Saturday, January 29, 2011

மனம் மகிழுங்கள் - 33 : பிரச்சினைகளும் வரமே

மனம் மகிழுங்கள்!
33 - பிரச்சினைகளும் வரமே
- நூருத்தீன்
"பொழுது விடிஞ்சு பொழுதுபோனா நாள்தோறும் ஏதாவது பிரச்சனை!"

இப்படி, அல்லது இதைப் போன்று ஒரு வசனம் - நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயம். தெருவில் வண்டி தள்ளி காய்கறி வியாபாரம் செய்பவரிலிருந்து மிகப் பெரும் தொழிலதிபர்வரை அவரவர் செல்வாக்கு, வசதிக்கேற்பப் பிரச்சினை, பிரச்சினை.
உலகில் யாருக்கு இல்லை பிரச்சினை?

"இதையெல்லாம் விட்டுத் தள்ளிட்டு எங்காவது கண்காணாத ஓர் ஊருக்கு ஓடிப்போய், அக்கடான்னு கிடக்கலாம்னு தோணுது" விரக்தியின் உச்சத்தில் இப்படியானதொரு சலிப்பும் சகஜமே.

என்ன செய்வது? பிரச்சினைதான்! பிக்கல் பிடுங்கல்தான்! தெளிவான வானம், அமைதியான கடல், தூய்மையான மணல் என்று உலகின் ஏதாவது மூலையில் அரவமற்றுக் கிடக்கும் கடற்கரையில் துண்டுவிரித்து, கண்ணில் கூலிங்க்ளாஸ் மாட்டிக் கொண்டு கண்மூடிப் படுத்துக்கொள்ள மனம் விம்மி விம்மி ஏங்கிக் கிடக்கிறது!

சரி, ஏதோ குருட்டாம் போக்கில் அப்படியொரு வாய்ப்பு அமைந்து கடற்கரை மணலில் ‘மக்க, மல்லாக்க’ப் படுத்துக் கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். எத்தனை நாள் அல்லது வாரம் அல்லது மாதம் அப்படிக் கிடக்க முடியும்? யாரால் அப்படிச் சும்மாவே இருக்க முடியும்? எருமை மாடு? ம்ஹும்! அதுவும்கூட சிறிது நேரத்திற்குப்பின் எழுந்து ஆட்டோக்காரன் வசவையெல்லாம் சட்டை செய்யாமல் தெருவில் நடக்க ஆரம்பித்துவிடும். யோசித்துப் பாருங்கள். அவ்விதம் கால் நீட்டிப் படுத்துக்கொண்டு, எதுவுமே செய்யாமல் காலின் கட்டைவிரலையே மூன்றேகால் மாதம் பார்த்துக் கொண்டிருந்தபின் என்னவாகும்? போரடிக்கும். யாரையாவது கடித்துத் தின்றுவிடலாம் போலிருக்கும். ஏன் அப்படி?

மனிதன் அப்படித்தான். நம்முடைய வடிவமைப்பின் அம்சம் அது. நம் டிஎன்ஏ கூறுகளில் அது ப்ரோகிராம் செய்யப்பட்டுள்ளது. பிரச்சினையைத் தீர்ப்பது, புதுப் பிரச்சினையைத் தேடுவது, குழப்பிக் கொள்வது, அதைத் தீர்ப்பது, ஏதாவது கண்டுபிடிப்பது என்பது நம் ‘கூடப் பிறந்த குணம்’.

பிரசசினைகள் இந்தப் பிரபஞ்சத்தின் ஓர் அங்கம். அவை நம்மைத் தார்குச்சியால் குத்துவதைப்போல் குத்திக் குத்தி ஓட்டிக்கொண்டிருக்க, தினந்தோறும் நாம் ஏதாவது கற்றுக்கொண்டே இருக்கிறோம். இல்லையென்றால் இதுவரை மனிதன் கண்டுபிடித்தவை என்பதை ஒரு கைவிரல்களுக்குள் அடக்கிவிடலாம்.

விரல்கள் என்றதும் மனிதன் கண்டுபிடித்த முதலாவது சமையல்கலை கதையொன்று நினைவுக்கு வருகிறது.

ஆதிமனிதன் காடுகளில் கிடைக்கும் பழங்களையும் கிழங்குகளையும், அதற்குத் தொட்டுக் கொள்ள எலி, முயல் போன்ற சிறு பிராணிகளையும் பச்சையாகவே உண்டு காலம் தள்ளியிருக்கிறான்.

ஒருநாள் காட்டில் தீப்பிடித்துக் கொண்டு மரங்கள் நன்றாக கொழுந்துவிட்டு எரிந்திருக்கின்றன. அதில் சில மிருகங்கள் ‘சுட்ட கறி’யாகிவிட்டன. சூடு ஆறாத ஒரு மிருகத்தில் போய் நம்ம ஆதிகால உறவினர் கையை வைக்க, மிருக மாமிசம் கையில் பச்சக்கென்று ஒட்டியிருக்கிறது. சூடு தாங்காமல் ‘ஆ’ என்று கத்தி கைவிரல்களை வாயில் வைக்க ...

கையை எடுத்துவிட்டு ‘ஆகா!’ என்று கத்தியிருக்கிறான். முன்னர் உண்டது போலன்றி இப்பொழுது மாமிசம் தனி ருசி. தீயில் வெந்த ஒரு கிழங்கை எடுத்துக் கடித்துப் பார்க்க ... ‘அடடே! இது புது ருசி!’

இப்படியாக விரல்களின் சூட்டுக்கான பிரச்சினையில் மாமிசங்களையும் கிழங்குகளையும் "சுட்டுத் தின்னும்" சமையல் கலை பிறந்ததென்கிறது ஒரு கதை.

முதலில் தெரியாமல் தவறுகள் செய்வோம்; பிறகு தெரிந்து செய்வோம். பிறகு நமக்கே அலுத்துப்போய்ப் பாடங்களைக் கற்றுக் கொண்டு, கொஞ்சமாய்த் திருந்தி "அடுத்தது என்ன?" என்று தேடுவோம். விரும்பியோ விரும்பாமலோ அனுபவஸ்தனாகி விடுவோம்.

கல்லாகவோ, மரமாகவோ, எருமை மாடாகவோ இருந்தால் பிரச்சினையே இல்லாதிருக்கலாம். ஆனால் யாருக்கு எருமை மாடாக மாற ஆசையிருக்கும்?

தோசைக்கல், மசாலா தோசை சமைத்துத் தராது, வேண்டுமானால் அந்தக் கல்லில் நாம் கல்தோசை சுடலாம்!

மரம் மந்திரியாகாது, லஞ்சம் வாங்காது.

மனிதன் இப்புவியில் வாழவும் முன்னேறவும் அவனுக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டாய இணைப்பு - பிரச்சினை!

அன்பு, பாசம், காதல், மகிழ்வு, சோகம், நடப்பது, காலில் விழுவது, அப்படியே காலை வாருவது போன்ற நம் இயற்கைத் தன்மைகளுடன் பிரச்சினையும் நம் தன்மை. அதாவது, பிரச்சினைகள் மனிதனுக்கு வரம். நம்ப முடியவில்லையா?

கண்ணை மூடிக்கொள்ளுங்கள்; நன்றாக மூச்சை உள்ளிழுத்து நிறுத்தி வெளியிடுங்கள். ஆச்சா? இப்பொழுது கண்ணைத் திறந்து சுற்றுமுற்றும் பாருங்கள். ‘எப்பவுமே லேட்டாய் வந்து தொலையும் பஸ்ஸில்’ ஆரம்பித்து எத்தனைக் கண்டுபிடிப்புகள்? கால் செருப்பில் ஆரம்பித்து, கட்டைவிரல்ரேகை தேய எஸ்எம்எஸ் அனுப்பும் உபகரணம் என்று எத்தனை எத்தனை? எல்லாமே ஏதோ ஒருவனின் பிரச்சினைக்குத் தீர்வாய் முளைத்தவை. அது நல்லதா கெட்டதா, உபயோகமா இல்லையா என்பது இக்கட்டுரையின் பிரச்சினையில்லை. பிரச்சனை! அதை மனிதன் எதிர்கொண்டது; அதற்கொரு நிவாரணம் கண்டுபிடித்தது - அதுதான் இங்குப் பேச்சு.

ஒவ்வொரு பிரச்சினையும் நாம் புதிதாய் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள வைக்கும் ஆசான். நமக்கு அவை சவால்களைச் சமர்ப்பிக்கின்றன. நாம் சமாளிக்கிறோம், கற்கிறோம்; கண்டுபிடிக்கிறோம்.

குழந்தையாய் இருக்கும்போதே இது ஆரம்பித்துவிடுகிறது. எதையாவது பிடித்து இழுப்பது, கடிப்பது, ஆசையாய்த் தூக்கி நம்மைச் செல்லம் கொஞ்சும் மாமா மடியில் ‘உச்சா’ போய்விட்டுச் சிரிப்பது, என்று ஏதாவது சவால் வேண்டும். குழந்தையொன்று அப்படி எதுவுமே செய்யாமல் சப்பாத்திக்குப் பிசைந்து வைத்த மாவைப்போல் அமைதியாய் குந்தியிருந்தால் நிச்சயம் பெற்றோர் ஏகப்பட்ட கவலையுடன் அக்குழந்தையை தூக்கிக் கொண்டு டாக்டரிடம் ஓடுவார்கள்.

சற்று வளர்ந்துவிட்டால், ஆட்டம், ஓட்டம், மரத்திலிருந்து தலை கீழாகத் தொங்குவது என்று வால்தனம். திட்டும் வசவும் விழும் அடியும் - அதையெல்லாம் ஒரு பொருட்டாய்க் கருதாது துடைத்தெறிந்துவிட்டு மறுநாள் மீண்டும் அதே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்!

இப்படி நம்முடைய பால்யப் பருவத்தில் பற்பல சவால்களுடன் வளரும் நாம், பெரியவர்களானதும் பிரச்சினைகளை அதே வீரியத்துடன் எதிர்கொள்ளத் திணருகிறோம்; சில சமயம் பேனையே பெரியவண்டைப்போல் நாமே ஊதிப் பெரிதாக்கி, அதை நினைத்து நம்மையறியாமல் அஞ்சுகிறோம்.

ஆனால் நம் குழந்தைகளிடம் என்ன எதிர்பார்க்கிறோம்?

ஐந்து வயதே நிரம்பிய நம் குழந்தையை டாக்டராக்கிவிட வேண்டும், என்ஜினீயராக்கிவிட வேண்டும் என்று தலையணை அளவு தடிமனான புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு பாடம் சொல்லித் தருகிறோம்! 18 x 18 எவ்வளவு சொல்லு பார்ப்போம் என்று அதட்டல் வேறு. தம் பிள்ளைக்கு ஃபர்ஸ்ட் ராங்க் தவிர வேறு எதுவும சரிவராது என்று 45 மாணவர்கள் உள்ள அந்த வகுப்பின் அத்தனைப் பெற்றோருக்கும் பேராசை.

எப்படி சாத்தியம்?

இப்படி நம் பிள்ளை ஒரு சாதனையாளன்/சாதனைச்செல்வி ஆகியே தீர வேண்டும் என்று அந்தப் பிள்ளையின் சக்திக்கு மீறிய பிரச்சினைகளைப் புகுத்தும் நாம், காபி மிஷினின் பட்டனைத் தட்டினால் கப்பில் கொட்டும் காப்பிபோல் வலிக்காமல் கொள்ளாமல் நம் வாழ்க்கையானது நகர வேண்டும் என்று விரும்புகிறோம்.

பிரச்சினையானது குடும்பத்தில் இருக்கலாம், அலுவலகத்தில் இருக்கலாம். சக ஊழியரிடம், அண்டை வீட்டுக்காரனிடம் இருக்கலாம். பொருளாதாரம், உடல் நலம், டூட்டி முடித்து இரவில் வீடு திரும்பும்போது அழிச்சாட்டியமாய்த் துரத்தும் தெரு நாய் என்று விதவிதமாய், கலர் கலராய் இருக்கலாம். அதையெல்லாம் எப்படி நாம் உள்வாங்கி எதிர்கொள்கிறோம் என்பது நம் அனுபவத்தை நிர்ணயிக்கிறது. அது நம் பக்குவத்தை வளர்க்கிறது.

பக்குவப்பட்டுவிட்ட மனம் மகிழ்வைத் தொலைக்காது!
னம் மகிழ, தொடருவோம்...

No comments: