Sunday, March 9, 2014

வெளிநாட்டில் நான்..

சோகங்களைச் சொந்தமாக்கி
இதயத்தைப் பாரமாக்கி
இருட்டினில் நாம்
வெளிநாட்டில் நான்!

அன்புக்குச் சேதாரமாய்
உன் புகைப்படம் மட்டும்
தற்போது ஆதாரமாய்!

எல்லாமே இழந்து
பணத்துக்காக மட்டுமே
இங்கேப் பயணம்;
எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்
உன் சந்திப்பின் தருணம்!

புத்தாடை உனக்குண்டு
பிள்ளைக்கு நகையுண்டு
செலவுக்குப் பணமுண்டு;
உழைக்க நானுண்டு
பிழைக்கப் பாலையுண்டு!

சிந்தியக் கண்ணீரையும்
சிரிப்பால் மறைப்பேன்;
கவலையேதுமில்லை என
உரைப்பேன்!

மச்சினனுக்கும் விசா வேண்டுமென
விண்ணப்பம் ஒன்றுப் போட்டாய்;
சிரித்துக்கொண்டே அழைத்துக்கொண்டேன்
வளைகுடா வலையில்
இன்னொரு விருந்தாளியா
என்னைப்போல ஏமாளியா!


யாசர் அரபாத்  Yasar Arafat
http://itzyasa.blogspot.in/

No comments: