டிருக்கிறோம்.

“உட்டாலக்கடி” என்ற தத்துவச் சொல்லுக்கு என்னதான் அர்த்தம் என்று 1.36 கிலோ எடையுள்ள மூளையை பலரும் போட்டு கசக்கக் கூடும். இதோ சொல்லுகிறேன். ஆனால் கொஞ்சம் பொறுமை தேவை.

சென்னைத் தமிழின் பிரதான அங்கம் இந்த “உட்டாலக்கடி” சொற்பதம்.

“உட்டாலக்கடி கிரி கிரி, சைதாப்பேட்டை வடைகறி” என்ற பழமொழி மிகவும் பிரசித்தம். இந்த கிரி கிரி யார்? அழகிரியா அல்லது வி.வி.கிரியா என்று எனக்குத் தெரியாது. ஆனால் சைதாப்பேட்டை வடைகறியைப் பற்றி எனக்கு கொஞ்சம் தெரியும்.

சைதாப்பேட்டையில் குமரன் வைத்திருக்கும் 65 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த “மாரி ஹோட்டல்” வடைகறிக்கு பிரசித்தமானது.


“உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே !
மச்சானைதொட அச்சாரம் தர்றேன் சும்மா நிக்குறியே” –
(படம்: மை டியர் மார்த்தாண்டான்)

“உட்டாலக்கடி உட்டாலக்கடி பாட்டிருக்குது”
(படம் : உள்ளே வெளியே)

“அடி உட்டாலக்கடி ஜின்னு, நீ உருட்டி எடுத்த பன்னு
அடி ஏதாச்சும் நீ பண்ணு, இனி நீயும் நானும் ஒண்ணு”
(படம் – சிலம்பாட்டம்)

மேற்கண்ட பாடல் வரிகள் யாவும் திரைப்படத்தில் வெளிவந்த “உட்டாலக்கடி” தத்துவப் பாடல்கள்.

என் மனதை மிகவும் நோகடித்த வரிகளில் ஒன்று வாலிபக்கவிஞர் வாலி எழுதிய இந்த வரிகள்தான்:

“உட்டாலக்கடி செவத்த தோலுதான் – உத்துப் பார்த்தா
உள்ள தெரியும் நாயுடு ஹாலுதான்”

“பீப்” பாடலுக்கு கொதித்தெழுந்த மாதர் சங்கங்கள் அப்போது இந்த வரிகளுக்கு கொதித்து எழுந்தார்களா என்ற விவரம் நான் அறிந்திருக்கவில்லை.

“உட்டாலக்கடி” என்றால் என்ன அர்த்தம்? ஒரு தொலைக்காட்சி பேட்டியின்போது நடிகர் கமல்ஹாஸனும் இதற்கான விளக்கம் அளித்திருந்தார்.

“உட்டாலக்கடி” என்றால் வேறொன்றுமில்லை. இந்தியில் “எடு அந்த கம்பை” என்று பொருள். பயமுத்துவதற்காக வழக்கில் வந்த சொல். அம்புடுதேன்.

பிள்ளைகள் வம்பு தும்பு செய்தால் பெற்றோர்கள் அவர்களை அதட்டுவதற்காக “எடுடா அந்த கம்பை” என்பார்கள். ஆனால் எடுக்க மாட்டார்கள். உடனே பிள்ளைகள் அழுகையை நிறுத்திவிட்டு, வழிக்கு வந்துவிடுவார்கள். இதுதான் அந்த “உட்டாலக்கடி”யின் சிதம்பர ரகசியம். ஒரு பூனையை விரட்டுவதாக இருந்தால்கூட கம்பை எடுப்பதுபோல் “பாவ்லா” செய்தால் போதும், அது தானாகவே தலை தெறிக்க ஓடிவிடும். (தலை ரசிகர்கள் என்னை மன்னிப்பார்களாக)

சங்க காலத்தில் தினைப்புனத்தில் மேய வரும் பறவைகளை விரட்டுவதற்காகத் தமிழ்ப் பெண்கள் “உட்டாலக்கடி” என்றெல்லாம் பாவ்லா காட்ட மாட்டார்கள். காலில் அணிந்திருக்கும் தங்கத்தாலான காதணியைக் கழற்றி ‘ஸ்பின் பெளலிங்’ பண்ணுவார்களாம். அந்த அளவுக்குச் செல்வச் செழிப்புடன் அவர்கள் அப்போது வாழ்ந்திருக்கிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் பத்திரிக்கைகளும், ஊடகங்களும் “உட்டாலக்கடி”யையும் “உல்டா” பண்ணுவதையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள். தகிடுதத்தம் செய்யும் 420 வேலையைத்தான் ஆளைக் கவுத்தும் “உல்டா” பணி என்பது. “உல்டாவு”க்கும், “உட்டாலக்கடி”க்கும் உண்மையிலேயே எந்த WIFI கனெக்ஷனும் கிடையாது.

அடிக்கக்கூடாது. ஆனால் அடிக்க வருவதைப்போல் “உட்டாலக்கடி” பாவ்லா செய்ய வேண்டும். இதுதான் Moral of the Story.

சாம, தான, பேத, தண்டம் என்னும் நான்கு தீர்வு முறைகள் பற்றிச் சொல்வார்கள். பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பது “சாம” டெக்னிக். பணம் பொருள், சம்திங் கொடுத்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பது இரண்டாவது “தான” டெக்னிக். மிரட்டி பணிய வைப்பது மூன்றாவது “பேத” டெக்னிக். இது எதற்கும் ஒத்து வரவில்லையென்றால் போட்டுச் சாத்துவது கடைசி “தண்டம்” டெக்னிக்.

இன்று ‘லஞ்சத்தை ஒழிப்போம்’, ‘லஞ்சத்தை ஒழிப்போம்’ என்று ஒவ்வொருவரும் கூக்குரல் கொடுக்கிறார்களே! “சம்திங்” மூலம் காரியத்தைச் சாதிக்கலாம் என்று நமக்கு சூப்பர் ஐடியா சொல்லிக் கொடுத்ததே நம்ம சாணக்கியர் சார்தான்.

ஆக இந்த கடைசி டெக்னிக் இருக்கிறதே அதுதான் “தர்ம அடி”

“அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான்” “கோல் எடுத்தால் குரங்கு ஆடும்” போன்ற பழமொழி யாவும் இந்தக் கருத்தை மையமாக வைத்து பிறந்ததுதான்.

“இரண்டு அடி கொடுத்தால் தான்
திருந்துவாய்; வாங்கிக்கொள்
வள்ளுவனிடம்”

என்று கவிஞர் அறிவுமதி எழுதிய கவிதை வரிகளை ரசித்திருக்கிறேன்.

வரும் தேர்தலின்போது உங்கள் வீட்டைத்தேடி ஓட்டுக் கேட்கவரும் அரசியல்வாதிகள் ஏமாற்றுப் பேர்வழிகள் என்று நீங்கள் நினைத்தால் “உட்டாலக்கடி” என்று கூறுங்கள். அது போதும்.

தோளில் உள்ள துண்டைக் காணோம்; துணியைக் காணோம் என்று பின்னங்கால் பிடறியில் தெறிக்க ஓடியே போய் விடுவார்கள்.

[பி.கு:அருஞ்சொற் பொருள்: பாவ்லா = பிலிம் காட்டுவது]

அப்துல் கையூம்
https://nagoori.wordpress.com/

No comments: