Tuesday, November 17, 2015

வளைகுடா அனுப்பிவிட்டு கணவனை பிரிந்திருக்கும் என் தோழியர் சார்பாக...

வளைகுடா அனுப்பிவிட்டு கணவனை பிரிந்திருக்கும் என் தோழியர் சார்பாக...
(எனக்கு அந்த அனுபவம் இல்லை...- Suhaina Mazhar)

அழகு வாழ்வினிலே
பழகும் நாட்களெல்லாம்
பசுமைகள் தந்தாரடி - தோழி
பாசாங்கு இல்லையடி

இணைந்த ஞாபகங்கள்
பிணைந்து கிடப்பதனால்
இனிமைகள் மறந்தேனடி - தோழி
தனிமையும் கொல்லுதடி

வாச முல்லை மலர்
நேசநெஞ்சில் வந்து
ஆசையை விதைத்தடி - தோழி
ஆர்வம் மிகைத்ததடி

ஏக்கம் கொண்டமனம்
எண்ணம் விதைத்துநிதம்
அறுவடை செய்தேனடி - தோழி
ஆறுதல் பெற்றேனடி

பெண்ணின் வாட்டமெல்லாம்
கண்ணின் இமையினுள்ளே
அடைத்து வைத்தேனடி - தோழி
பொறுமை காத்தேனடி

மழலை முகத்தினிலே
அவரின் முகத்தைக்கண்டு
தேறுதல் கொண்டேனடி - தோழி
தேன்சுவை கண்டேனடி

நினைவில் விலகிடினும்
கனவில் நெருங்கி வந்து
கவிதைகள் சொல்வாரடி - தோழி
காவியம் படைப்போமடி

நாயன் அருளைசெய்தால்
நாளும் கூடி வரும்
வாழ வழியும் தரும் - தோழி
என் வாட்டம் போக்கிவிடும்.
 

No comments: